http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Thursday, July 29, 2010

ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதி ! அண்ணாமலைக்கு அரோகரா !

                                                             ஓம்

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்

 பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
 மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவதிரும் 
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.



அண்ணாமலைக்கு அரோகரா.நினைத்தாலே முக்தி அளிக்க வல்லது அருணாஸ்வராலயம்.
கிரிவலம் தரும் பெரும் நலம்.
வடநாட்டில்  ரிஷிகளுகோரிடம் ரிஷிகேசம். தென்னாட்டில் அன்னவர்கோரிடம் அண்ணாமலையகம்.

நாச்சியார் கோயில் இருக்கும் ஊர் நாச்சியார்கோயில். சூரியனார் கோயில் இருக்கும் ஊரும் சூரியனார்கோயில். சங்கரன் கோயில், பழனி இப்படி அந்தந்த ஊரில் குடிகொண்டிருக்கும் இறைவனின் பெயரைக்கொண்டே ஊரின் பெயரும் அமைவதைத்தான் பார்த்திருக்கின்றோம். மாறாக ஊரின் பெயரால் இறைவன் பெயர் பெறும் தலம் ஒன்றுண்டு. அதுதான் திருவண்ணாமலை. அண்ணாமலை என்னும் மலையருகே இருக்கும் பெருமான் அண்ணாமலையார் என்று அழைக்கப்படும் அதிசயத்தை இந்த ஊரில் பார்க்கிறோம். இந்த அண்ணாமலை என்னும் ஊருக்குத் தனிச் சிறப்பு ஒன்றுண்டு.

உலகிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த மலை அண்ணாமலை என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள -நம்மை வியக்க வைக்கும்- உண்மை. இந்திய விஞ்ஞானக் குழுக்கூட்டத்தில் 1949-ல் டாக்டர் பீர்பால் சஹானி என்ற விஞ்ஞானி இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். நில நடுக்கங்களால் மற்றப் பகுதிகள் பாதிக்கப் படுவதுபோல் தட்சிணப் பீடபூமி பாதிக்கப் படுவதில்லை என்பதற்கும் அண்ணாமலை யின் பழமையே காரணம் என்று கூறப்படுகின்றது. நம்முடைய புராணங்களும் இம்மலையை உலகின் மத்திய பாகமாகக் குறிப்பிடுகின்றது.

அப்பு (நீர்), தேயு (நெருப்பு), வாயு (காற்று), மண் (நிலம்), விண் (ஆகாயம்) ஆகிய வற்றுக்கான பஞ்சபூதத் தலங்கள் முறையே திருவானைக்காவல், திருவண்ணாமலை, காளஹஸ்தி, காஞ்சீபுரம், சிதம்பரம் ஆகியவையாகும். இதில் தேயுத்தலமான திருவண்ணாமலை படைப்புக் காலத்தில் நெருப்பு மண்டலமாக இருந்து பின்னர் குளிர்ந்து கெட்டிப்பட்டு மலையாகியதாகப் புவியியல் விளக்குகிறது.

புராணம் சொல்வது
அருணாசல புராணம் என்னும் நூலில் கூறப்பட்டுள்ள செய்தி பலரும் அறிந்த ஒன்று. தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரமனும் திருமாலும் போட்டியிட நாரதர் குறுக்கிட்டு 'பிறவா யாக்கைப் பெரியோன் சிவபெருமானே பெரியவர்' என்று கலகத்தைப் பெரிதுபடுத்தவே சிவபெருமான் அழல் உருவாகி நின்று தமது அடியையும் முடியையும் முதலில் காண்பவரே பெரியவர் என்று அவர்களைப் போட்டிக்கு அழைத்தார். அன்னப்பறவை உருவில் பிரமன் சிவ பெருமானின் முடியைத் தேடி மேலேமேலே பறந்து சென்று அழலில் சிறகுகள் எரிந்து போய்க் கீழே விழுந்தார். வராக உருவில் (பன்றி) அடியைத் தேடி பூமியைக் கீறிக் கொண்டு சென்ற திருமாலும் தம் தோல்வியை ஒப்புக் கொண்டார். தங்களது ஆணவத்தால் அழலுருவில் நின்ற சிவபெருமானைக் காண இயலாத இவர்களுக்குப் பெருமான் லிங்க உருவில் காட்சி அளித்தார். இவ்வாறு காட்சி அளித்த தலமே திருவண்ணாமலை.

