http://wwwrbalarbalaagm.blogspot.com/2011/11/blog-post.html

Saturday, April 2, 2011

அன்னை அபிராமி அந்தாதி - பாகம்-2




அபிராமி அந்தாதி விளக்கவுரை 9

பாடல் முப்பத்தொன்று.

உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே

விளக்கம் :
அன்னை அபிராமியும் அவளின் ஒரு பாகமாய் விளங்கும் ஈசனும் ஏக உருவில் வந்து கீழோனான என்னையும் தங்கள்மேல் அன்பு செய்ய வைத்து அருள் புரிந்தார்கள். ஆகவே இனி நான் சிந்திப்பதற்கு வேறு சமயங்களும் இல்லை..என்னைப் பெற்றெடுக்க வேறு தாயும் இல்லை.. அழகிய தோள்களுடைய பெண்கள் மேல்வைத்த காம ஆசையும் இல்லாமல் போனது. "உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து " உமையவளாகிய அன்னை அபிராமியும், அவளின் ஒரு பாகமாய் விளங்கும் ஈசனும் ஓர் உருவில் வந்து... சிவசக்தி சொரூபமாய், அர்த்த நாரீஸ்வரராய் எனக்குக் காட்சியளித்தார்கள். கிடைத்தற்கரிய பேறு அல்லவா? முன்னர் ஒரு பாடலில் இவ்வுருவைத்தான் அதிசயம்
என்று பாடினார் அபிராமிப் பட்டர். அன்னையையும் அப்பனையும் ஏகவுருவில் காணும் பேறு பெற்றது அபிராமிப் பட்டர் செய்த பாக்கியம் அல்லவா...?

அவர்கள் வந்து என்ன செய்தார்கள் தெரியுமா? "இங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்" அவர்கள் இருவரும் ஓருருவாக இங்கு வந்து, எம்மையும் -இவ்விடத்து அழுத்தம் கொடுக்கிறார் அபிராமிப் பட்டர். கீழோனான என்னையும் தம் மேல் அன்பு செய்ய வைத்தார்கள். எந்தவிதக் கெட்ட எண்ணங்களும் இன்றி, அன்னையின் மேல் முழு பக்தியாக இருந்த அபிராமிப் பட்டர், தன்னை மிகக்கீழோன் என்று குறிப்பிடுவது வியப்புக்குரியது. "இனி எண்ணுதற்குச்சமையங்களும் இல்லை" இனி நான் வேறு சமயங்களைப் பற்றிச்சிந்திப்பதற்கில்லை... அன்னையின் பேரன்பு கிடைத்த பின்னர் வேறெந்த சமயங்கள் வேண்டும்? இந்த பூஜையை செய்தால் இறையருளைப் பெறலாம்.. இந்த மந்திரங்களைப் படித்தால் இறையருளைப் பெறலாம். இந்த வழியில் நின்றால் இறையருளைப் பெறலாம். என்று பல்வேறு சம்யங்கள் உரைக்கின்றன.. ஆனால் உங்கள் மேல்வைத்த அன்பு ஒன்றே எனக்கு உங்கள் பேரருளைப் பெற்றுத்தந்து விட்டது.

