http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Sunday, October 10, 2010

காந்திமதி நெல்லையப்பர் கோவில்


மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே


நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்

நமச்சி வாயவே நானறி விச்சையும்

நமச்சி வாயவே நாநவின் றேத்துமே

நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.



வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்

தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்

சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே

வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.

நமச்சிவாய வாழ்க!
நாதன் தந்தாள் வாழ்க!!

                                              ஓம்நமச்சிவாய

                                                               ******



https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ZvAtNTQItHg

’தாருகாவனத்து வாழுந் தாபர் முன்னோர் காலஞ் சேருமெய்த் 
 தருமந்தானே தெய்வமென்றிருந்தேன் கோனைக் கோரமாய்
 நிந்தை செய்த கொடியதோர் பாவந் தீர வாரமாய் தொழுது
 போற்றி மகிழ திருமூல லிங்கம்''
 
-என்கிறது திருநெல்வேலித் தல புராணம்.



காந்திமதி நெல்லையப்பர் கோவில் 

தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சிவசபைகளில் இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப் பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப் பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும் அதில் நடைபெறும் சுவாமி அம்பாள் திருகல்யாணமும் கண்கொள்ளாக் காட்சியாகும்.
[1.jpg] 


தமிழகத்தின் தென்பகுதியில் மிகமுக்கியமான இடங்களில் ஒன்று திருநெல்வேலி. திருநெல்வேலி ஜங்சனிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில். இத்திருத்தலத்திற்கு செல்வதற்கும், திருநெல்வேலிக்கும் பேருந்துகள் நிறைய உள்ளன.
இக்கோயிலில் நெல்லையப்பர் என்கிற பெயரில் மூலவரும், காந்திமதி என்கிற பெயர் அம்பாளும் வீற்றிருக்கின்றனர். புராணகாலத்தில் இவ்வூர் வேணுவனம் என்றே அழைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக விளங்கினவராக திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பெற்ற நெல்லை சன்னதி முன் உலரப் போட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது.
குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில் நெல் நனைந்து விடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு அசந்தார்.
மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சர்யப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காணவிரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் அசந்தார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். அதுபோல் அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி எனவும் மாற்றியமைத்தார்.
நெல்வேலி தற்போது திருநெல்வேலியாக மாறி எல்லோராலும் திருநெல்வேலியாக அழைக்கப்படுகிறது. இப்படிப் புகழ் பெற்ற இத்திருத்தலத்தில் உள்ள இறைவன் சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இறைவனை போல் இத்தலத்தில் உள்ள அம்பாளம் வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். அதுபோல் விநாயகர் பொல்லாப் பிள்ளையார் என்றும், முருகன் ஆறுமுகப் பெருமான் என்றும் அழைக்கப்படுகிறார்.
திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற புகழ்மிக்க தலமாக விளங்குகிறது இத்தலம். அதுபோல் அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்திலும், சொக்கநாபிள்ளைாயல் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது. சுமார் 32 தீர்த்தங்கள் கொண்டது இத்திருத்தலம் என்பதும் முக்கியமான விஷயம்.
சிவதலங்களிலேயே நெல்லுக்கு வேலி இட்டு காத்த பெருமான் எழுந்தருளியுள்ள முக்கியதலமாக விளங்கிறது இத்திருத்தலம். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது.
இத்திருத்தலத்தில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் ஏராளமான புராண, இதிகாச கதைகளை கொண்டு விளங்குவதாகும். இக்கோயில் சுற்றுப்பிரகார மண்டபங்கள் உயர்ந்து பருத்த கற்றூண்களால் தாங்கப்பட்டு உள்ளது.
சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று என்பது சிறப்பாகும்.
இக்கோயிலுக்கு வந்து வணங்குவோர்க்கு மனஅமைதியும் நல்வாழ்வும் உண்டாகும் என்பது ஜதீகம். இங்கு குடிகொண்டிருக்கும் காந்திமதி அம்பாள் மிகவும் சிறப்புமிக்கவும் என்று சொல்லப்படுகிறது. மதுரை மீனாட்சிக்கு சமமான சிறப்பு பெற்று விளங்கும் காந்திமதி அம்பாளை வணங்குவோர்க்கு அவர்கள் வாழ்வின் கஷ்டங்கள் நீங்கி நல்ல வாழ்வும், செல்வசெழிப்பும் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.
பக்தர்கள் தங்கள் காணிக்கையாக பால், தயிர், இளநீர், எண்ணெய் மற்றும் இறைவனுக்கு அபிஷேகம் போன்றவைகளை செய்கின்றனர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்து வரும் பக்தர்களுக்கு வழங்கி தங்கள் நேர்த்திக் கடனை நிறையப் பேர் நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
ஆனிபெருந்திருவிழா தேரோட்டம் 10 நாட்களுக்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது இத்திருத்தலத்தில். மேலும் ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா என்று நிறைய திருவிழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகிறது. இக்கோவில் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர்.
திருவிழாக் காலங்கள் மட்டுமல்லாமல் இதர நாட்களிலும் நிறைய பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து நெல்லையப்பரை தரிசித்து செல்கின்றனர். தங்கள் பிரார்த்தனைகளுக்கான நேர்த்திக் கடனையும் செய்கின்றனர்.
கோயிலின் மூலக்கதை:-
முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.
அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.
கோயிலின் அமைப்பு:-
கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி படுத்திருக்கும். அதற்கு மேல் ஒரு துணித்திரை படுக்கை வாக்கில் கட்டப்பட்டிருக்கும். நந்நியின் கொம்பு வளர்ந்து அந்தத் திரையைத் தொட்டு விட்டால் உலகம் அழிந்து விடும் என்று ரொம்ப நாள் நம்பிக் கொண்டிருந்தோம்.
கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவரைக் காணலாம். அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் வீற்றிருப்பார். சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் அமைந்திருக்கும். கோவிந்தப் பெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.
மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. 3 யானைகள் சேர்ந்து நடந்தாலும் மீதம் இடம் இருக்கும். இப்பிரகாரத்திலிருந்து தான் அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்லலாம். இந்த மண்டபம், அதனைச் சுற்றியுள்ள தோப்பு ஆகிய இடம் மட்டும் சென்னையில் இருந்திருந்தால், 4 கோயில்கள் கட்டியிருப்பார்கள். இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் மிகப் பெரிய உள் தெப்பம் இங்குதான் உள்ளது. வெளித்தெப்பம் ஒன்று கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தள்ளியுள்ளது. தெப்பத்திருவிழாவும் பிரசித்தி பெற்றது.
அம்மனுக்கு வெள்ளிக்கிழமைகளில் “தங்கப்பாவாடை” சார்த்தப்படுகிறது. அங்குள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும். கார்த்திகை மாதம் திங்கட்கிழமை தோறும் பெண்கள் மாவிளக்கு எடுப்பது மிக விசேஷம்.
மீண்டும் அம்மா மண்டபம் வழியாகத் திரும்பி வந்தால், மூன்றாவது பிரகாரத்தை அடையலாம். இல்லையெனில் அம்மன் சந்நிதியிலிலிருந்து அப்படியே வெளியேறலாம். மூன்றாவது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சந்நிதி உள்ளது. ஆறுமுகமாய், மயில் வாகனனாய், வள்ளி தெய்வானையுடன் சந்தனக்காப்பில் நின்றவாக்கில் இருப்பார். அங்கும் மிகப் பெரிய மண்டபம் உள்ளது. இங்கும் விளக்குப் பூஜைகள் நடைபெறும்.
அதையடுத்து மேற்கு வாசலைப் பார்த்து அமர்ந்திருக்கிற விநாயகரும், மேற்குவாசலும் வரும். அடுத்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற திறந்தவெளியரங்கம் ஒன்று உள்ளது. அதன் அருகில் யானை இருக்கும்.
அதன்பின் நவக்கிரகங்கள். புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று பக்தர்கள் எள்விளக்கு ஏற்றிப்போட அகண்ட கிழி இருக்கும்.
























































அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி*

*விஷ்ணு தன் மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தரும் தலம் , பஞ்ச சபைகளில் இத்தலம் தாமிர சபை , அம்மனின் காந்தி சக்தி பீடம் , அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கும் மிக சிறப்பு வாய்ந்த சிவஸ்தலம்..*

*அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி*

மூலவர் : *நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்த நாதர் )*

அம்மன்/தாயார் : *காந்திமதி, வடிவுடையம்மை*

தல விருட்சம் : *மூங்கில்*

தீர்த்தம் : *பொற்றாமரைக் குளம் (ஸ்வர்ண புஷ்கரணி கருமாறித் தீர்த்தம், சிந்துபூந்துறை*

ஆகமம்/பூஜை : *காரண ஆகமம், காமீக ஆகமம்*

பழமை : *1000-2000 வருடங்களுக்கு முன்*

புராண பெயர்: *நெல்லூர், வேணுவனம், சாலிவேலி, சாலிவாடி, சாலி நகர், தாருகா வனம், பிரம்ம விருந்தபுரம*

ஊர் : *திருநெல்வேலி*

பாடியவர்கள்: *திருஞானசம்பந்தர்*

தேவாரப்பதிகம்:*🅱

*அக்குலா மரையினர் திரையுலா முடியினர் அடிகளன்று தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலும் சோலைத் திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலியுறை செல்வர் தாமே.* - திருஞானசம்பந்தர்.