மற்றுமொரு திருவிளையாடலும் இத் தலத்தில் நிகழ்ந்திருக்கின்றது. உமையம்மை விளையாட்டாகச் சிவபெருமான் கண் களைப் பொத்திவிட இதன் விளைவாக உலகமே இருண்டு விடுகிறது. இதற்குப் பரிகாரமாக பார்வதி காஞ்சியில் தவம் இருந்து மீண்டும் சிவபெருமானை அடைந்த வரலாறு அனைவரும் அறிந்த ஒன்று. இத்துடன் சக்தியின்றி சிவனில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் திரு வண்ணாமலையில் பார்வதிதேவி தவம் இயற்றிச் சிவனது அங்கத்தில் பாதியைத் தன்னுடையதாக்கிக் கொண்டதனால் சிவபெருமான் 'மாதொரு பாகன்', 'அர்த்த நாரீஸ்வரன்' என்று அழைக்கப்படக் காரணமாயினள்.

கோயில் அமைப்பு

25 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்து பரந்த மலைப்பரப்பின் அடித்தளத்தில் உண்ணா முலை அம்மை சமேத அண்ணாமலையார் இங்கு கோயில் கொண்டுள்ளார். 9 கோபுரங்களும் 56 திருச்சுற்றுக்களும் கொண்டிருப்பது ஒன்றே தமிழகக் கோயில்கள் வரிசையில் இது ஒரு மிகப் பெரிய கோயிலாக இடம் பெறுவதற்கான பொருத்தத்தை அறியலாம்.

கிழக்கில் உள்ளது பிரதான வாயில். இக்கோபுரத்திற்கு தனிப்பெருமை ஒன்றுண்டு. சோழமன்னன் முதலாம் இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுரத்தின் உயரம் 215 அடி. இராஜ ராஜனுக்கும் அவனுக்குப் பின்னால் வந்த சோழப் பேரரசர்களுக்கும் அவர்கள் எழுப்பிய கோயில்களின் நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளின் கலைத்திறனால் கிடைத்த பேரும் புகழும் பார்த்து, பிற் காலத்தில் தமிழகத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் தானும் அது போன்ற பெருமையை அடைய விரும்பினார். எனவே புதிய கோபுரங்கள், கல்யாண மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபம் என்று வேறு வகையில் புதுமையான கலைப் படைப்புக்களை உருவாக்கினார். அதன் விளைவாகத் திருவண்ணாமலை இராஜ கோபுரத்தைத் தஞ்சைக் கோயிலை விட ஓர் அடி அதிகமாக 216 அடி உயரமாக்கினார்.

கிழக்குக் கோபுரத்தின் ஆயிரங்கால் மண்டபத்தை யாரும் மறந்து விட முடியாது. வீட்டைத் துறந்து வெளியேறிய உலகப் புகழ் ரமண மஹரிஷி இக் கோபுரத்தின் மத்தியில் அமைந்த பாதாள லிங்கத்தின் சன்னதியைத் தான் புகலிடமாகக் கொண்டு அன்ன ஆகாரமின்றி நாள் கணக்கில் நிட்டையில் இருந்தார். வெளியுலக உணர்வின்றி இருந்த இவரைச் சில அன்பர்கள் வெளிக் கொணர்ந்து, புழு பூச்சிகள் குதறியதால் இரத்தம் கசிந்திருந்த இவரது புண்களுக்குச் சிகிச்சை அளித்தனர். இதன்பின் நீண்ட காலம் பூட்டியே வைக்கப்பட்டிருந்த இந்தச் சன்னதி பிற்காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜகோபாலாச்சாரியார் முயற்சியால் செப்பனிடப்பட்டு சன்னிதி திறக்கப்பட்டது.

தெற்குக் கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்று பெயர். ஊர் மக்களிடமிருந்து நன்கொடை வசூலித்து வடக்குக் கோபுரத்தைக் கட்டி முடித்த அம்மணியம்மாள் பெயராலேயே அக்கோபுரம் அழைக்கப்படுகின்றது.