இனி நான் சிந்தித்துப் பார்ப்பதற்கு வேறு சமயங்கள் இல்லை.."ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை" இனி என்னை ஈன்றெடுக்க ஒரு தாய் இல்லை..இதன் பொருள் நான் பிறவிப் பெருங்கடல் நீந்தி விட்டேன். இனி எனக்கு மறுபிறப்பு இல்லை என்பது.. பலமுறை பிறப்பறுப்பைப் பற்றி அபிராமிப் பட்டர் பாடுவது குறிப்பிடத்தக்கது. இனி என்னை ஓர் தாய் ஈன்றெடுப்பாளோ? இல்லவே இல்லை.. இத்துடன் என்பிறவி முடிந்தது.. ஏனெனில் என் அன்னை அபிராமியின் பேரன்பு எனக்குக் கிடைத்திருக்கின்றது என தனக்கு மீண்டும் பிறவி இல்லை என
அபிராமிப் பட்டர் திட்டவட்டமாகக் குறிப்பிடுகிறார். அது அவரது பரிபூரண நம்பிக்கையைக் காட்டுகிறது. "அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே" அழகிய தோளுடைய பெண்டிரின் மேல்வைத்த காம ஆசையும் அமைதியுற்றது. மனிதரைப் பின் தொடர்ந்து துன்பமளிக்கும் ஓர் நோய் இக்காம நோய்.. அவற்றிலிருந்து எவ்வண்ணம் வெளிவருவது என்பதே இன்றைக்குப் பலருடைய கேள்வி.. அன்னையின் அன்பு நமக்குக் கிட்டி விட்டால் அக்காம ஆசை தானே அமைதியாகிவிடும். அன்னையே நீ உன் தரிசனத்தை எனக்குக் காட்டி என்னை உன்பால் அன்பு செய்ய வைத்து விட்டாய். இனி என் மனத்தில் நான் பெண்டிரின் மேல் கொண்ட ஆசை அப்படியே அமைதி பெற்றுவிடும்...

பாடல் முப்பத்திரண்டு

ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுகேன் ஈசர் பாகத்து நேரிழையே

விளக்கம் :
அபிராமி அன்னையே.. ஈசனின் இடப்பாகத்தில் அமர்ந்த என் அம்மா... நான் கொடிய ஆசையெனும் கடலில் மூழ்கி, கொஞ்சம் கூட இரக்கமற்ற
எமனது கையிலுள்ள பாசக்கயிற்றால் கட்டப்பட்டு துன்பம் மிக அடைய இருந்தேன்.என்னை, மணம் வீசும் அழகிய தாமரை போன்ற நின் திருப்பாதங்களை நீயே வலிய வந்து என் தலை மீது வைத்து ஆண்டு கொண்டாய். உன் பேரன்பினை நான் என்னவென்று சொல்லுவேன்?இவ்வுலகில் நாம் பெறும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் நம் மனத்தில் உள்ள ஆசையே.. ஆசையை ஒழித்தால் மட்டுமே துன்பமின்றி வாழ இயலும். அன்னை அபிராமியே நான் ஆசையெனும் கடலில் அகப்பட்டுக் கொண்டேன்.. அவ்வமயம் அங்கே
அருளற்ற - கொஞ்சமும் இரக்கமற்ற கூற்றுவனின் கையிலுள்ள பாசக் கயிறு என்னைப் பிடிக்க வந்தது. நான் அப்பாசத்தில் அகப்பட்டிருந்தால் என் துன்பம் இன்னும் மிகுதியாக இருந்திருக்கும்.. அவ்வமயம் எனக்கு அதைப் பற்றிய எண்ணமே இல்லை.. கண் அது போன போக்கு.. கால் அது போன போக்கு... என்றே போய்க்கொண்டிருந்தேன்...

ஆனால் உனது பேரன்பு என்ன செய்தது தெரியுமா? "நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுகேன் " உனது பாதங்கள் எனும் மணம் வீசும் அழகிய தாமரை மலர்களை நீயே வலிய வந்து என் தலை மீது வைத்தாய்.. உனக்கு
அடியவனாக்கினாய்... அப்பேரன்பை நான் என்னவென்றுரைப்பேன்.. எனக்கு உன்னைத் தெரியவே தெரியாது.. நீயே உலகைப் படைத்தவள் என்ற ஞானம் எனக்கு இல்லவே இல்லை... நீதான் தெய்வம் என்ற உணர்வு என்னுள் இல்லவே இல்லை... ஆயினும் நீயே வலியவந்து உன் திருவடித் தாமரைகளை என் தலைமேல் வைத்தாய். அன்னையே உன் திருவடித் தாமரைகள் என் தலைமேல் பட்டவுடன் நான் உனக்கு அடியவனானேன்..நீ என்னை அருளாட்சி செய்து கொண்டாய்... உனது அன்பு அளப்பறியது.. என்ன காரணத்தாலோ நீ என்மீது இப்படிப் பட்ட அன்பினை வத்து அருட்செய்தாய். அளவிட இயலாத உன் அன்பினை நான் எவ்வாறு உரைப்பேன்...ஈசனது இடப்பாகத்தில் அமர்ந்திருக்கும் என் அபிராமித் தாயே......?