*தேவாரப்பாடல் பெற்ற பாண்டி நாட்டுத் தலங்களில் இது 14வது தலம்.*👈🏾

திருவிழா:*🅱

*மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.*

பொது தகவல்:*🅱

பிரகாரத்தில் கன்னி விநாயகர், நந்தி தேவர், பாண்டியராஜா சன்னதிகள் உள்ளன. பிட்சாடனர், ரிஷிபத்தினியர் உருவங்கள் கல்லில் வண்ணந்தீட்டப்பட்டுள்ளன. அகத்தியர் பிரதிஷ்டை செய்த சால்வடீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி சற்றுத் தாழ்வில் உள்ளது.

நெல்லையப்பர் கோயிலுக்குள் பொற்றாமரைக் குளமும், நடுவில் நீராழி மண்டபமும் உள்ளது. இக்கோயிலில் 96 தூண்கள் உடைய ஊஞ்சல் மண்டபம், மகாமண்டபம், நவகிரக மண்டபம், சோமவார மண்டபம், சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் ஆகிய மண்டபங்களில் அழகிய சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

நாட்டிலேயே மூன்றாவது பெரிய திருத்தேர் நெல்லையப்பர் திருத்தேர்.

கோயிலில் உள்ள பொள்ளாப்பிள்ளையார் இதனை மலை மண்டலத்தைச் சார்ந்த முந்திக் கோட்டு வீரம் அழகிய பாண்டிய தேவன் உருவாக்கினார் என்று கல்வெட்டில் எழுதப் பெற்றுள்ளது.

பிள்ளையாருக்கு பிள்ளைத்தூண்டு விநாயகர் என்றும் ஒரு பெயர் உண்டு.

நெல்லை மக்கள் அம்பாள் காந்திமதியை அம்மை என்றும், நெல்லையப்பரை அம்மையப்பர் என்றும் அழைக்கின்றனர்.

பிரார்த்தனை:*🅱

கல்விக்கு அதிபதியான புதன், குபேர திசையான வடக்கு நோக்கி திரும்பியிருப்பதன் மூலம், படித்தவர்கள் இவரை வணங்கினால், செல்வாக்கு மிக்க வேலையோ, தொழிலோ செய்யலாம் என்று நம்புகிறார்கள். ஜாதகத்தில் புதன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபடுகிறார்கள்.

கணவனும், மனைவியும் அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த தலத்தில், தம்பதியர் வழிபட்டால், அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒற்றுமையுடன் இருப்பர் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:*🅱

இங்குள்ள பொல்லாப் பிள்ளையார் சன்னதியில், 12 துளைகள் கொண்ட கல் ஜன்னல் இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டு, குழந்தைப்பேறு பெற்றவர்கள், குழந்தையை ஜன்னல் வழியாக கொடுத்து வாங்கி வித்தியாசமான நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த நேர்த்திக் கடனால் குழந்தைகள் விநாயகரின் பாதுகாப்பைப் பெற்று தீர்க்காயுளுடன் வாழ்வர் என்பதும், கல்வியில் சிறந்து விளங்குவர் என்பதும் நம்பிக்கை.

*திறக்கும் நேரம்:*🅱

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

*தல சிறப்பு:*🅱

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இத்தலம், பஞ்சசபைகளுள் தாமிர சபையாகும்.

மூலவரான வேண்ட வளர்ந்தநாதர் சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் இருக்கிறார். இவரே நெல்லையப்பர் எனப்படுகிறார்.

லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம்.

விநாயகர் முக்குறுணி விநாயகர் என்ற திருநாமத்துடன், வலது கையில் மோதகம், இடது கையில் தந்தம் என மாற்றி வைத்திருப்பது வித்தியாசமான அம்சம்.

பொதுவாக, நவக்கிரக சன்னதியில் புதன் பகவான் கிழக்கு நோக்கியிருப்பார். இங்கு வடக்கு நோக்கியிருப்பது மிக அரிய கோலம்.

மூலஸ்தானம் அருகில் உள்ள உற்சவர் விஷ்ணு, மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தருகிறார்.

இத்தலத்தில் மார்கழி பூஜை கிடையாது. அதற்குப்பதிலாக, கார்த்திகை மாதத்தில் அதிகாலை 4 மணிக்கு கோயில் திறந்து, அனைத்து சுவாமி களுக்கும் பூஜை நடக்கிறது.

சிவனும், அம்பிகையும் ஒன்று என்பதன் அடிப்படையில் பிரதோஷத்தின்போது இங்கு அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கிறது.

சிவராத்திரியன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு ஜாம அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது.

