http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Monday, December 27, 2021

கோயில்.

கோயில்: *அறிவியலின் ஆராய்ச்சிக்கூடம் கோயில்* *ஆலயம் தொழுவது சாலவும் நன்று* கோயில்கள் பிரபஞ்சத்தின் ஆற்றலை பூமியில் சேகரிக்க நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது என்றால் அது மிகையாகாது. *கிரகங்களின் மின்காந்த அதிர்வலைகள் பூமியை வந்தடையும் போது, மனித உயிரினங்களின் மீது பாய்கிறது* . இது 24 மணி நேரமும் நடக்கிறது. இந்நிகழ்வின் போது, நமது முன்னோர்கள் மின்காந்த அலைகளை சேமிக்கும் அறிவியல் தளமாக கோயிலை உருவாக்கினர். *கருங்கல்லால்* கோயில்களில் சிலைகள் உருவாக்கப்பட்டது. *கருங்கல் மந்திர ஒலி அலைகளை உள்வாங்கி சேமித்து வைத்து கொள்ளும்.*> உள்வாங்கப்படும் ஒலி அலைகள் கோயில் முழுவதும் மின்காந்த அலைகளாக பரவி நிற்கும். அபிேஷகம் செய்யப்படுகின்ற பால், எண்ணெய், நெய் போன்ற பொருட்கள் ஆகர்ஷண சக்தியை உள்வாங்கி கொள்கிறது. சிலையை சுற்றி அலங்கரிக்கப்படுகின்ற மலர்களானது, நல்ல மின் காந்த அலைகளை அப்பகுதியில் பரவி நிற்க உதவுகின்றது. மூலவரை நாம் தரிசிக்கும் போது, அங்கு பரவியுள்ள மின்காந்த அலைகள் நமது கண்களின் வழியாக உடல் முழுவதும் பரவுகிறது. தீபம் பார்த்தால் புண்ணியம் என்று சொல்வார்கள். தீபத்தை தொட்டு வணங்கும்போது, மூலவரின் அருகில் உள்ள மின்காந்த அலைகள், நம் கைகளின் வழியாக உடல் முழுவதும் பரவுகின்றது. அதே போல்தான் திருநீறு, குங்குமம் மூலம் கோயிலில் உறைந்திருக்கின்ற பிரபஞ்ச ஆற்றலான கிரக சக்திகள் நம் உடலில் இணைகிறது. *மனதின் நிலைப்பாடு :* முழுமையான நல்ல மின்காந்த அலைகள் உடலில் சேர்வதன் மூலம் பல்வேறு நலன்களை அடையலாம். அதே நேரத்தில் *கோயிலுக்கு சென்று வழிபாடு செய்கின்ற அனைவரும் துன்பம் இல்லாமல் வாழ்கின்றனரா?* என்ற ஐயப்பாடு எழக்கூடும்.ஒரு மாணவன், தன்னுடைய பாடத்திட்டம் 100 சதவீதம் இருந்தாலும், 25 சதவீத மனதை நிலைப்படுத்தி படித்தால், 25 மதிப்பெண்ணும். 50 சதவீதம் நிலைப்படுத்தி படித்தால் 50 சதவீத மதிப்பெண்ணும், 100 சதவீதம் மனதை நிலைப்படுத்தி படித்தால் நுாறு மதிப்பெண்களும் பெறுகிறான்.அதே போல் தான் கோயிலுக்கு செல்கின்ற மக்கள், கோயிலில் தன் சிந்தனைகளை வேறு இடத்தில் வைத்தால் ஆலயம் சென்றும் பலன் இல்லை. ஒருவர் புதிய காலணியை வாங்கி கோயில் வாசலில் போட்டுவிட்டு, உள்ளே சென்று இறைவனை வணங்கும்போது, ஆழ்மனதானது இறைவன் மீது இல்லாமல், தான் வாங்கிய காலணி மீது இருந்தால், மின்காந்த அதிர்வலைகள் உடலில் இணையாது. இதன் அடிப்படை தத்துவம் என்னவென்றால், *ஆழ்மனதை ஒரு நிலை படுத்தாவிட்டால், பிரபஞ்ச பேராற்றலான கிரக சக்திகள் அந்த மனித உயிருக்கு கிடைக்காது.* *கோயில் கோபுரம் :* கோயிலின் உள்ளே நுழையும்போது, கோபுரம் பிரபஞ்ச சக்தியை உள்ளே இழுக்கிறது. கோபுர கலசத்தில் *வரகு* என்ற தானியம் கொட்டப்படுகிறது. அந்த தானியத்தின் மின்காந்த ஆற்றல், மின்னலால் ஏற்படும் மின் சக்தி, கோயிலை தாக்காமல் பாதுகாக்கிறது. கோயிலின் *ஈசான்ய பகுதி, பிரபஞ்ச ஆற்றல் நுழையும் பகுதியாக இருக்கின்றது.* ஈசான்ய பகுதியில், நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஒன்பது நவகிரகத்தின் சக்திகளும், கோயில் முழுவதும் பரவுகிறது. *பிரபஞ்சத்திற்கும் மூலவருக்கும் இணைப்பு பாலமாக கொடிமரம்* அமைக்கப்பட்டிருக்கிறது. வான் மண்டல மின்காந்த சக்தி, கோயிலின் *கொடிமரம் மூலமே மூலவருக்கு அனுப்பப்படுகிறது.