http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Sunday, December 26, 2010

                            

 ஓம்
ஸ்ரீ சுவாமி ஐயப்பனே சரணம்.
புஜா விரத முறைகள்
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
      தர்மசாஸ்தா எழுந்தருளியிருக்கும் சபரிமலை ஒரு வனப்பகுதியைக் கொண்டது. அங்கே சிங்கம்புலி யானை போன்ற வனவிலங்குகளுக்குக் குறைவில்லை.ஐயப்பனை வணங்கச் செல்லும் பக்தர்கள் தூய்மையைக் கடைப்பிடித்தால்தான் பாதுகாப்பாய்ச் செப்ன்றுவர முடியும். மனம், வாக்கு, சரீரம் இவற்றைச் சுத்தமாய் வைத்துக்கொண்டு, ஒளிமயமான ஐயப்பன் வடிவை உள்ளத்தில் பதித்து, விரதமிருக்கவேண்டும்.

      ஐயனைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் முறையாக விரதமிருந்து உருத்திராட்ச மாலை (மணிமாலை) அணிய வேண்டும்.  மாலை அணிந்த நாள் முதல் நெறிமுறைகளை சரிவரக் கடைப்பிடிப்பது முக்கியம்.

      சனிக் கிழமையும், கார்த்திகை முதல்தேதியும் மாலை அணிய உத்தமம். மாலை அணிந்தபின்பு ஆலயத்தை வலம் வந்து தேங்காய் உடைக்க வேண்டும். ஒரு மண்டலம் 41 நாட்கள் நெடுகவும் வண்ண ஆடைகள் அணிய வேண்டும். ஆடை கறுப்பு, காவி அல்லது நீல வண்ணத்தில் இருக்கலாம்.

      சபரிக்குச் செல்லவிருக்கும் பக்தர்கள் முதலில் குருசாமியிடம் விண்ணப்பித்துக் கொள்ளவேண்டும்.

      கார்த்திகை முதல் நாள், அல்லது சனிக்கிழமை. அல்லது உத்திர நட்சத்திரம் இவற்றிலொன்றைத் தேர்ந்தெடுத்து மாலை அணிந்து கொள்வது சிறப்பு. விரதம் தொடங்கும் நாளில் உபவாசமிருந்து, ஆலய வழிபாடு செய்து, ஐயப்பனின் திரு முன்பாய் மூன்று முறை சரணம் சொல்லவும். குருசாமி மாலையை அணிவிப்பார். பின்னர் குருசாமியை வணங்கி, அவருக்கு தட்சணை தந்து, வலம் வந்து, தேங்காய் உடைத்து இறைவனை  வழிபட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

      விரத காலம் முழுவதும் காலில் செருப்புக்கள் அணிவதில்லை. கட்டிலில், மெத்தையில் படுத்துறங்கக் கூடாது. வழக்கமுடையவர்கள் புலால், மதுபான வகைகளை உட்கொள்ளக்கூடாது.

      விரதமிருப்பவர் புலனடக்கத்தோடு இருக்கவேண்டும். அக்கால கட்டத்தில் அவர் தாம்பத்ய உறவைத் தவிர்த்தல் அவசியம். உடலுறவு பற்றிய விருப்பமோ, சிந்தனையோ, பேச்சோ இருக்கக் கூடாது. மோகத்தில் தூயமை கெடும், ஆன்மவல்கிமை குறையும்.

      யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது. பொய் சொல்வது,ஆசை வைப்பது கூடா. நல்லதை நினைத்து நல்லதைச் சொல்லி, நல்லதையே செய்துவரவேண்டும்.

      மரணம் நிகழ்ந்த வீட்டிற்குச் செல்வதில்லை. துக்கம் விசாரிப்பதில்லை. மாதவிடாயான பெண்களைப் பார்ப்பதுகூட தவிர்ப்பர். ஏதேனும் தீட்டு ஏற்பட்டுவிட்டால் கோமயம் தெளித்துக் குளிக்கவேண்டும்.