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காந்தி சக்தி பீடம் ஆகும்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 204 வது தேவாரத்தலம் ஆகும்.

தலபெருமை:*🅱

*வெண்ணிற ஆடை அம்பிகை:*🅱

காந்திமதிக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின் போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலையில் விளாபூஜை (7 மணி) நடக்கும் வரையில் அம்பிகை வெண்ணிற புடவையிலேயே காட்சி தருகிறாள். இறுதிக் காலத்தில் உலகம் அனைத்தும் அம்பிகையிடம், ஐக்கியமாவதை உணர்த்தும் விதமாக இவ்வாறு காட்சி தருவதாக ஐதீகம்.

*தனித்தனி பூஜை:*🅱

நெல்லையப்பர் கோயிலில் சுவாமிக்கு தனி ராஜகோபுரமும், அம்பாளுக்கு தனி ராஜகோபுரமும் உண்டு. இரண்டு சன்னதிகளையும் மிக நீளமான சங்கிலி மண்டபம் ஒன்று இணைத்து வைக்கிறது. பார்ப்பதற்கு தனித்தனி கோயில்கள் போன்ற உணர்வு ஏற்படும். பொதுவாக கோயில்களில் சுவாமி, அம்பாள் இருவருக்கும் ஒரே ஆகமப்படி தான் பூஜை நடக்கும். ஆனால், இங்கு காந்திமதி அம்பாள் தனிக்கோயிலில் இருப்பதால் காரண ஆகமப்படியும், நெல்லையப்பருக்கு காமீக ஆகமப்படியும் ஆறு கால பூஜை நடக்கிறது.

*காந்திமதி சீர் :*🅱

பெண்கள், திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சீர் கொண்டு செல்வதுபோல, காந்திமதி அம்பிகையும் தனது திருக்கல்யாணத்தின் போது, சீர் கொண்டு செல்கிறாள். ஐப்பசி பிரம்மோற்ஸவத்தின் முதல் பத்து நாட்கள் அம்பாள், சிவனை மணக்க வேண்டி தவமிருப்பாள்.

பத்தாம் நாளில் கம்பை நதிக்கு எழுந்தருள்வாள். 11ம் நாள் மகாவிஷ்ணு, தன் தங்கையை மணந்து கொள்ளும்படி சிவனை அழைப்பார். சிவனும் அவரது அழைப்பை ஏற்று, அம்பிகையை மணம் செய்வார். அப்போது பக்தர்கள், மணமக்களுக்கு திருமண ஆடைகள் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.

12ம் நாளிலிருந்து இருவரும், 3 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் காண்கின்றனர். 14ம் நாள் இரவில் சுவாமியும், அம்பாளும் மறுவீடு செல்கின்றனர். அப்போது அம்பிகை அப்பம், முறுக்கு, லட்டு என சீர் பலகாரங்கள் கொண்டு செல்கிறாள். இதனை, *"காந்திமதி சீர்'* என்பார்கள்.

*அன்னம் பரிமாறும் அம்பிகை :*🅱

இக்கோயிலில் காந்திமதி அம்பாள், கணவர் நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அம்பாள் சன்னதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, பருப்பு, சாம்பார் சாதம், ஊறுகாய் என வகை வகையான நைவேத்யங்களை சிவன் சன்னதிக்கு கொண்டு செல்கின்றனர். அங்குள்ள அர்ச்சகர்கள் அவற்றை சிவனுக்கு படைக்கின்றனர். இப்பூஜை முடிந்தபின், அம்பாளுக்கு அதே நைவேத்யம் படைத்து பூஜை நடக்கிறது.

*திருமால் மார்பில் லிங்கம்:* 🅱

மூலஸ்தானம் அருகில் தனி சன்னதியில் திருமால், பள்ளிகொண்ட கோலத்தில், சிவலிங்க பூஜை செய்தபடி இருக்கிறார். அருகில் உற்சவர் விஷ்ணு, மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தருகிறார். திருமாலை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது. தன் தங்கையை மணந்த சிவனை, விஷ்ணு மார்பில் தாங்கினார். இதன் அடிப்படையில் இவ்வாறு இருப்பதாக சொல்கிறார்கள். இவரது கையில் தாரை வார்த்துக் கொடுத்த தீர்த்த பாத்திரமும் இருக்கிறது.

*அம்பிகைக்கு பிரதோஷம்:*🅱

பிரதோஷத்தின் போது, சிவன் சன்னதி எதிரேயிருக்கும் நந்திக்கு மட்டுமே பூஜை நடக்கும். ஆனால், இங்கு அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கிறது. அப்போது அம்பிகை ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிறாள். சிவனும், அம்பிகையும் ஒன்று என்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர். சிவராத்திரியன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு ஜாம அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது.