* அதனால் தான் நம் முன்னோர்கள், *கொடிமரம் அருகே சென்று நம் கோரிக்கைகளை சொன்னால், அவை வான் மண்டலத்தில் உள்ள பிரபஞ்சத்தின் மூலம் இணைவு ஏற்பட்டு, அக்கோரிக்கை நிறைவேறும்* என்றனர். அதே போல் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு தெய்வ சக்தியின் மீது உறைகின்றது. *பிரபஞ்சத்தில் கலந்து வருகிற ஒன்பது சக்திகள் உறையக்கூடிய இடமாக கோயில்களை முன்னோர்கள் அமைத்தனர்.* *ராகங்கள் : பக்தி, ஞானம், கலை, இலக்கியம், வேதம்* போன்ற பல்வேறு தன்மைகளை ஒரே இடத்தில் கொண்டுவரக்கூடிய ஒரே இடமாக கோயில் திகழ்கிறது. இலக்கியமும், பண்பாடும் ஆலயத்தின் துாண்களாக உள்ளது. நமது முன்னோர்கள் *கர்நாடக இசை ராகங்களை மனம் குளிர கேட்டால் மனதளவில் பல நல்ல மின்காந்த அதிர்வுகள் இணைந்து, ஆயுளை நீட்டிக்க முடியும்,* என்பதை கண்டறிந்து இசை கச்சேரிகளை நடத்தும் இடமாக கோயில்களை தேர்வு செய்தனர்.*அமிர்தவர்ஷினி என்ற ராகம் மழைபொழியவும், 'ஹம்சானந்தி' மனஅழுத்தம் தீரவும், 'கேதாரம்' ஆஸ்துமா, தலைவலி, இருமல் போன்ற நோய்களை நீக்கவும், 'விஜயஸ்ரீ' வெற்றி கிடைக்கவும், 'அகிர் பைரவி'உயர் ரத்த அழுத்தம் தீரவும், 'ராமகளி' ராகம் அல்சர் தீரவும், 'கோலா ஹலம்' என்ற ராகம் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும் பாடினர்.* இவ்வாறு அறிவியல் உண்மைகள் அடங்கிய இசை, கோயில்களில் இசைக்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் இன்னும் 70-க்கும் மேற்பட்ட ராகங்களை பயன்பாட்டில் குறிப்பிடலாம். கணவன், மனைவி உறவின் அறிவியல் *உண்மைகளை தெரிந்து கொள்ள கூடிய சிற்பங்கள் கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளது.* *மொத்தத்தில் அறிவியல் சிறப்பம்சம் பொதிந்து கிடக்கும் ஓர் ஆராய்ச்சி கூடம் கோயில்.*

Tuesday, December 21, 2021

சங்கரன்கோவில் கோமதி அம்மன்.

♥ சங்கரன்கோவில் கோமதி அம்மனை தரிசிக்கும் முறை ♥ ♥♥ சங்கர நாராயணராக காட்சி தந்து கோவில் கொண்டு அரியும் சிவனும் ஒன்றுதான் என்று உலகிற்கு உணர்த்திய தலம் சங்கரன்கோவில். சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கர லிங்கமாகவும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும், ஒரே உருவில் வலப்பக்கம் சிவனாகவும் இடப்பக்கம் நாராயணனாகவும், மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் பார்வதி தேவியர் கோமதி அம்மனாக வீற்றுள்ளார். ♥♥ கோமதி அம்மன் கோவிலின் முதன்மைப் பெண் தெய்வம். தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 பிரதான சக்தி பீட இடங்களில் அம்பிகையின் நெற்றியின் உள்பகுதி, அதாவது குண்டலினி எழும்பி பாம்பு போல் படம் விரித்து ஆடும் பகுதியான சஹஸ்ராரம் விழுந்த பகுதிதான் ஸ்ரீ கோமதி அம்மன் - மஹா யோகினி சக்தி பீடம் சங்கரன்கோவிலில் அமைத்துள்ள ஸ்ரீ கோமதி அம்மன் சன்னதி ஆகும். கோமதியம்மனுக்கு செவ்வரளிப் பூக்களைப் பரப்பி, அதன் மீது மாவிளக்கேற்றி வழிபடும் முறை சிறப்பாகக் கருதப்படுகிறது. அர்த்தஜாம பூஜை முடிந்த பின் தரப்படும் பிரசாதப்பாலை, தொடர்ந்து 30 நாட்கள் பருகினால் மகப்பேறு இல்லாதவருக்கு மகப்பேறு கிட்டும் என்கிறார்கள். ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமையிலும் கோமதியம்மனுக்கு தங்கப்பாவாடை சாத்தப்படுகிறது. ♥♥ சங்கரன்கோவிலில் காலை பூஜையின் போது துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள். மற்ற நேரங்களில் விபூதி வழங்கப்படுகிறது. பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலையை அணிவிக்கிறார்கள். புத்திரதோஷம் உள்ளவர்கள் மா விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கிறது. ராகு கேது தோஷம் நீங்கும் சிவன் சன்னதி எதிரில் உள்ள பஞ்சநாக சிலைகள் மீது பால் அபிஷேகம் செய்தால் நாகதோஷம் விலகும். இத்தலத்தில் சர்ப்ப விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை (4.30 முதல் 6.00) ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்தால் ராகு,கேது தோஷம் நீங்கும். வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை இருந்தால், சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அதன் வெள்ளி உருவங்களை வாங்கி காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும். மனநலம் சரியாகும் அம்மன் சந்நதி பிராகார வாயு மூலையில் உள்ள புற்று மண்ணை நெற்றியில் இட்டுக் கொள்பவருக்கு கெடுபலன் குறையும். சங்கரநாராயணர் சந்நதியில் உள்ள வசனக்குழி எனும் தெய்வீக சக்தி மிக்க பள்ளத்தில் பேய், பிசாசு, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அமர்ந்து பூஜை செய்து நலம் பெறுகின்றனர். இந்தக்கோவிலில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளது. அவை அக்கினி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், வைரவ தீர்த்தம், கவுரி தீர்த்தம் என்பது ஆகும். இந்த கோவிலின் தல மரம் புன்னை மரமாகும். நாக சுனையில் எப்பேற்பட்ட பாவங்கள் செய்தவர்களும் மூழ்கி எழுந்தால் நற்கதியடையலாம். ஸ்தல வரலாறு:- மணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தாற் பறையனாகிப் புன்னைவனக் காவலனாக இருந்தான். அதனால் அவன் காப்பறையன் என்றும், காவற் பறையன் என்றும் பெயர் பெற்றான். கரிவலம்வந்தநல்லூர்ப் பால்வண்ண நாதருக்குப் புன்னைவனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவனே காவல். தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டுப் பட்டது. அப்போது அவன் புற்றில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான். அதே சமயத்தில் உக்கிரபாண்டியர் அடுத்த வனத்தில் வந்திருப்பதாக அறிந்து செய்தி தெரிவிக்க ஓடினான். காவற்பறையன் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தைக் கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியர் ஒன்றும் செய்ய அறியாது திகைத்திருந்த போதுதான் காவற்பறையன் ஓடிவந்து அரசரிடம் செய்தி தெரிவித்து உடன் வர அழைத்தான். உக்கிரபாண்டியர் சென்று புற்றினையும் புற்றிடங் கொண்டாரையும், கூழைவாலினதாக்கிய பாம்பினையும் கண்டார். சங்கரனார் அசரீரியாக ஆனைதர, காட்டை அழித்து, நாடாக்கி உக்கிரபாண்டிய மன்னர் 947 ஆண்டுகளுக்கு முன் இக்கோவிலை கட்டிச் சங்கரநயினார் கோவில் ஊரையும் தோற்றுவித்தார். சங்கரன் கோவில் முகப்பில் நூற்றி இருபத்தைந்து அடி உயரமுள்ள ஒரு பெரிய ராஜ கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் ஒன்பது நிலை கொண்ட கோபுரமாகும். கோபுரம் தென்வடக்காக 56 அடி நீளம், கீழமேல் அகலம் 15 அடி கொண்டது. உச்சியில் உள்ள குடம் 7 அடி நான்கு அங்குலம் உயரமாகும். கோவிலில் கோபுரத்தைத் தாண்டியதும் (கோவில் நிர்வாக அலுவலக இடப்புறத் தூணில்) காவற்பறையனுடைய