      விரத காலத்தில் ஒருநாள் ஐயப்ப பூஜை நடத்துவது சிறப்பு. ஐயப்ப பக்தர்களை அழைத்து,அனைவரும் பக்திப் பாடல்கள் பாடி பரவசத்துடன் சுவாமிக்குப் பூஜை செய்யவேண்டும். இயன்ற அளவில் அன்னதானம் செய்ய வேண்டும்.

      சபரிமலைக்கு முதன் முதலாய்ப் பயணம் மேற்கொள்ளும் பக்தரைக்  கன்னிஐயப்பன் என்பார்கள்.

      தினமும் தோத்திரப்பாடல்களைப் பாடி, இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். சதாகாலமும் ஐயப்ப ஸ்மரணையாய் இருந்து வருவது முக்கியம். நாற்பத்தியோரு நாள் விரதத்தையும் நல்ல முறையில் பூர்த்தி செய்ய இது  உதவும்.

      சபரி மலைக்குச் செல்பவர் மார்கழி மாத இறுதிக்குள் புறப்பட்டுவிடவேண்டும்.

      ஐயப்ப பக்தர்கள் ஒருவரை ஒருவர் ‘ஐயப்பா சரணம்’ ‘சுவாமியே சரணம்’ சொல்லி வணங்க வேண்டும். ‘என்னில் இருப்பவனை உன்னிலும் காண்கிறேன்’ என்று ஐயப்பனை எங்கும் எதிலும் காணும் மனப் பக்குவம் இதன் மூலம் வளர்கிறது; வெளிப்படுகிறது.

கவனத்தில் கொள்ள வேண்டியவை. 