பாடல் முப்பத்து மூன்று

இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே

விளக்கம் : எம் தந்தையான சிவபெருமானின் சித்தமெல்லாம் குழையச் செய்யக்கூடிய மணம் வீசும் குவிந்த திருமுலைகளையுடைய இளமையான
கோமளவல்லியே... என் அபிராமி அன்னையே... நான் செய்யும் தீய செயல்களுக்காக எனைத் தண்டிக்க காலதேவன் வந்து அழைக்கும் போது.. அன்னையே என உன்னைத் தான் நான் அழைப்பேன்.. நீயும் ஓடி வந்து அஞ்சாதே மகனே என்பாய். முன்னர் ஒரு பாடலில் தன்னை அழைக்க எமன் வந்திடும் வேளையில் அம்மையும் அப்பனுமாகத் தனக்குக் காட்சியளித்தருள வேண்டும் என்று வேண்டிய அபிராமிப்பட்டர் இவ்விடத்து ஓடிவந்து எம்மை அஞ்சாதே என்று சொல் தாயே என்கிறார். "இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க அழைக்கும் பொழுது"
யாருக்கு அஞ்சுகிறோமோ இல்லையோ... மரண தேவனுக்கு எல்லோரும் அஞ்சுகிறோம். நாம் செய்கின்ற நல்வினை, தீவினைகளுக்கேற்ப காலதேவனும் நமக்கு மரண நேரத்தில் தண்டனைகளைத் தருகின்றான். எனது கர்மங்களுக்கேற்ப கொடுமையான கால தேவன் என்னை நடுங்கச் செய்ய அழைக்கும் போது... என்னை மரணம் நெருங்கும் போது... "வந்து அஞ்சல் என்பாய்" நீ வந்து அஞ்சாதே என்பாய்

. "அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே" என் தந்தையான ஈசனின் சித்தத்தையெல்லாம் குழைப்பவளே... மணம் வீசும் சந்தனங்களைப் பூசிய குவிந்திருக்கக் கூடிய உனது அழகிய திருமுலைகளால் என் தந்தையின்
சித்தத்தைக் குழைக்கும் இளமையான கோமளவல்லியே.... அபிராமித் தாயே...."உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே" காலன் என் வாயில் வந்து நிற்கின்றான். என் மனம் அஞ்சுகிறது. என் உயிர் உடலோடு கொண்ட நட்பைப் பிரிய இயலாத வ்ண்ணம் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. எக்கணமும் விட்டுப் பிரியலாம் என்ற நிலை... இவ்வேளையில் நான் உன்னையே நினைத்து அன்னையே என்பேன். நீ ஓடி வந்து என்னை நோக்கி அஞ்சாதே மகனே என்று என் மரண பயத்தைப் போக்குவாய்.