திருவுருவத்தை இப்போதும் காணலாம். காவற்பறையனுக்கு ஊரில் தெற்கே ஒரு சிறு கோயில் இருக்கிரது. அது இருக்கும் தெரு காப்பறையந்தெரு என்று வழங்கிவந்தது. காப்பறையன் தெரு, தற்போது முத்துராமலிங்கம் தெருவென ஆகிவிட்டது. ஆனால், காவற்பறையன் கோவில் அதே தெருவில் இன்றும் உள்ளது. நித்திய பூஜைகளும் உண்டு. சித்திரைவிழா ஆரம்பமாகுமுன்பு, காவற்பறையனுக்குச் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னரே பெரிய கோயிலிலே கொடி ஏற்றம் நிகழும். சங்கரலிங்கப் பெருமான் திருச்சந்நிதிக்கு செல்லும்போது பலிபீடம், கொடிமரம் இவற்றைத் தாண்டியவுடன் தூண்களில் உக்கிரபாண்டியனையும், உமாபதி சிவாச்சாரியாரையும் காணமுடியும். உக்கிரபாண்டியர் கோயிற் பூஜைக்கு மிகுந்த நிலங்களைக் கொடுத்து ஒரு சித்திரை மாதத்திலே யானை மேலேறிக்கொண்டு தாம் இறைவனைக் காணக் காரணமாயிருந்த இடமாகிய பெருங்கோட்டூருக்குப் போய் யானை பிடிமண் எடுத்துத் தரக் கொண்டுவந்து பெருந்திருவிழா நடத்தி மகிழ்ந்தார். இத்திருவிழா இன்றும் நடைபெறுகின்றது. பொதுவாக ஸ்ரீசக்ர பிதிஷ்டை அம்பாள் காலடிகளில் தான் இருக்கும். ஆனால் இங்கு கோமதி அம்மன் சன்னிதி முன் பெரிதாக சக்கரம் உள்ளது. பேய் பிசாசு மற்றும் துர்சக்தியால் பீடிக்கப்பட்டவர்கள் மனமாச்சர்யங்கள், பேதங்கள், மன நோய்கள் எல்லாம் நீங்கிட அதில் உட்கார்ந்து தியானித்துக் கொள்ளலாம். கோவிலின் உள்ளே அம்மன் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் உள்ள பாம்பு புற்று வன்மீகம் என்று அழைக்கப்படுகிறது. இப்புற்றில் இருந்து எடுக்கப்படும் மணலை உடலில் தடவிக் கொண்டால் நோய்கள் நீங்கும். மருத்துவ குணமுடைய இந்த புற்றுமண் வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகும். இந்த புற்று மண்ணை உடலில் பூசியும், தங்கள் வயல்கள், வீடுகளில் தெளித்தும் பலன் காண்பார்கள். இதனால் உடல் நோய்கள், பூச்சிக்கடியின் தாக்கம், சரும நோய்கள் நீங்கும். வயல், வீடுகளில் விஷ ஜந்துக்கள் வராது. , செல்வம் செழிக்கும் . கோவிலுக்கு வருவோர், தங்கம், பித்தளை, வெண்கல பொருட்கள், துணி, ஆடு, கோழி, உப்பு, மிளகாய், மிளகு, காய்கறிகள், பலவகைத் தானியங்கள் மற்றும் பாம்பு, தேள் ஆகியவற்றின் வெள்ளியால் செய்யப்பட்ட சிறு தகடுகளை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். ஸ்தல வரலாறு:- சங்கன், பத்மன் என்ற இரண்டு நாக அரசர்கள் இருந்தனர். நண்பர்களாக இருந்தாலும் எப்போதும் சர்ச்சைதான். சிவனா? விஷ்ணுவா? இருவரில் யார் பெரியவர்? என்பதுதான் அவர்களின் சர்ச்சைக்கு மூல காரணம். சங்கனோ சைவன், பத்மனோ வைணவன். இருவருமோ தங்களின் கருத்தை நிலை நிறுத்த வேண்டி அன்னை பார்வதியை சரணடைந்தனர். இருவரும் ஒருவர்தான் என்பதை நிரூபிக்க அன்னை அந்த சிவனிடமே வரம் கேட்டாள். சிவபெருமானும் மனமுவந்து, பொதிகை மலைப் பகுதியில் புன்னை விருட்சம் உள்ள புன்னை வனத்தில் பலர் தவம் இயற்றுவர். அங்கு நீயும் தவம் செய்தால், நீர் விரும்பிய திருவுருவில் காட்சி தருவேன்” என்றார். பார்வதியும் புன்னை வனத்தில் சிவனை நோக்கி தவமியற்றினார். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஆடிப் பவுர்ணமியில் புன்னை வனத்தில் சங்கர நாராயணராக உமாதேவி, சங்கன், பத்மன் உள்ளிட்ட சகலருக்கும் காட்சி கொடுத்தார். ஒரு புறம் சிவப்பு. மறுபுறம் சியாமளம். ஒரு புறம் கங்கை-சந்திரன் சடைமுடி, மறுபுறம் வஜ்ர-மாணிக்க மகுடம். ஒரு புறம் மழு, மறுபுறம் சங்கு. ஒரு புறம் புலித்தோல், மறுபுறம் பீதாம்பரம். ஒரு புறம் ருத்திராட்சம், மறுபுறம் துளசி மாலை. ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான். மறுபுறம் சைவச் சங்கன் பெருமாளுக்குக் குடை பிடித்து நிற்கிறான். இப்படி அரிஹரனாய் காட்சி தந்த இறைவனை கண்டு உருகி நின்ற உமாதேவியாரிடம், ‘வேண்டிய வரங்களைக் கேள்’ என சிவ பெரு மான் கூறினார். அம்மனின் வேண்டுகோளின்படி, ஈசனும் சிவலிங்க வடிவமாக புன்னைவனத்தில் உமாதேவியாருடன் எழுந்தருளி, அங்கேயே தேவியருடன் தங்கினார். ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்குக் காட்சியளித்த நாளில் ஆடித் தபசு விழா கொண்டாடப்படுகிறது. நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம், விஷஜந்துக்கள் பயம் நீங்கும். கோவிலின் உள்ளே அம்மன் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் உள்ள வன்மீகம் என்ற பாம்பு புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள். ஒவ்ஒரு கோவிலிலும் அந்த தெய்வத்தை தரிசிக்க ஒரு முறை உண்டு. உதாரணமாக ♥ தில்லை சென்றால் காளியை தரிசித்து பின்னரே நடராஜரை தரிசிக்க வேண்டும். ♥ பெருமாளை சேவிக்கும்போது பாதாதி கேசமாக முதலில் பாதம் பின் வயிறு பின் முகம் என தரிசிக்க வேண்டும். ♥ காசி யாத்திரை சென்றால் ராமேஸ்வரத்தில் மண் எடுத்து காசியில் விட்டு பின் கங்கா ஜலத்தை ராமேஸ்வரம் கொண்டு வந்து அந்த நீரை ஸ்வாமிக்கு அபிஷேகித்து யாத்திரையை பூர்த்தி செய்வது மரபு. அது போல கோமதியை தரிசிக்க ஒரு சம்பிரதாயம் உள்ளது. ♥ கோமதியை தரிசிக்க வருவோர் முதலில் மதுரையில் மீனாட்சியை தரிசிக்க வேண்டும். மீனாட்சியை தரிசித்து அனுமதி பெற்று பின் கோமதியை தரிசிக்க வேண்டும். கோமதியை தரிசித்து அவள் அனுக்கிரகத்தை பெற்று பின் மீண்டும் மீனாட்சியை தரிசித்து நன்றி கூறிவிட்டு தம் இல்லத்துக்கு திரும்ப வேண்டும். ஏன் என்றால் கோமதி மஹாத்ரிபுரசுந்தரியாக ராஜராஜேஸ்வரியாக அன்னை ஆவுடை நாச்சியார் பாண்டியநாட்டை ஆட்சி செய்கிறாள். இவளுக்கு மந்திரியாக இருப்பவள் தான் மீனாட்சி. ராஜமாதங்கியாக இருக்கும் ச்யாமளா மீனாட்சியை தரிசித்து அம்மா நான் உனது ராணியான கோமதியை பார்க்கனும் அனுமதி கொடு என்று வேண்டி அவள் அனுமதியை பெற்று பின் கோமதியை தரிசிக்க வேண்டும். பின் மீண்டும் மீனாட்சியை பார்த்து உன் அனுமதியால் நான் கோமதியை பார்த்துவிட்டேன் நன்றி என்று கூறிவிட்டு இல்லம் திரும்ப வேண்டும். பாமர மக்கள் கோமதி அக்கா மீனாட்சி தங்கை; அதனால் தங்கையை பார்த்துட்டு அக்காவ பாக்கனும்ன்னு சொல்வது பழக்கம். பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இத்தலம் தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத தலங்களில் மண்தலம் (ப்ரித்திவி) ஆகும். இந்த கோவில் செல்ல திருநெல்வேலி புது பஸ் நிலையத்தில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு பஸ் உண்டு. நெல்லையில் இருந்து 52 கிலோ மீட்டரில் இந்த கோவில் உள்ளது. கோவில் பட்டியில் இருந்து கழுகுமலை வழியாகவும் சங்கரன்கோயிலை அடையலாம். ராஜபாளையம் மற்றும் தென்காசியில் இருந்தும் சங்கரன்கோவிலுக்கு பாதை உள்ளது. நடை திறந்திருக்கும் நேரம்:- காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை

Friday, December 10, 2021

சீர்காழி சட்டநாதர் .