  • மாலை 108 அல்லது 54 மணிகள் கொண்டதாய் இருக்க வேண்டும். துளசி மணி அலது உருத்திராட்ச மாலை உகந்தது. அத்துடன் ஐயப்பன் திருவுருவப் பதக்கம் இணைத்து அணியவும்.
  • பலமுறை விரதமிருந்து, சபரிமலை சென்று  பக்குவம் அடைந்த ஐயப்பன்மார் ஒருவரைக் குருசாமியாய்க் கொள்ள வேண்டும்.
  • திருக்கோயிலிலோ, திருவிளக்கு முன்பாகவோ குருசாமியை வணங்கி, அவருடைய திருக்கரங்களால் மாலை அணிய வேண்டும். அல்லது தாய் தந்தை மூலமாகவோ, இறைவன் திருவடிகளில் வைத்து சக்தியூட்டப்பட்ட மாலையினையோ அணிந்து கொள்ளலாம்.
  • தரையில் உறங்கவும்; பகலில் உறங்கக் கூடாது
  • சூதாடுதல்,  திரைப்படம் பார்த்தல், புகை பிடித்தல் போன்ற கேளிக்கைகளை அறவே தவிர்க்கவேண்டும்.
  • எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சவரம் செய்து கொள்வது கூடாது. காலணிகள், குடை பயன்படுத்துவதில்லை
  • மற்றவர்களுடன் பேசும் போது ‘சாமி சரணம்’ தொடங்கி , பின் விடை பெறும் போதும் ‘சாமி சரணம்’ சொல்ல வேண்டும்.
  • மாலை தரித்த ஐயப்பன்மார் வீட்டில் தவிர்த்து மற்றையோர் வீடுகளில் உணவு கொள்ளக்கூடாது..
  • பயணம் புறப்படுகிறவர் யாரிடமும் ‘போய் வருகிறேன்’ என்று சொல்லக்கூடாது.
  • இருமுடிகட்டு பூஜையைத் தன் வீட்டிலோ, கோயில்களிலோ வைத்திக் கொள்ளலாம்.
  • புறப்படுவதற்காக வீதிக்கு வந்தவர் வாசற்படியில் விடலைத் தேங்காய் உடைத்து ஐயப்ப சரண முழக்கத்துடன், பின்னால் திருப்பிப் பாராமல் ஒரே நோக்கத்துடன் பயணத்தைத் தொடங்கவேண்டும்.
  • யாத்திரை புறப்பட்ட நேரத்திலிருந்து ஐயப்ப சந்நிதானத்தை அடையும் வரை தங்கள் இருமுடியைத் தாங்களாகவே தலையிலிருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றி வைக்கவோ கூடாது. குருநாதர் அல்லது  மற்ற ஐயப்பன் மாரைக் கொண்டுதான் ஏற்றவோ இறக்கவோ செய்யவேண்டும்.
  • காட்டு வழியில் செல்லும் போது வன விலங்குகள் தங்களை நெருங்காதபடிக்கு கூட்டமாய் சரணம் சொல்லவேண்டும். சங்கு ஒலிப்பதும் வெடி வெடிப்பதும் பாதுகாப்புக்கு வகை செய்யும்.
  • பம்பை நதிக்கரையில் முன்னோர்களுக்கு ஈமக் கடன் செய்து (தர்ப்பணம்)  அவர்களுடைய ஆத்மா சாந்தி பெறச் செய்யவேண்டும்.
  • பம்பையில் சக்தி பூகை செய்யும் போது ஐயப்பன்மார்கள் சமைக்கும் அடுப்பில் இருந்து எடுக்கப்பட்ட சிறிதளவு  சாம்பல் சேகரித்து; சந்நிதி ஆழியில் இருந்து எடுக்கபட்ட சாம்பலும் அத்துடன் கலந்து தயாரிக்கப்படுவதே சபரிமலை பஸ்பம். இது சக்தி வாய்ந்தது.
  • இருகமுடியில் ஐயப்பனுக்காகக் கொண்டுசெல்லும் நெய்த் தேங்காயை சந்நிதானத்தில் உடைத்து அபிஷேகம் செய்து பெற்றுக் கொள்ளவேண்டும். யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும், இந்த நெய்யையும், விபூதிப் பிரசாதங்களையும் எல்லாருக்கும் கொடுக்கவேண்டும்.
  • குருவிற்கு தட்சிணை கொடுக்கவேண்டிய சந்தர்ப்பங்களில் தங்களால் இயன்றதைக் கொடுக்கலாம். அது சிறுதொகையாயினும் ஆதனைப் பெரும்  பொருளாய் ஏற்று ஐயப்பனுக்கே செலுத்தி அருள் பெறுவது குருசாமிக்குச் சிறப்பு. 
  • யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் திருவருள் பிரசாதம் கட்டினைத் தலையில் எந்தியபடி வாயிற்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டுக்குள் நுழைய வேண்டும். வழிபாட்டு அறையில் கற்பூர ஆரத்தியோடு கட்டினை அவிழ்த்துப் பூஜை செய்து பிரசாதங்களை எல்லோருக்கும் வழங்கவேண்டும்.
  • யாத்திரை இனிது நிறைவேறியதும் குருநாதர் மூலம் மாலையைக் கழற்றி ஐயப்பன் திரு உருவப்படத்திற்கு அணிவித்துவிட்டு விரதம் நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
 இதுவரை 73 வயது வரை கிடைக்காத பேறு பெற்றேன். என் இளைய மகனுடன் ஒரு குழுவான ஐயப்பமாருடன் கன்னி ஐயப்பனாகச் சென்று வழிபட்டு வந்தேன். ஆஸ்த்மா தொல்லையால் உடன் வருவோருக்கு பெரும் சுமையாய் இருப்பேனோ வென்ற ஐயப்பாட்டுடன் அதனைத் தவிர்க்க அந்த ஐயப்பனை அருள் பிரசாதம் யாசித்துச் சென்று வந்து விரதம் நிறைவு செய்தேன்.

சென்னையிலிருந்து கோட்டயம் ரயிலடியில்  இறங்கி, அங்கிருந்து எருமேலிக்கு காரில் சென்றோம். ஐயப்பன் மார்கள் அனைவரும் வண்ண உடை யணிந்து, குழந்தைச் சிறுவர் சிறுமி, கட்டழகு உடம்பு படைத்தவரும், நோயில் நொடித்து அழுந்தியவர்களும்,  மாதவிலக்கு நீங்கிய பெண்மணிகளும் ஒரு சேரத் தன் நிலை மறந்து, முகவரி மறந்து, பட்டயங்கள், பணப்பெருக்கம், வயது நிலை அனைத்தும் மறந்து, சாதி மதம், இனம், உயர்வு தாழ்வு அற்று ஒருவரை ஒருவர் வயது வரம்பின்றி கால்களில் வீழ்ந்து வணங்கி ,  வாபரை (இஸ்லாமியர்)வழிபட்டு உடம்பு முழுதும் வண்ணப் பொடி பூசி பேட்டை துள்ளுதல் என்ற மரபின் படி லட்சக்கணக்கானோர்  ஆரோக்கியத்துடனும், ஆனந்தத்துடனும் ஆதிவாசிகளின் நடனம் போன்று ஆடிப்பாடி வழிபாடுசெய்துவிட்டு. புறப்பட்டோம்.