நந்தி மண்டபம்
சிவகங்கைக் குளத்தின் வடக்கே நந்தி மண்டபம் ஒன்று இருக்கிறது. சிறந்த சிவபக்தரான போசலமன்னர் பரம்பரை யைச் சேர்ந்த வல்லாள மகாராசனால் 6 அடி நீளமுள்ள நந்தி சிலை செதுக்கப்பட்டு இந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. நந்தி சிலை வைக்கப்பட்டுள்ளதாலேயே இது நந்தி மண்டபம் என்று அழைக்கப்பட்டது. தில்லைப் பெருமானிடம் கொண்டிருந்த நந்தனாரின் சிவபக்திக்கு இணையானது இம்மன்னனது சிவபக்தி என்று கூறலாம். இந்த மண்டபத்தின் தூண்களில் இம் மன்னன் மற்றும் ராணியின் உருவங்களும் போசல வம்சத்துக் கொடியான மிருகமும் பறவையும் இணைந்த 'கண்டபேரண்டம்' என்ற விலங்கின் உருவம் எழுதிய கொடியும் செதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் வம்சத்தின் தலைநகரான துவாரசமுத்திரத்தை விட்டு, தன் வாழ்நாளின் கடைசி 15 ஆண்டுகளை இம்மன்னன் திருவண்ணாமலையிலேயே கழித்தான். அத்துடன் தன் தலைநகரமாகத் திருவண்ணாமலையைக் கொண்டு அதன் பெயரையும் அருண சமுத்திரம் என்று மாற்றினான் என்பதற்கான கல்வெட்டுக் குறிப்பு இங்கு காணப்படுகின்றது. இன்று திருவண்ணாமலை செல்லும் இரயில் பாதையில் இம்மன்னனது அரண்மனை இடிபாடுகளுடன் காணப்படுகின்றது. இதில் வேடிக்கையான செய்தி ஒன்று கூறப் படுகிறது. மன்னன் இறந்து போன நாளில் மாசி மாதத்தில் அவன் இறப்பு பற்றிய செய்தி இறைவன் முன் படிக்கப்பட்டு கோயில் மூர்த்திகள் பள்ளிகொண்டாபட்டு என்ற ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இம் மன்னனுக்குத் திதி கொடுக்கப்படுகிறது. ஆண்டவனே திதி கொடுப்பதாக இவர்கள் கூறி இன்றும் இவ்விழா ஆண்டு தோறும் நடைபெறுகின்றது.

வல்லாள கோபுரம்

மேற்கூறிய வல்லாள மன்னனால் மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்ட கோபுரம் இது. இங்கு 2 1/2 அடி உயரத்தில் வயது முதிர்ந்த தோற்றத்தில் இம்மன்னனது உருவம் சிலையாக வடிக்கப் பட்டுள்ளது. இக் கோயிலில் காணப்படும் சாசனங்களைக் கொண்டு தமிழகத்தின் 8-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு வரையிலான சோழப் பேரரசர்களின் பங்கும் பின்னால் 13 முதல் 16-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் போசல மன்னர்கள், நாயக்க மன்னர்கள், விசயநகரப் பேரரசர்கள்-குறிப்பாக கிருஷ்ணதேவராயர்-ஆகியோரின் காலங்களில் கோபுரங்கள், திருச்சுற்றுக்கள், மண்டபங்கள், சித்திர வேலைப்பாடுகள், ஓவியங்கள் என்று மிகப்பெரிய அளவில் இக்கோயில் வளர்ச்சி அடைந்திருப்பது தெரிகிறது. அத்தோடு 400 ஆண்டுகாலத் தமிழக வரலாறும் இச்சாசனங்களைக் கொண்டு அறியலாம்.

கிளிக்கோபுரம்

ஆறு நிலைகளைக் கொண்டு அற்புதமாக உயர்ந்து காணப்படும் இந்த கோபுரத்திற்குத் தனிச் சிறப்புண்டு. அருணகிரியாருக்கு முருகன் காட்சி அளித்த இடம் இது. இக் கோபுரத்தை அடுத்து ஒரு பெரிய மண்டபம் காணப்படுகின்றது. ஆண்டு தோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்தின் போது மலைமீது ஏற்றப்படும் கார்த்திகை தீப தரிசனத்தைக் காணச்செய்யக் கோயிலின் உற்சவமூர்த்திகளை இம்மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்கிறார்கள். அருணாசலேச்வரர் அர்த்தநாரீசுவரராகக் காட்சி அளிப்பதும் இங்குதான்.