🔯சீர்காழி சட்டைநாதர் திருக்கோயில். சிறப்பு பதிவு சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். திருஞான சம்பந்தர் சைவமும், தமிழும் தழைக்கவும், உலகம் உய்யவும் முருகப்பெருமானின் திரு அவதாரமாக அவதரித்தவர். சீர்காழித் திருத்தலத்தில் சிவபாத இருதயர்-பகவதி அம்மையாருக்கு மகனாகப் பிறந்த அவர், தன்னுடைய மூன்று வயதில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்திற்கு தந்தையுடன் சென்றார். தந்தை அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடியபோது, சம்பந்தருக்கு பசி ஏற்பட்டது. அவர் ஆலயத்தையும், குளத்தில் மூழ்கி நீராடிக்கொண்டிருந்த தந்தையையும் பார்த்தபடியே அழுதுகொண்டிருந்தார். குழந்தையின் அழுகுரலை குளத்தினுள் மூழ்கி நீராடிய தந்தையால் உணர முடியவில்லை. ஆனால், குழந்தையின் அழுகுரலைக் கேட்ட சீர்காழி திருத்தல ஈசன் தோணியப்பர், பார்வதியிடம் குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அவ்வண்ணமே அன்னை உமையவளும் ஞானப்பாலை சம்பந்தருக்கு ஊட்டி, அவரது கண்ணீரைத் துடைத்து விட்டு, சிவபெருமானுடன் தரிசனம் கொடுத்து மறைந்தார். சிறிது நேரத்தில் குளித்து விட்டு வந்த சிவபாத இருதயர், சம்பந்தரின் வாயில் பால் எச்சிலைக் கண்டு ‘யார் தந்த எச்சில் பாலை உண்டாய்? சொல்' எனக் கேட்டு, சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார். அப்போது சம்பந்தர், சிவனும்- பார்வதியும் அம்மையப்பனாய் தரிசனம் தந்த திசையைக் காட்டி, ‘தோடுடைய செவியன் விடையேறி' என்று பதிகம் பாடலானார். ஆம்! அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. மூன்று வயது குழந்தையின் பாடலைக் கேட்டு சொக்கி நின்றது கூட்டம். பிரளய காலத்தில் தோணியில் அம்மையும் அப்பனும் இங்கு வருவதால், இறைவன் தோணியப்பர் என்ற பெயரிலும், அன்னை பெரியநாயகி என்ற பெயரிலும் அருள்கின்றனர். இவர்கள் இருவரும் ஆலய சிறு குன்றின் நடுப்பகுதியில் வீற்றிருக்கிறார்கள். இவர்களே சம்பந்தருக்கு காட்சி தந்து ஆட்கொண்டவர்கள். திருஞானசம்பந்தர் வாழ்ந்த வீடு, சீர்காழியில் திருஞானசம்பந்தர் தெருவில் அமைந்துள்ளது. தற்போது அந்த வீட்டில் தேவாரப் பாடசாலை நடைபெற்று வருகிறது. சீர்காழியில் மூன்று மூர்த்தங்களாக ஈசன் அருள்பாலித்து வருகிறார். பிரம்மதேவர் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர், கிழக்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். இவர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். பிரம்மபுரீஸ்வரரின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் திருஞானசம்பந்தர் உற்சவராக எழுந்தருளியுள்ளார். பிரம்மபுரீஸ்வரரின் கருவறைக்கு மேல்தளத்தில் கட்டுமலையில் தோணியப்பரும், பெரிய நாயகி அம்மனும் குரு மூர்த்த வடிவில் அருள்புரிகிறார்கள். தோணியப்பர், பெரியநாயகி அம்பாளின் பின்புறம் பிரம்மதேவர், விஷ்ணு, சரஸ்வதி, லட்சுமி என அனைவரும் சிவபெருமானை வணங்கிய வண்ணம் திருக்கயிலைக் காட்சி பெறுகிறார்கள். இதற்கு அடுத்து சில படிகள் ஏறிச் சென்றால் மலையின் உச்சியில் சட்டைநாதர், சங்கம வடிவினராக உள்ளார். இரண்யனைக் கொன்ற நரசிம்ம மூர்த்தியின் உக்கிரம் குறையவில்லை. இதையடுத்து சிவபெருமான் நரசிம்மருடன் போரிட்டு, அவரது தோலை உரித்து சட்டையாக போர்த்திக் கொண்டார். இதனால் இந்த இறைவனுக்கு ‘சட்டை நாதர்’ என்று பெயர். இவர் பைரவர்களின் தலைமையை ஏற்றவர். நின்ற திருக்கோலத்தில் வலது கரம் சின் முத்திரையைக் காட்டுகிறது. இடது திருக்கரம் கதையை பற்றி இருக்கிறது. இந்தத் திருக்கோவில் தேவஸ்தானம் ‘சட்டைநாதர் தேவஸ்தானம்’ என்றே அழைக்கப்படுகிறது. சீர்காழியில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் நிறைவில் ‘சட்டைநாதர் உலா' நள்ளிரவில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டால், நாம் மனதில் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாத திருவாதிரை நன்னாளில் காலையில் தருமபுரம் ஆதீனம் குரு மகாசன்னிதானம், இளைய சன்னிதானம் முன்னிலையில், ஆயிரக்கணக்கான அடியவர்கள் சூழ ‘சம்பந்தருக்கு திருமுலைப்பால் ஊட்டிய ஐதீக விழா' நடைபெறுகிறது. அன்று மாலையில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் உள்ள சம்பந்தர் உற்சவமூர்த்தி, அருகில் உள்ள திருக்கோலக்கா சிவாலயம் சென்று நள்ளிரவில் திருக்கோலக்கா ஈசனிடம் பொற்றாளமும், அந்த பொற்றாளத்தின் ஓசையை அத்தல ஓசை நாயகி அம்மனிடமும் பெற்று மறுநாள் காலையில் மீண்டும் சீர்காழி சட்டைநாதர் ஆலயம் திரும்புவார். சீர்காழிக்கு மேற்கில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கோலக்கா. மூன்று வயதில் தோடுடைய செவியன் பதிகம் பாடி ஈசனை ஆராதித்த சம்பந்தர், தனது சிவத்தல யாத்திரையை தொடங்கினார். அப்போது அருகில் உள்ள திருக்கோலக்கா திருத்தலம் சென்றடைந்தார். திருக்கோலக்கா சென்ற சம்பந்தர் அங்கு ஈசன் சன்னிதியில் தனது சின்னஞ்சிறு கைகளைத் தட்டி கைத்தாளம் போட்டுக் கொண்டே, இறைவனை துதித்து பதிகம் பாடினார். ‘மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ் உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ’ என்று தொடங்கிய அந்தப் பதிகத்தை சம்பந்தர் பாடிக்கொண்டிருந்த போது, அவரது பிஞ்சுக் கரங்கள், கைதாளமிட்டதன் காரணமாக சிவந்து போயின. பிஞ்சு கரங்கள் சிவக்க.. சிவக்க.. கைத்தாளம் இட்டு, தன் துதிபாடும் குழந்தையை நினைத்து அகமகிழ்ந்த சிவபெருமான், ‘சம்பந்தரின் கை வலிக்குமே’ என்ற எண்ணத்தில் அவருக்கு உதவ முன்வந்தார். திருத்தாளமுடையார், ஓசை கொடுத்த நாயகி அதன்படி ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சரம் எழுதப்பெற்ற பொற்றாளத்தை திருஞானசம்பந்தருக்கு, இத்தல ஈசன் ‘ஹாரக்குதவனேஸ்வரர்’ கொடுத்தருளினார். ஆனால் அந்த பொற்றாளம் ஒலி எழுப்பவில்லை. உடனடியாக இத்தல அம்பிகையான அபீதகுசாம்பாள் அந்த பொற்றாளத்திற்கு ஓசை கொடுத்தார். சம்பந்தருக்கு பொற்றாளம் கொடுத்து அருளியதால், அன்றுமுதல் இத்தல ஈசன் ‘திருத்தாளமுடையார்’ என்றும், ‘சப்தபுரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படலானார். அதே போல் பொற்றாளத்திற்கு ஓசை வழங்கிய அம்பிகை ‘ஓசை கொடுத்த நாயகி’ என்றும் ‘தொனிபிரதாம்பாள்’ என்றும் பெயர் பெற்றார். சுந்தரர் இத்தல இறைவனைப் பற்றி பாடும் போது, சம்பந்தர் இங்குள்ள ஈசனிடம் பொற்றாளம் பெற்ற நிகழ்வை பதிந்துள்ளார். ஆம்! ‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு, உலகவர்முன் தாளம் ஈந்தவனை, கோலக்காவினிற் கண்டு கொண்டேனே' என்று போற்றிப்பாடுகிறார் சுந்தரர். ஓசை கொடுத்த நாயகி அம்மன் சன்னிதி வாசலில் பிள்ளையாரும், பழனி தண்டாயுதபாணியும் இருபுறமும் தனிச் சன்னிதியில் அருள்பாலிப்பது இத்தலத்தின் பெரும் சிறப்பு. சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமளா சாஸ்திரிகளும் இத்தலம் வந்து வழிபட்டுள்ளனர். மந்தாகினி என்ற பெண்மணியின் மகனான விஸ்வநாதன் பிறவி ஊமை. அவனை அழைத்துக்கொண்டு இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி, ஈசன்- அம்பாளை முறைப்படி வழிபாடு செய்து, பின்னர் இத்தல கொன்றை மரத்தையும் சுற்றி வந்து வழி பட்டுச் சென்றாளாம் மந்தாகினி. சிறிது