*தன்னில் நீராடும் தாமிரபரணி :*🅱

இக்கோயிலில் நாயன்மார் சன்னதி அருகில் தாமிரபரணி தாய், சிலை வடிவில் இருக்கிறாள். சித்ரா பவுர்ணமி, ஆவணி மூலம், தைப்பூசம் ஆகிய நாட்களில் இவளை தாமிரபரணிக்கு பவனியாக எடுத்துச் சென்று தீர்த்தமாடச் செய்வர். தாமிரபரணியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். இதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக தாமிரபரணியே, தனது உண்மை வடிவத்தில் நீராடுவதாக சொல்வதுண்டு. அம்பிகை சன்னதி முன்பாக கங்கை, யமுனை இருவரையும் துவாரபாலகிகளாகவும் காணலாம். கங்கையும், யமுனையும் தாமிரபரணி நகர் நாயகிக்கு பாதுகாவல் செய்வதில் இருந்தே, காந்திமதியம்மையின் மகிமையும், தாமிரபரணி நதியின் பெருமையும் தெரிய வரும்.

*மார்கழி பூஜை இல்லாத கோயில்:*🅱

தை மாதத்தில் உத்ராயணம் துவங்குவதால், மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை நேரமாக கருதப்படுகிறது. ஆகவே, கோயில்களில் மார்கழி அதிகாலையில் திருவனந்தல் பூஜை நடக்கும். ஆனால், இங்கு மார்கழி பூஜை கிடையாது. அதற்குப்பதிலாக, கார்த்திகை மாதத்தில் அதிகாலை 4 மணிக்கு கோயில் திறந்து, அனைத்து சுவாமி களுக்கும் பூஜை நடக்கிறது. இந்த 30 நாட்களும் சுவாமி தங்கப்பல்லக்கில் எழுந்தருளுகிறார். இங்கு கந்தசஷ்டி ஐப்பசி அமாவாசையில் துவங்கி பவுர்ணமி வரையில் 15 நாட்கள் நடக்கிறது. அப்போது ஆறுமுக நாயனாருக்கு லட்சார்ச்சனை செய்யப்படுகிறது.

*மான் வாகன துர்க்கை:*🅱

இங்குள்ள துர்க்கை தெற்கு நோக்கியபடி, சிங்கம் மற்றும் மான் வாகனத்துடன் இருக்கிறாள். சிங்கமும், மானும் ஒரு சேர இருப்பதால், எதிரிகளையும் அன்பால் அடக்கும் சக்தியை அவள் தருகிறாள். அருகில் அவளது தோழி இருக்கிறாள். அம்பாள் சன்னதியில் பண்டாசுரனை வதம் செய்த அம்பாளின் சிலை உள்ளது. இவளை *"மஞ்சன வடிவாம்பிகை'* என்பர். இவளையும் துர்க்கையின் அம்சமாக கருதி வழிபடுகின்றனர்.

*புதனின் மாறுபட்ட திசை:*🅱

பொதுவாக, நவக்கிரக சன்னதியில் புதன் பகவான் கிழக்கு நோக்கியிருப்பார். இங்குள்ள புதனோ, வடக்கு நோக்கியிருக்கிறார். இது மிக அரிய கோலம். தமிழகத்தில் வேறு எந்தக் கோயிலிலும் புதனின் திசையில் மாற்றமில்லை.

*முக்குறுணி விநாயகர்:*🅱

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகர் இருக்கிறார். அதுபோல, இங்குள்ள விநாயகரும் இதே திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். ஆனால், வலது கையில் மோதகம், இடது கையில் தந்தம் என மாற்றி வைத்திருப்பது வித்தியாசமான அம்சம்.

*தாமிரபரணியில் தண்ணீர் வற்றாதது ஏன்? :*🅱

திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணியில் எப்போதும் தண்ணீர் வற்றுவதில்லை. இந்நதியை அகத்தியர் உண்டாக்கியது ஒரு காரணம் என்றாலும், நதி செழிப்புடன் இருப்பதற்கு நெல்லையப்பரே மூலகாரணம் என்கிறார்கள். ஆம்! இக்கோயிலின் அமைப்பை பார்த்தால் இவ்விஷயம் புலப்படும்.

கோயில்களில் சுவாமி அபிஷேக தீர்த்தம் வட பகுதியில் விழும்படியாகத்தான் கோமுகி இருக்கும். ஆனால், இங்கு வருணனின் திசையான மேற்கில் இருக்கிறது. இந்த புனித நீர், தன் திசையில் விழுவதால் மகிழும் வருணபகவான் எப்போதும் இப்பகுதியில் மழை பொழிவித்து, தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலையில் வைத்திருக்கிறார் என்பது ஐதீகம்.