கம்பத்து இளையனார் சன்னதி
சம்பந்தாண்டான் என்ற சக்தி வழிபாடு செய்யும் ஒரு பக்தன் பிரபுடதேவராயன் என்ற மன்னனுக்கு மிகவும் வேண்டப் பட்டவன். அவன் அருணகிரியாரை அழைத்து, "மன்னன் காண்பதற்கு முருகனை வரவழைத்துக் காட்ட முடியுமா?" என்று சூளுரைக்க, அருணகிரியாரும் முருகனிடம் வேண்ட முருகன் அவருக்காக அங்கிருக்கும் ஒரு கம்பத்திலிருந்து வெளித்தோன்றி அவர்களுக்குக் காட்சி அளித்தது இவ் விடத்தில்தான் என்று கூறப்படுகிறது. சம்பந்தாண்டான் மற்றும் பிரபுடதேவராயன் தரிசித்த முருகன் உருவம் இம்மண்டபத்து வடகிழக்குத்தூணில் சிறிய அளவில் செதுக்கப்பட்டுள்ளது. சிவகங்கைக் குளத்துக்கு அருகில் இம்மண்டபம் உள்ளது.

கருவறை
கோயிலின் மூலவரான அண்ணாமலையார் லிங்கத் திருமேனியில் இங்கு காட்சி தருகிறார். பொதுவாகக் கோயில்களில் விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்யும் போது அஷ்டபந்தனம் செய்வது வழக்கம். ஆனால் இக்கோயிலில் தங்கத்தைக் கொண்டு சொர்ணபந்தனம் செய்யப் பட்டுள்ளது.

விழாக்கள்
எல்லாக் கோயில்களிலும் பொதுவாக நடைபெறும் அத்தனை விழாக்களும் இங்கும் நடைபெறுகின்றன என்றாலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று 13 நாட்கள் நடைபெறும் கார்த்திகைப் பெரு விழா. சோதிவழிபாடு, தீபவழிபாடு என்ற பெயர்களில் சங்க காலந்தொட்டே இருந்து வந்திருக்கும் இவ்வழிபாடு பற்றிய குறிப்பு தமிழ் இலக்கியங்களில் பரவலாகக் காணலாம். 'தீப மங்கள ஜோதி நமோநம' என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.

அனல் பிழம்பாயிருந்து தோன்றிய திருவண்ணாமலை தேயுத் தலம் என்பதால் இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. நகரத்தார் முயற்சியால் 19-ம் நூற்றாண்டில் இக்கோயிலுக்கு இலட்சக் கணக்கான ரூபாய் பொருட்செலவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நம்முடைய காலத்தில் வாழ்ந்து இத் தலத்துக்குப் பெருமை சேர்த்த இருவரைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர்கள் ரமண மஹரிஷியும் சேஷாத்ரி சுவாமிகளும் ஆவர். முன்னவர் ஞானி, பின்னவர் சித்தர். மிகவும் சுவை நிரம்பிய அவர்களின் வாழ்க்கை வரலாறுகளைத் தனியாக விரித்துச் சொல்வதுதான் பொருத்தம்.

மஹாபாரத காலத்திலேயே திருவண்ணா மலை பற்றிய குறிப்பு இலக்கியத்தில் காணப்படுவது இம்மலையின் தொன்மைக் குச் சான்று பகர்கின்றது. வில்லிபுத்தூரார் பாரதத்தில் அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை செல்லும்போது

பெற்றாள் சகத் தண்டங்கள் அனைத்தும் அவைபெற்றும்
முற்றாமுகிழ் முலையாளொடு முக்கண்ணர் விரும்பும்
பற்றாமென மிக்கோரிகழ் பற்றொன்றினும் உண்மை
கற்றார்தொழும் அருணாசலம் அன்போடுகை தொழுதான்

என்று காணப்படும் பாடலில் அர்ச்சுனன் திருவண்ணாமலை அருணாசலேசுவரரைத் தொழுதான் என்ற செய்தியின் மூலம் இக்கோயிலின் தொன்மை விளங்குகின்றது. நினைத்தாலே முக்தி தரும் தலம் என்னும் பெருமை உடையது திருவண்ணாமலை.



சிவனின் பஞ்சபூத தலங்களில், திருவண்ணாமலை அக்னி தலமாகும். மற்றபிற தலங்களில் சிதம்பரம்ஆகாயத்தையும், காளகஸ்தி காற்றையும், திருவானைக்கோவில் நீரையும், காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர்நிலத்தையும் குறிக்கும் தலங்கள் ஆகும்.


திருவண்ணாமலையில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கும். இதுதவிர ஓரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில், தமிழ் மாதமாம் கார்த்திகை-யில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானாதாகும். இது ஆங்கில மாதம் நவம்பர் (November) அல்லது டிசம்பர் (December) மாதம் வரும்.


இத்திருவிழா, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழாஆகும். இந்த பத்தாம் நாளன்று, காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏற்றப்படும்.[1] இந்த தீபமானது தொடர்ந்த்து பதினோறு நாட்கள் எரியக்கூடியது.