மரணவேளை மிக முக்கியமானது.. எதிர்பாராமல் மரணமடைபவர்களை விடுங்கள். வயதாகி மரணப் படுக்கையில் விழுந்த பெரியோர்களிடம் சென்று ஆசி வாங்குவது நம் பகுதி மக்கள் பழக்கம். அச்சமயங்களில் அவர்களின் செவிகளிலும் இறைவனுடைய திருநாமம் விழும்படிப் பார்த்துக் கொள்வார்கள். ஒரு வேடிக்கைக்கதை உண்டு. ஒரு கொடியவன் தான் மரணமடையும் வேளையில் தனது இளைய மகனான
கோவிந்தனை அவன் பெயர் சொல்லி அழைத்தானாம். கோவிந்தா என்று மரண தருவாயில் கூவிய படியால் அவனது ஆன்மா திருவைகுண்டம் சென்றடைந்ததாம். அழியும் வேளையில் அறியாது அழைத்த ஒருவனுக்கே இறைவனது பெருங்கருணை கிடைக்கிறதென்றால், அவனை முழுமனதோடு அழைப்பவர்களுக்கு எப்பேர்ப்பட்ட புண்ணியம் கிட்டும்? இவ்விடம் அவள் பெயரைச் சொல்லி அழைப்பேன் என்றும் பட்டர் கூறவில்லை... 'அம்மா.." இது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பயமேற்படும்போது நம் வாயினின்று புறப்படும் வார்த்தை... அபிராமி அன்னையே... நான் மரணநேரத்தில் என்னை அறியாது அம்மா என்றழைத்தால்... அது வேறு யாரையோ குறிப்பிடும் சொல் அல்ல... நான் அழைப்பது உன்னைத்தான்... என்பதைப் புரிந்து கொள் தாயே என்று முன் கூட்டியே சொல்லி வைக்கிறார் அபிராமிப் பட்டர்.
பாடல் முப்பத்து நான்கு

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே

விளக்கம் :
தன்னை நோக்கி வந்து சரணம் என்று அடிபுகும் அன்பர்களுக்கு அன்போடு விண்ணுலகம் தரும் அபிராமி அன்னை தங்கியிருக்கும் இடங்களாவன...நான்முகங்களைக் கொண்ட பிரம்ம தேவனின் நான்கு முகங்களாக, கலைமகளாக...தேன் ஊறும் மலர்கள் கொண்ட மாலைகளையும் பெரிய மாணிக்கங்களையும் தன் மார்பின் மீது அணிந்த திருமாலின் மார்பாக... திருமகளாக... ஈசனின் ஒரு பாகமாக... மலைமகளாக... பொன்னிறத்துடன் கூடிய சுவைமிகுந்த தேனூறுகின்ற தாமரை மலரிலும், விரிந்த கதிர்களைக் கொண்ட சூரியனிடத்திலும்,
சந்திரனிடத்திலும் தங்கியிருக்கின்றாள்..எங்கும் நிறைந்த அன்னை பராசக்தியை இவ்விடம் உள்ளாள் என்று குறிப்பிடத் தேவையில்லைதான். ஆயினும் உயரிய இடத்து உன்னைக் காணும்போது அவ்விடத்தில் நீ தங்கியிருப்பதை எங்ஙனம் உரையாமல் இருப்பது? நீயே கதி என்று உன்னைச் சரணமடையும் உன் அடியவர்களுக்கு நீ விண்ணுலகில் இடமளிக்கிறாய். அதுவும் மிகுந்த கருணையோடும் அன்போடும்... அவர் செய்த தீவினைகள் எல்லாம் உன் பரிவின் முன் பலனற்றுப் போய்விடுகின்றன. நீ எங்கெங்கே இருக்கிறாய்...?

"சதுர் முகமும்" நான்முகங்களைக் கொண்ட பிரம்மதேவனின் நான்கு முகங்களிலும்... அவரது படைப்புத் தொழிலாக.... கலைமகளாக... "பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும..." நறுந்தேன் ஊறக்கூடிய அழகிய மலர்களையும் , பெரிய மாணிக்கங்களையும் தன் மார்பிலே அணிந்த திருமாலின் திருமார்பிலும்...அலைமகளாக... "பாகமும்" ஈசனது இடப்பாகத்திலும்... மலைமகளாக... "பொற்செந்தேன் மலரும்" பொன்னிற நறுந்தேனைக் கொண்டிருக்கும் தாமரை மலரிலும்..."அலர் கதிர் ஞாயிறும்" விரிந்த கதிர்களைக் கொண்ட சூரியனிலும்... உனது
கதிர்கள் எங்கள் மனத்தில் உள்ள அறியாமையைப் போக்குகின்றன தாயே..."திங்களுமே" சந்திரனிடத்திலும்... நீ தங்கியிருக்கின்றாய் தாயே.,..உனது கருணை சந்திரனைப் போன்று குளிர்ச்சியானது தாயே.... 
விளக்கம் தொடரும்.