பொன் திணிந்த பொருநை நதியில் அமைந்த பெரிய நகரம் திருநெல்வேலி. ஒருகாலத்தில் மூங்கில் வனமாக இருந்த காரணத்தால் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்ற பெயரும் உண்டு. மட்டுமின்றி நெல்லூர், வேணுவனம், சாலிவேலி, சாலிவாடி, சாலி நகர், தாருகா வனம், பிரம்மவிருந்தபுரம் ஆகிய பெயர்களும் இந்த ஊருக்கு உண்டு. கல்வெட்டு குறிப்பு ஒன்று, கீழ் வேம்பு நாட்டுக் குலசேகரச் சதுர்வேதி மங்கலம் என்று இவ்வூரைக் குறிப்பிடுகிறது.

தண்பொருநைப் புனல்நாடு என சேக்கிழார் பிரானும் இந்த ஊரைப் போற்றிப் புகழ்கிறார்கள். கவிச்சக்கரவர்த்தி கம்பரோ, பொன் திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி என்று, இவ்வூரின் நடுவே பாயும் தாமிரபரணியை சிறப்பிக்கிறார்.

தாமிரபரணி ஆற்றின் வட கரையிலும் தென் கரையிலும் அமைந்த திருநெல்வேலி, பாளையங்கோட்டை என்னும் இரட்டை நகரங்களில், திருநெல்வேலியின் நடுநாயகமாக விளங்குகிறது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்.

*தல வரலாறு:*🅱

வேதபட்டர் என்பவர் இறைவனுக்கு தினமும் நைவேத்யம் படைப்பதற்காக உலரப் போட்டிருந்த நெல் மழையினால் நனையாதவாறு இறைவன் வேலியிட்டு காப்பாற்றியதால் இறைவனுக்கு நெல்வேலிநாதர் என்று பெயர் ஏற்பட்டது. இத்தலமும் நெல்வேலி (திருநெல்வேலி) என பெயர்பெற்றது.

தமிழகத்தில் மூன்று மூலவர்களைக் கொண்ட கோயில் நெல்லையப்பர் கோயில் மட்டுமே. மூலவரான "வேண்ட வளர்ந்தநாதர்' சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் பெரிய லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரே "நெல்லையப்பர்' எனப்படுகிறார். இவருக்கு *மூங்கில் வேணுவனேஸ்வரர், வெய்முத்தீசர்* ஆகிய திருநாமங்கள் உள்ளன. இந்த லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம். சிவனுக்குள் சக்தி அடக்கம் என்பதை இக்கோலம் உணர்த்துவதாக சொல்கிறார்கள். எனவே, சுவாமிக்கு *"சக்தி லிங்கம்'* என்ற பெயரும் உண்டு. இது தவிர, மகாவிஷ்ணு பூஜித்த லிங்கம் ஒன்றும், மூலவர் சன்னதிக்கு முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னதியும் இருக்கிறது. பாதாள லிங்கத்தில் உள்ள உள்ள சிவனையே ஆதிமூலவர் என்கின்றனர். இவருக்கு தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. இவருக்கு *சாலி வாடீஸ்வரன், (சாலி என்பது நெல்லி), விருகி விடுதீஸ்வரன், ஸ்ரீதான மூர்த்தி* போன்ற திருநாமங்கள் உள்ளன.இவரே இக்கோயிலின் முதல் லிங்கம் எனக் கருதப்படுவதால், இவருக்குத் தான் முதல் பூஜை நடக்கிறது. வருமே மூலவராகவே வணங்கப் படுகின்றனர். இங்கு பஞ்ச தெட்சிணாமூர்த்தி களையும் தரிசிக்கலாம்.

ஏறக்குறைய பாண்டியரின் இரண்டாம் தலைநகரம் என்ற அளவில் சிறப்புற்றிருந்தது திருநெல்வேலி என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை வீழ்த்திய பிறகு பாண்டிய நாடு சோழர்களின் வசமானது. 13-வது நூற்றாண்டு வரை சோழரின் ஆட்சியிலிருந்த திருநெல்வேலி, பிறகு பிற்கால பாண்டியரின் வசம் வந்தது. பொருநை என்னும் தாமிரபரணி நதியாலும், அதன் கரையில், சிந்துபூந்துறை, கொக்கு உறைகுளம் என்று அருந்தமிழ்ப் பெயர்களை ஏற்றுத் திகழும் இடங்களாலும் சிறப்புற்ற நெல்லைக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில். பதினான்கு ஏக்கர் நிலப் பரப்பில், இரட்டைக் கோயில் அமைப்பில் இருக்கிறது.