இத்திருவிழா மட்டுமின்றி, ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இதுகிரிவலம் என அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்புஅணியாமல் சுற்றி வருவர்.


இங்கு பல சித்தர்களும் வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர்/வாழ்கின்றனர். பகவான் இரமண மகரிஷி அவர்கள், தன் இன்னுயிர் நீங்கும் வரை (1950) திருவண்ணாமலையில் வாழ்ந்தார்.


பிருங்கி முனிவர் சக்தியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையைப் பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணைய தவமிருந்தாள். அவளுக்குக் காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்ததநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார். பிருங்கி உண்மையை உணர்ந்தார். இந்நிகழ்வு ஒரு சிவராத்திரி நாளில் நிகழ்ந்தது. இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை. பிரம்மாவும், விஷ்ணுவும் நெருப்பாக நின்ற சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற தலம் இது. அந்த நெருப்பே மலையாக மாறியது. அதுவே கோயிலின் பின்னணியிலுள்ள திருவண்ணாமலையாகும்.




சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’ தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர்.


மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை.


பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கும் போது சுவாமி அவ்வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம். ஆனால், சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். சிவன் சன்னதிக்கு பின்புறம், பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி இருக்கிறது. இவர் அருகில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் இருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில், இவரது சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜிக்கின்றனர். அதன்பின்பு, அத்தீபத்தை பெருமாளாகக் கருதி, பிரகாரத்திலுள்ள ‘வைகுண்ட வாசல்’ வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.


ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது தெரிந்த விஷயம். ஆனால், இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்தபோது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும். இவரைத் தவிர யானை திறைகொண்ட விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார்.


மாட்டுப் பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்வர். அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார்.


கோயில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும். முழுமுதற்கடவுள் என்பதால் இவரை வணங்கிவிட்டு சன்னதிக்குள் செல்வர். ஆனால், இங்கு முருகன் சன்னதி இருக்கிறது. பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள். சம்பந்தாண்டான் என்னும் புலவன் அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி, அவரது பக்தியை இகழ்ந்தான். அருணகிரியார் முருகனை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார். இதனால், இவர் ‘கம்பத்திளையனார்’ (கம்பம் - தூண், இளையனார்-முருகன்) என்று பெயர் பெற்றார். இச்சன்னதிக்கு பின்புறம் மண்டபம் இருக்கிறது. இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார் என்று பெயரிலும் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாகர் வணங்கியபடி இருக்கிறார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்போது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இவர். இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம்.


இக்கோயிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.


பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டிருப்பார். இதை உணர்த்தும்விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.


மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டானபோது இக்கோயிலில் உள்ள பாதாளத்துக்கு சென்றார். அங்கு ஒரு புற்று இருந்தது. புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்துவிட்டார். பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார். இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், பாதாள லிங்கம் இருக்கிறது. கிரிவலப் பாதையில் மலைக்கு பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோயிலில் அருளுகிறார். இவ்விரு லிங்க தரிசனமும் விசேஷமானது. மரண பயம் நீங்க இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.


அருணகிரியார் மீது பகை கொண்ட சம்பந்தாண்டான் என்ற புலவன், அவரை தேவலோகத்திலுள்ள பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி மன்னன் மூலம் பணிந்தான். அதன்படி தனது பூதவுடலை இக்கோயில கோபுரத்தில் கிடத்திய அருணகிரியார், கிளியின் வடிவில் தேவலோகம் சென்றார். இவ்வேளையில் சம்பந்தாண்டான், அவரது உடலை எரித்துவிட்டான். எனவே, வருத்தமடைந்த அருணகிரியாரை, அம்பிகை தனது கரத்தில் ஏந்தி அருள் செய்தான். கிளியாக வந்த அருணகிரியார், இங்குள்ள கோபுரத்தில் காட்சி தருகிறார். ‘கிளி கோபுரம்’ என்றே இதற்கு பெயர். அண்ணாமலையார் சன்னதிக்கு பின்புறமுள்ள பிரகாரத்தில், அருணகிரிநாதர், இரு கால்களையும் மடக்கி யோக நிலையில் காட்சி தருகிறார். இவரை ‘அருணகிரி யோகேசர்’ என்கிறார்கள்.