அபிராமி அந்தாதி விளக்கவுரை 10

பாடல் முப்பத்தைந்து
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண் இறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள்
வெங்கட் பணி அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே
விளக்கம் :
அபிராமி அன்னையே... திருப்பாற்கடலில் வெப்பம் உமிழும் கண்களையுடைய பாம்புப் படுக்கையின்மேல் துயில் கொள்ளும் பரம்பொருளே...
பிறைச் சந்திரனின் மணம் வீசும் உனது சிறிய பாதங்களை எந்தன் தலைமேல் வைக்க நாங்கள் என்ன தவம் செய்தோம்...? எண்ணுதற்கியலாத அமரர்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்குமோ? "திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி" பிறைச் சந்திரனின் மணம் வீசும் சிறிய பாதங்கள்... அன்னை அபிராமியைக் குழந்தையாகக் காண்கிறார் அபிராமி பட்டர். அபிராமிப் பெண்ணின் சிறிய திருப்பாதங்கள் பிறைச் சந்திரனின் மணம்
வீசும் தன்மை படைத்தவை.. (எங்கள் சுப்பிரமணியபுரத்தில் அருளாட்சி செய்யும் அன்னை ஸ்ரீ முத்தாரம்மன் பலருக்கும் சிறு குழந்தை வடிவில் காட்சியளித்துள்ளாள்.) பெருமை பெற்றுள்ள அன்னையின் சிறிய திருப்பாதங்கள் என்ன செய்கின்றனவாம்?? "சென்னி வைக்க" எந்தன் தலைமீது வைக்கின்றாள்..

உனது அழகிய திருப்பாதங்களை எங்கள் தலைமீது வைக்க நாங்கள் என்ன தவம் செய்து விட்டோம்?? என்று வியந்து பாடுகிறார்... அவளைத் தன் தலைமேல் ஏற்பது... ஆனால் அபிராமிப் பட்டரைப் பொறுத்தவரையில் அன்னையே அவரைத் தேடிவந்தாள்... அன்னையவள் தானே வலியவந்து தனது பொற்பாதங்களை அபிராமி பட்டரின் தலைமீது வைத்ததாக முன்னரொரு பாடலில் குறிப்பிட்டார் அல்லவா??
இவ்விடத்து அவள்தனது திருவடிகளைத் தன் தலைமீது வைக்க என்ன தவம் செய்தேன் என்று வியந்து பாடுகிறார்.. எண்ணிக்கையிலடங்காத அமரர்களுக்கும் இவ்வரிய பாக்கியம் கிட்டியதில்லை... ஆனால் எனக்குக் கிடைத்திருப்பதற்கு நான் என்ன தவம் செய்தேன்!... "தரங்கக் கடலுள் வெம் கண் பணி அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே " திருப்பாற்கடலில் வெப்பம் உமிழும் கண்கள் படைத்த ஆதிசேடன் என்னும் பாம்பையே படுக்கையாகக் கொண்டு உறங்கிக் கொண்டிருக்கும் பரம்பொருளே.... இதென்ன விந்தை.... ? திருப்பாற்கடலுள் பாம்பணை மேல் பள்ளி கொண்டிருப்பவன் அந்தத் திருமகளைத் தன் திருமார்பில் கொண்ட திருமால் அல்லவா?? ஆனால் ஏன் பட்டர் அன்னையை அவ்வண்ணம் விளிக்கின்றார்? என்ற வினா எழுகின்றது... அன்னை ஆதிபராசக்தியே வைஷ்ணவி என்னும் திருநாமத்தோடு
திருமாலின் அம்சமாகக் காட்சியளிக்கின்றாள்..என்னும் விடையை அன்னை நமக்குத் தந்தருளுகின்றாள்...அன்னை தானே திருமாலாகவும்
காட்சியளிக்கின்றாள்..