காந்திமதியம்மன் - நெல்லையப்பர் திருக்கோயில். நிறை கொண்ட சிந்தையன் என்றும் நெல்வேலி கொண்ட நெடுமாறன் என்றும் சுந்தரரால் குறிக்கப்படும் நின்றசீர் நெடுமாறன் எனும் பாண்டிய மன்னனால், கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் திருப்பணி செய்யப்பட்டு, இந்தக் கோயில் பெரிதாகக் கட்டப்பட்டது. ஆனால், அதற்கு முன்னரே கூட, இந்தக் கோயில் பிரபலமாக விளங்கியதை, திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களால் தெரிந்து கொள்கிறோம். வேணுவன புராணமும், திருநெல்வேலி தலபுராணமும் திருக்கோயில் சிறப்பை அற்புதமாக விவரிக்கின்றன. இந்த வனத்தின் வழியாக ராமக்கோன் என்பவர் அரண்மனைக்கு பால் கொண்டு செல்லும்போது, பாறை ஒன்று இடற மொத்த பாலும் கொட்டிவிட்டது. தொடர்ந்து சிலநாட்கள் இப்படியே நடக்கவே ஒருநாள் கோபத்துடன் ராமக்கோன் அந்தப் பாறையை வெட்ட, அதில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. தகவல் அறிந்த மன்னர் நேரில் வந்து பார்த்தபோது சிவபெருமான் அவருக்கு லிங்கவடிவில் காட்சி தந்ததாகக் கூறுகிறது தலவரலாறு.

சிறப்பம்சம்:*🅱

*அதிசயத்தின் அடிப்படையில்:* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரான *"வேண்ட வளர்ந்தநாதர்'* சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் இருக்கிறார். இவரே *"நெல்லையப்பர்'* எனப்படுகிறார். இந்த லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம்.

திருச்சிற்றம்பலம்

சற்று களைத்திருந்தாலும், திரு நெல்வேலியை அடைந்ததுமே நெல்லையப்பரைப் பார்க்கும் எண்ணம் இருந்தது. எனவே விடுதியில் சற்று ஓய்விக்குப்பின் கோயிலுக்குக் கிளம்பினோம். அது கடைத்தெரு என்பதால் - போதீஸ் மற்றும் உள்ள பலப்பல கடைகளை மொய்க்கும் மக்கள் வெள்ளம். வாகனங்கள் செல்வதில் குழப்பம். வழக்கம் போல் எரிந்து விழும் காவலர்கள் என்று எல்லாம் தாண்டி, போதிஸ் துணிக்கடைக்கான parking space ல் காரை நிறுத்தினோம். எதற்காக எழுதுகிறேன் என்றால், கோவிலுக்கு வரும் வாகனங்களை நிறுத்தவும் இடம் இல்லை. வாகனங்களை நிறுத்தி இறங்கும் நேரத்திற்குள் விரட்டியடிக்கப்படுவீர்கள். வயதானவர்களை அழைத்துப்போன எங்களுக்கு எல்லா இடத்திலும் மிகவும் கஷ்டமான ஒரு அனுபவம் இதுதான். மக்களுக்குப் பயன்படும் விதத்தில் சட்ட திட்டங்கள், விதிமுறைகள் இல்லாததை காட்டுகிறது. பிற நாடுகளில் ஊனமுற்றவர்களுக்காக இருக்கும் எத்தனையோ அடிப்படை வசதிகளைப் பார்க்கும் போது, இது மிகுந்த சலிப்பையே தருகிறது.

கோவில் நுழைவாயில் கூரையில் மிக அழகிய தேக்கு மரச்சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றைப்பார்த்துக்கொண்டு உள்ளே நுழைந்தோம். இக்கோயில் ஒரு சிற்பக்கருவூலம் என்று தான் சொல்லவேண்டும். நுழைவாயிலிலேயே இருக்கும் பல்வேறு சிற்பங்கள், உட்பிரகாரத்துக்கு செல்லும் நுழைவாயிலில் உள்ள பாண்டவர், கண்ணனின் சிற்பங்கள் (அவர்கள் எங்கே வந்தார்கள் என்று தெரியவில்லை) எல்லாம் கண்களில் ஒத்திக்கொள்ள வேண்டும். ஆடைகளும், அணிகளும், அங்க அசைவுகளும் அற்புதம். இவை நன்கு பராமரிக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு இதை எழுதுவதால் மறுமுறை பார்க்கும் ஆர்வமே மேலோங்குகிறது.