திறக்கும் நேரம்
காலை 5-12.30 மணி, மாலை 3.30-இரவு 9.30 மணி
போன் : 04175-252 438































































திருவண்ணாமலை தீபம்



தீப வெண்பா.
            "கங்கை அணி தீபம் கற்பூரத் தீபமலை
     மங்கையொரு பங்கில் வளர்தீபம் - பங்கயன்பால்
     விண்பாரு தேடும் வண்ணம் மேவிய அண்ணாமலையில்
     பண்பாரும் கார்த்திகை தீபம்.

   இப்பாடல்உமையம்மை சிவனின் இடப்பாகம் பெற்றதையும்பிரம்மாவும்,
   திருமாலும் அடிமுடி தேடிய  நிகழ்வையும் கோடிட்டுக் காட்டியுள்ளார் புலவர்!

கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று சந்திரன் கிருத்திகை நட்சத்திரத்திலிருக்கும் போது கார்த்திகை விழா கொண்டாடப்படுகிறது. பஞ்சபூதங்களான நிலம், நீர், தீ, காற்று, வானம் இவைகளால் ஆனதே பிரபஞ்சம். அவற்றுள் நெருப்பை வழிபடுவதுதான் தீபத் திருவிழா.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது இக்கார்த்திகை மாதத்தில்தான். தீபத் திருவிழா என்றதுமே நம் நினைவில் வந்து நிற்பது திருவண்ணாமலை திருத்தலம்தான். திருவண்ணாமலை கார்த்திகை தீபம் தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப் பெரிய உற்சவங்களில் ஒன்று. இவ்விழா பதினேழு நாட்களுக்கு பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தின்போது முறையே முதல் மூன்று நாட்கள் எல்லைப் பிடாரி, துர்க்கை, விநாயகர் ஆகியவர்களுக்கான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
மேலும் இந்த மூன்று நாட்களில் ஐயனார், சப்தமாதர்கள் எல்லைத் தேவதைகள் ஆகியவர்களுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

பின்னர் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கும் இவ்விழா 10 நாட்களுக்குச் சிறப்பாக நடைபெறும். இந்த 10 நாட்களும் விதவிதமான அலங்காரங்களுடனும், மேளம், நாதஸ்வரம், துந்துபி போன்ற இன்னிசைக் கருவிகள் முழங்கவும் சைவத் திருமறைப் பாடல்கள் ஒலிக்கவும் வெவ்வேறு வாகனங்களில் அண்ணாமலையார் வலம் வருவார்.
ஜோதி வடிவில் பெருமாள் :
காஞ்சிபுரம், திருத்தண்கா (தூப்புல்) என்ற திவ்ய தேசத்தில் சேவை சாதிக்கின்றவர் தீபப் பிரகாசர் - விளக்கொளிப் பெருமாள்.
ஒரு முறை சரஸ்வதிக்குத் தெரியாமல் பிரமன் யாகம் நடத்தினான். இதை அறிந்த சரஸ்வதி, மாயநலன் என்ற அரக்கனின் துணையுடன் அந்த யாகத்தை அழிக்க முயன்றாள்.
மாயநலன், யாகத்தை அழிக்க உலகம் முழுவதையும் இருட்டாக்கினான். பிரமன் திருமாலின் துணையை வேண்டினான். திருமாலும் ஒரு பேரொளியாகத் தோன்றினார். இருளை அகற்றினார். எனவே, திருமாலுக்குத் தீபப் பிரகாசர் என்ற பெயர் தோன்றிற்று. இப்படி ஜோதி வடிவில் தோன்றிய பெருமாளை தீப உருவில் வைணவர்கள் வணங்குவர்.
அண்ணாமலையார் எழுந்தருளும் வாகனங்கள் :
முதல் நாள் -------- அதிகார நந்தி
இரண்டாம் நாள் ---- வெள்ளி இந்திர விமானம்
மூன்றாம் நாள் ----- சிம்ம வாகனம்
நான்காம் நாள் ----- கற்பக விருட்சம்
ஐந்தாம் நாள் ------ வெள்ளி ரிஷப வாகனம்
ஆறாம் நாள் ------ வெள்ளிரதம்
ஏழாம் நாள் ------- மகாரதம் (மரத்தேர்)
எட்டாம் நாள் ------ குதிரை வாகனம்
ஒன்பதாம் நாள் ---- கைலாச வாகனம்
பத்தாம் நாள் ------ தங்க ரிஷபம்
முக்கிய விழாவான தீபத் திருநாள் பத்தாம் நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் நான்கு மணிக்கே திருவண்ணாமலைக் கோயிலில் பரணி தீப தரிசனம் காட்டப்படும். அண்ணாமலையின் திருச்சன்னதியில் தீபம் ஏற்றப்பட்டு, அந்த தீபம் கோயிலிலுள்ள பிற தேவதைகளின் சன்னதிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அந்தச் சன்னதிகளில் ஏற்றப்படும். பின்னர் அந்த எல்லா தீபங்களும் மீண்டும் ஒன்று சேர்க்கப்படும். "ஒரே பரம்பொருள் பலவாய்த் தோன்றி மீண்டும் ஒன்றாகிறது" எனும் தத்துவத்தை இந்நிகழ்ச்சி விளக்குகிறது.