       பம்பா நதிக்குசென்றோம். இயற்கைச் சூழலில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்த, மேகமண்டலத்தைத் தொடும் உயர்ந்த ரப்பர், யூகாலிபட்டஸ் போன்ற பல்வகை மரங்களின் அணிவகுப்பும், அதில் குடி கொண்ட பறவையினங்களின் ஆன்மஒலியும் பக்தர்களின் புற அழுக்கினயும், அகவிருளையும் துடைத்தெடுக்கும், தண்மைசேர் கங்கையாகிய பம்பாநதியில் முழ்கி எழுவதே ஒரு பிறவி முடிந்து மறுபிறவி எடுத்தற்கு ஒப்பானது. 

  திருவாங்கூர் தேவஸ்வம் போர்டின் டிராக்டர்களும், வணிக மக்கள் பொருள்களை ஏற்றிச் செல்லும் கழுதைகளும் ஐயப்பன் மார்களின் மத்தியில் வழிகேட்டுப் பெற்றுச் செல்கின்றன. என்போன்று நடைதளர்ந்தவர்களை நால்வர் பிரம்பு நாற்காலியில் அமரவைத்துத் தூக்கி ஏற்றியும் இறங்கும் போது உதவிசெய்தும் ‘டோலி சேவை ’ செய்கின்றனர

      இருமுடிதாங்கியவர்கள் மட்டுமே 18.படிகள் ஏற அருகதையுடையவர்கள்.
இருமுடி தலைமேற் கொள்ளாதவர் மாற்றுப் படியில் ஏறுகிறார்கள். திருப்பதியில் செல்லும் அலை வரிசையில் பக்தர் குழாம் தரிசனம் பெற்று உய்கின்றனர்.
மூன்றாவது முறை வரும் பக்தர் வெண்கலம் அல்லது பித்தளையில் செய்யப்பட்ட சிறிய மணியை  சரட்டில் கோர்த்து மாலையுடன் அணிந்து எடுத்துவருகிறார்கள்

 அந்த மணி நேர்த்திக் கடன் செலுத்துமிடத்தில் அந்த மணியைப் பறித்துச் செல்லும் வழக்கம் உண்டு என்பதால்  தன்னுடைமையாக்கிக் கொள்ளும் முகம் தெரியாத ஒரு பக்தர் வலிந்து மணியை இழுக்கிறார்.அந்தவிடத்தில் சற்று தள்ளு முள்ளு நிலவுகிறது.

 டமாரம் போன்று அமைந்த ஒரு தோற்கருவி வாத்தியத்தை சிலர் ஒரு ஸ்வரத்துடன்  மந்திரங்கள் உச்சாடனை செய்து அடித்து ஒலி எழுப்பி முன் அமர்ந்திருப்பவருக்கு திருஷ்டி கழித்து தட்சிணை பெறுகிறார்கள்.

திருவாச்சூர் மதுரகாளி கோயிலிலும் இம்மாதிரி உள்சுற்றுப் பிரகாரத்தில்  அகன்ற தாளக் கஞ்சக் கருவி தட்டி கிராமிய மொழியில் வினோதமான சந்தத்தில் இரைச்சலில் பாடுவார்கள். 

எல்லாம் வல்ல இறைவனின் கருணையினால் இடர்களேதுமின்றி வழிபாடுசெய்து திரும்பினோம்.

சாமியே சரணம் ஐயப்பா.

ஓம்.

Hi All,

Please have a look of the below link:

http://www.p4panorama.com/panos/sabarimala/index.html
 
Thanks & Regards,
rbala.rbala@gmail.com

No comments:

Post a Comment