காலத்தில் மந்தாகினியின் மகன் விஸ்வநாதன் ‘அம்மா' என்றழைத்து பேச ஆரம்பித்தானாம். மகிழ்ந்த மந்தாகினி மீண்டும் இத்தலம் வந்து நன்றிப் பெருக்குடன், 42 கிராமில் தங்கத்தால் தாளம் செய்து அதனை இந்தக் கோவிலுக்கு அளித்துள்ளார். இதே போல் 12 வயதாகியும் பேச்சு வராத ஒரு சிறுவனை அவனது பெற்றோர் இந்த தலத்திற்கு அழைத்து வந்து வழிபட்டு சென்றனர். பின்னர், இத்தலத்தில் சம்பந்தர் பாடிய, ‘மடையில் வாளை பாய’ என்ற பதிகத்தை வீட்டிற்குச் சென்று தினமும் பாராயணம் செய்து வந்துள்ளனர். இதன் பலனாக அந்தச் சிறுவன் பேசத் தொடங்கினான். அவனின் பெற்றோரும் பொன்னால் ஆன தாளத்தை செய்து காணிக்கையாக இந்தக் கோவிலுக்கு அளித்துள்ளனர். இவ்வாறு அம்மனின் அருளால் பேச்சு வந்தவர்கள், தங்களின் முழு முகவரியுடன் அந்த விவரத்தை ஆலய பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். இந்த பதிவேட்டின் படி பார்க்கும்போது, அம்மன் அருளால் பேச்சு வரப்பெற்றவர்களின் எண்ணிக்கை 600-க்கும் மேல் என்பது ஓசை நாயகியின் அருளுக்கு சாட்சி. வாய் பேச முடியாதவர்கள், திக்குவாய் உள்ளவர்கள் மற்றும் பிறந்து மூன்று வருடமாகியும் பேச்சு வராத குழந்தைகளை இந்தக் கோவிலுக்கு அழைத்து வந்து தாளபுரீஸ்வரருக்கு ‘அஷ்டோத்திரமும்’, ஓசை கொடுத்த நாயகிக்கு ‘வாக்வாதினி அர்ச்சனை’யும் செய்து, 2 லிட்டர் தேனை அம்பாளுக்கு நிவேதனம் செய்து, நிவேதனம் செய்யப்பட்ட தேனை வாய் பேச முடியாதவர்களின் நாவில் தேய்த்து, ‘மடையில் வாளை பாய’ என்ற சம்பந்தரின் தேவாரப் பதிகத்தை தினமும் பாடிவர உடனடி பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். கருவறையில் கிழக்கு நோக்கிய சுவாமியையும், அம்பாளையும் வணங்கி ஆலயப் பிரகார வலம் வந்தால் விநாயகர், மகாலட்சுமி, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், சனிபகவான், சூரியன், சந்திரன், நால்வர் சன்னிதி, பைரவர் சன்னிதிகளும் உள்ளன. சனிக் கிழமை மற்றும் அஷ்டமி திதி நாட் களின் அந்திப்பொழுதில், இத்தல சனிபகவானையும் பைரவரையும் தொடர்ச்சியாக 8 முறை வழிபாடு செய்து வர நவக்கிரக தோஷங்கள் யாவும் அகலும் என்கிறார்கள். 🔯இரண்டு அம்மன்கள்* திருக்கோலக்கா கோவிலில் ஓசை கொடுத்த நாயகி அம்மனுக்கு இரண்டு சிலைகள் உள்ளது. இதனை பழைய அம்மன், புதிய அம்மன் என்று அழைக்கிறார்கள். கருவறையில் எழுந்தருளி இருக்கும் ஓசை கொடுத்த நாயகி அம்மன் புதியவராம். கருவறையின் முன் மண்டபத்தில் வடபுறமாய் தனிச் சன்னிதியில் எழுந்தருளி இருக்கும் ஓசை கொடுத்த நாயகி அம்மனை, பழைய அம்மன் என்கிறார்கள். முன்பு பழைய அம்மன் சிலையே கருவறையில் இருந்துள்ளது. ஓசை நாயகி அம்பிகையின் பழைய சிலையில் சிறிது பின்னம் ஏற்பட, ஊரார் தற்போது கருவறையில் உள்ள புதிய சிலையை பிரதிஷ்டை செய்து விட்டு, பழைய சிலையை அகற்றிவிட்டனர். அன்றிரவு ஊராரின் கனவில் வந்த அம்பிகை, ‘உங்கள் வீட்டில் யாருக்கேனும் உடலில் பின்னம் (ஊனம்) ஏற்பட்டால் அகற்றி விடுவீர்களா?’ எனக் கேட்க, தங்கள் தவறை உணர்ந்த ஊரார்... பின்னம் ஏற்பட்ட பழைய சிலையையும், மூலஸ்தானத்தின் அருகிலேயே தனி இடத்தில் வைத்து பூஜிக்கத் தொடங்கிவிட்டனர். இத்தல அம்பாளுக்கு புடவை சாற்றுபவர்கள், கண்டிப்பாக இத்தல பழைய அம்மனுக்கும் புடவை சாற்றிட வேண்டும் என்பது ஐதீகம். சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம். இங்கிருந்து மேற்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோலக்கா திருத்தலம் அமைந்துள்ளது. ஓம் நமசிவாய நமஹா ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