இந்த பரணி தீபத்திலிருந்து தீப்பந்தம் ஏற்றப்பட்டு, பிறகு அதுமுறையான பூஜைக்குப் பின் மலையுச்சிக்கு எடுத்துச் செல்லப்படும். மலையின் மீது ஏறிச் செல்வதற்குச் சரியான பாதை இல்லை என்றாலும் தீபத்துக்குத் தேவையான பொருட்கள் குறிப்பிட்டவர்களால் மலையுச்சிக்கு எடுத்துச் செல்லப்படும்.
மலையுச்சியில் பகல் 2 மணி முதல் தீபம் ஏற்றுவதற்கான ஆரம்ப வேலைகள் துவங்கி விடும். முதலில் கொப்பரை நிறுத்தப்பட்டு அதில் துணித்திரி, நெய், கற்பூரம் ஆகியவை இட்டு நிரப்பப்படும். அன்று மாலை 6 மணிக்கு தீப தரிசன மண்டபத்தில் அண்ணாமலையாருக்கு தீப ஆரத்தி காட்டி, அதை உயரத் தூக்கிப் பிடிப்பார்கள். அந்த தீபத்தைக் கண்டதும் மலையுச்சியில் தீபம் ஏற்றுவார்கள். மலையின் மேல் தீப தரிசன ஜோதியைக் கண்டதும் கோயிலுக்குள் தீப தரிசன மண்டபத்துக்கு எதிரில் அர்த்தநாரீஸ்வரர் வலம் வருவார். இக்கோயிலிலுள்ள அர்த்தநாரீஸ்வரர் இந்த ஒருநாள் மட்டுமே வெளியே வருகிறார்.
மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், "அண்ணாமலையானுக்கு அரோகரா" என விண்ணதிர முழக்கமிடுவார்கள். "இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உள்முகத்தால் அத்வைத ஆன்ம ஜோதியைக் காண்பதுதான் இந்த தீப தரிசனம் ஆகும்" என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார்.
தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம். தீப தரிசனத்துக்குப் பின்பு அண்ணாமலையார் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வருவார்.
பதிமூன்றாம் நாள் அண்ணாமலையார் தெப்போற்சவம் நடைபெறும். பதினான்காம் நாள் அண்ணாமலையார் கிரிவலம் செய்வார். பின்னர் பதினைந்தாம், பதினாறாம் நாட்களில் முறையே அம்பிகைக்கும் முருகனுக்கும் தெப்போற்சவம் நடைபெறும்.
கடைசி நாளான பதினேழாம் நாள் சண்டிகேசுவரர் உற்சவத்துடன் கார்த்திகை தீப விழா நிறைவு பெறுகிறது.


 















.

.



















சோதிப்பிழம்பின் அனலைத் தாங்க முடியாத தேவர்கள் வேண்டிக்கொண்டதற் கிணங்க மலையாக இறுகிவிட்ட அந்தத் தோற்றமே திருவண்ணாமலை. இதைத்தான் மாணிக்கவாசகரும் 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி' என்று திருவெம்பாவையில் குறிப்பிட்டுள்ளார். திருமூலர் இயற்றிய 'திருமந்திரம்' அடி முடி தேடிய படலம் என்ற தலைப்பில் 9 பாடல்களில் இது பற்றிக் குறிப்பிடுகின்றது. இந்தப் புராணக்கதையைப் பின் பற்றி மேற்கு கோபுரத்தின் தெற்கில் 'தூல சூட்சும லிங்கம்' வீற்றிருக்கும் சன்னதி ஒன்றுள்ளது. இந்த லிங்கத்தின் மேலே அன்ன வடிவமும் கீழே வராக வடிவமும் செதுக்கப்பட்டுள்ளன. நடுவில் ரிஷப வாகனத்தில் உமையுடன் சிவபெருமான் காட்சி அளிக்கின்றார். விஞ்ஞான அடிப்படையில் பார்க்கும்போது அண்ணாமலை முன்பு அனல் பிழம்பாய் அடி முடி தெரியாமல் இருந்து பின்னர் காலத்தால் குளிர்ந்து மலையாய் இறுகி விட்டதாக அறிகிறோம். இவ்வாறு தட்சிணப் பீடபூமியின் பழமையை அறிய முடிகிறது.