வாயிலில் உள்ள த்வஜஸ்தம்பத்திற்கருகிலேயே வேலி காத்த படலம் நடைபெறுமாம் - அங்கேயே முன் காலத்தில் நெல்லுக்கு வேலி போட்டு காத்ததால். தலபுராணம் . உள்ளே நுழைந்தால் சிற்ப அற்புதங்கள் தொடர்கின்றன. 7 ஸ்வரங்கள் சொல்லும் தூண்கள் காண வேண்டியவை. சன்னதிக்குள்ளே செல்ல சில படிகள் ஏற வேண்டும். மன்னன் கோயிலைக்கட்டிய போது சுயம்பு லிங்கத்து ஆவுடையாரை அமைக்க அமைக்க லிங்கம் மேலெழுந்ததாம். மன்னன் என்ன செய்வதென்று அறியாமல் மேலும் ஆவுடையாரை வைக்க இப்படியே 20 ஆவுடையாரை வைத்தும் முடியாததால் இறைவனை வேண்ட, 21 ஆவது ஆவுடையாரில் அவர் எழுந்தருளினாராம். அதனாலேயே சன்னதி உயரமாய் உள்ளதாக சொன்னார்கள். லிங்கத்திருமேனியை தரிசனம் செய்யும் முன் பிரம்மாண்டமாக பிள்ளையார் இருக்கிறார் - நெல்லையப்பரோ மிக்க அழகு. இங்கேயும் உள்ளத்தை நிறைக்கும் தரிசனம். அருகிலேயே கோவிந்த ராஜ பெருமாள் சயனித்திருக்கிறார். அவர் மார்பில் திருமகளுக்கு பதிலாக ஈசனின் திருவுருவம், அவர் வலது கையோ அருகிருக்கும் லிங்கத்துக்கு வில்வார்ச்சனை செய்து கொண்டிருக்கிறது. திருமகள் இல்லாத பக்திப்பெருக்கெடுக்கும் திருமால் இங்கே.

திருச்சுற்று வலம் வந்தால் சந்தன நடராஜரும், கேரள பாணியில் மின்னும் தாமிர சபையும், தாமிர சபை நடராஜரும் தனித்தனியாக. தாமிர சபை நடராஜரின் இதழ்களில் ஒரு அலட்சிய குமிண் சிரிப்பிருக்கிறதே - அதற்கே பல பிறவிகள் எடுக்கலாம். வெளிப்பிரகாரத்து வழியாக சென்றால், கோவிலுக்கு திருப்பணி செய்த மன்னர்கள், செல்வந்தர்களின் பல சிற்பங்கள் இருக்கின்றன. அதைத்தாண்டினால், அம்மா மண்டபம் எனப்படும் மிகப்பெரிய மண்டபம் இருக்கிறது. அதில் இருக்கும் ஒவ்வொரு சிற்பமும் ஒரு அற்புதம். வீரர்கள், சாதாரண மனிதர்கள், தெய்வங்களோடு ஒரு ஜோடி சிரிக்கும் குரங்குகளும் larger than life size ல் இருக்கின்றன.

அம்பாளுக்கென்று தனியாக இருக்கின்ற கோட்டத்தில் சிவன் சன்னதி போன்றே கட்டமைப்பு. உள்ளத்தில் ஊடுருவும் அவள் விழியழகை, சிறு இதழின் நகையழகை, பார்ப்பவர் உள்ளத்தின் இருள் ஒழியுமாறு வீசும் மூக்குத்தியின் அழகை, அன்னபூரணியாக தோன்றும் காருண்யத்தின் பேரழகைச் சொல்ல நம் ரங்கனார் போன்ற அவளருள் பெற்ற கவிஞர்களே வரவேண்டும். காந்திமதி என்ற பெயர்ப் பொருத்தத்தையும் தான் சொல்ல வேண்டும். 



வாராதிருந்தால் இனி நான் உன் வடிவேல் விழிக்கு மை எழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகம் இடேன் மணியால் இழைத்த பணிபுனையேன்
பேராதரத்தினொடு பழக்கம் பேசேன் சிறிதும் முகம் பாரேன்
பிறங்கு முலைப்பால் இனிதூட்டேன் பிரியமுடன் ஒக்கலை வைத்துத்
தேரார் வீதி வளங்காட்டேன் செய்ய கனிவாய் முத்தமிடேன்
திகழும் மணித் தொட்டிலில் திருக்கண் வளரச் சீராட்டேன்
தாரார் இமவான் தடமார்பில் தவழும் குழந்தாய் வருகவே
சாலிப் பதிவாழ் காந்திமதித் தாயே வருக வருகவே!



ஆய் முத்துப் பந்தரில்
மெல்லணைமீது உன் அருகிருந்து
'நீ முத்தம் தா' என்றூ அவர் கொஞ்சும்
வேளையில் நித்தம் நித்தம்
வேய் முத்தரோடு என் குறைகள்
எல்லாம் மெல்ல மெல்லச் சொன்னால்
வாய் முத்தம் சிந்தி விடுமோ?
நெல்வேலி வடிவு அம்மையே!
                                         திருச்சிற்றம்பலம்.
                                                        ******