* அண்ணாமலையில் வாழ்ந்து முக்தி பெற்ற மகான்கள்

            '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
         குகை நமச்சிவாய தேவர்                                   
        குகை நமச்சிவாய சுவாமிகள்                               
        அருணகிரி நாதர்                                         
        திருவண்ணாமலை ஆதின முதல் குருமூர்த்தி                 
        தேசிகப் பரமாசாரிய சுவாமி                               
        பாணி பத்திர சுவாமி                                  
        அன்னை மங்கையர்க்கரசியார்                         
        சோணாசல் தேவர்                               
        ஞானப்பிரகாச
        வீர வைராக்கிய மூர்த்தி சுவாமி                   
        அப்பைய தீட்சிதர்
        ஆதி சிவப்பிரகாசர்
        ஞானியாரடிகள்
        தட்சிணாமூர்த்தி சுவாமி
        குமாரசாமி பண்டாரம்
        அழியாவிரதம் கொண்ட தம்பிரான்
        ஈசானிய ஞான தேசிகர்
        சற்குரு சுவாமி
        பழனி சுவாமி
        அருள்மொழி அம்மணி அம்மாள்
        வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி
        காரியானூர் நடேச சுவாமி
        அங்கப்பிரதட்சணம் அண்ணாமலி சுவாமி
        திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமி
        சிவா சுவாமி
        பத்திராசல சுவாமி
        சேஷாத்திரி சுவாமி
        ரமண முனிவர்
        சடைச்சி அம்மாள்
        அழகானந்த அடிகளார்
        இரை சுவாமி
        இசக்கி சுவாமி   
        சோணசால பாரதியார்   
        யோகி ராம்சுரத் குமார் [விசிறி சாமியார்]
                          ======================
click here
https://mail-attachment.googleusercontent.com/attachment?ui=2&ik=f708b47655&view=att&th=13420f873223428b&attid=0.1&disp=safe&realattid=f_gvynsjju0&zw&saduie=AG9B_P9uUij5ubyBapi-VoomBzUq&sadet=1323409630763&sads=Moi6fWtbQVYwIsKVyxayRL9Nv-E



திருவண்ணாமாலை தீபம்
 
வெட்டவெளி சிவமாகும் சிதம்பரத்தில்!
வேகவளி மயமாகும் காளஹஸ்தி!
நெட்டஒளி வடிவாகும் அண்ணாமலை!
நீர்வடிவில் ஆனைக்கா அண்ணல்நிலை!
தொட்டநில மண்ணாகத் தூயகாஞ்சி!
தோன்றுகிற துரீயமே ஐந்துபூதம்!
எட்டறிய முடியாத ஏகநாதா!
எழுந்தனையோ பெருந்தீபம் இந்தநாளில்!
 
தானழியத் தனையறியும் ரமணதேவன்
தருமம்வளர் சேஷாத்திரி சித்தரோடு
ஆனபல மாமுனிகள் ஆள்வரிங்கே!
அகண்டதிரு அண்ணா மலையில்தீபம்!
வானளக்க அடியளக்க முயல்வதேது!
வகையேதுஅயனரியும் வணங்கும்போது!
மோனசிவ ஞானமிதே மூண்டசெந்தீ!
முழுதுணர ஏற்றியதே கார்த்திகை தீபம்!
 
கார்த்திகைப் பெருவிழா
ஐந்துமுகத் தோடுஅதோ  முகமும் ஏற்ற
அறுமுகத்து சிவபரத்தின் விழித்தீ ஊற்று
பெய்தபெரு நெருப்பினிலே பிரளய மாகப்
பிறந்தஉரு  ஆறுமுகப் பிரம்ம மாக
கைதவழச் சரவணத்துக் கந்த வேளைக்
கார்த்திகைப் பெண்களே  சுமந்த மாலை
மெய்யுருகக் காணுகிறோம் தீபம் ஏற்றி!
மேலோனே வேலோனே மீட்க வாராய்!
  poem written by London THF M Rajagopalan.




      "புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியாவுன்னடி
      யென்மனத்தேவழுவா திருக்க வரந்தர
      வேண்டும்"

                             ***  சிவாய நம ***