பாடல் முப்பத்தாறு

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே

விளக்கம் :
அழகிய தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் அம்பிகையே... அபிராமி அன்னையே... நீயே பொருளாகவும் இருக்கிறாய். அப்பொருளால் மாந்தர் பெறும் போகங்களாகவும் இருக்கின்றாய்.. அப்போகத்தால் அவர் மயங்கும் மயக்கமாகவும் இருக்கின்றாய். அம்மயக்கத்தின்பின் உண்டாகும் தெளிவாகவும் இருக்கின்றாய். என் மனத்தில் வஞ்சகம் எனும் இருளை இல்லாது நீக்கிய பேரொளியான உனது பேரருள் என்னவென்று என்னால் அறியமுடியவில்லை...அன்னையின் பேரருள் அளப்பறியது... உலக மாந்தர்க்கு வேண்டிய பொருட்செல்வத்தை அன்னை
தந்தருளுகின்றாள். அன்னையே அப்பொருட்செல்வமாக நிற்கின்றாள். ஆனால் நல்வழியில் செல்லவேண்டிய மனமானது பொருட்செல்வம்
அதிகமானதும் போகத்தை நாடுகின்றது.. அன்னையே அப்போகமாகவும் நிற்கின்றாள். போகம் அதிகமாகும் போது மனம் மாயையில் சிக்கி மயங்குகின்றது... அச்சமயம் அன்னையே அம்மாயையாக நிற்கின்றாள். மயக்கத்தின் பின் தெளிவு உண்டாகிறது...

அம்மையே அத்தெளிவாகவும் இருக்கின்றாள்... நோயும் அவளே.. நோய்க்கு மருந்தும் அவளே... இதென்ன விந்தை...! பொருட்செல்வத்தைக் கொடுத்து, போகத்தைக் கொடுத்து, மாயையில் சிக்கவைத்துப் பின்னர் தெளிவினைத் தருவதற்கு, முதலிலேயே அவள் தெளிவினைத் தந்தால் என்ன? எனும் வினா இவ்விடத்து எழுகின்றது.. பட்ட பின்னர் வரும் ஞானமே சிறந்த ஞானம் என்பது ஆன்றோர் வாக்கு... எனவே பொருளைக் கொடுத்து இறுதியில் அருளைக் கொடுத்துத் தெளிவாக்குபவள் அன்னை அபிராமியாக நிற்கும் பராசக்தி... ."என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன் அருள் ஏது அறிகின்றிலேன்" உனது அருள் என்னும் பேரொளியால் என் மனத்தில் இருந்த வஞ்சனை என்னும் இருள்... அல்லது என் மனத்தை வஞ்சித்த மாயை என்னும் இருள்... இல்லாது போனது... அப்படிப்பட்ட உனது பேரருள் என்ன என்பது
எனக்குப் புரியவில்லையே அம்மா... மனித மனம் பல்வேறு நிலைகளில் மாற்றமடைகின்றது. பொருளிருக்கும் மாந்தரிடத்து அதைத் தக்கோர்க்குத் தரவேண்டுமென்ற அருள் இருப்பதில்லை... இன்னின்னாருக்கு இதைத் தந்தருள வேண்டும் என்ற மனம் படைத்த மாந்தரிடம் அதற்குத் தகுந்த பொருள் இருப்பதில்லை...

எவ்விடத்து பொருட்செல்வமும், அருட்செல்வமும் கூடி வருகின்றதோ... அவ்விடத்து அன்னையின் பேரருள் உள்ளதென்று உலகம் அறியும்...
மனத்தை அடக்க வழி கற்றோரே பெரியோர் ஆவர்... மனம் அடங்குவதில்லை... ஆனால் அது அன்னையின் பேரொளியால் நிரம்பும்போது அவ்விடத்திருந்த மாயை என்னும் இருள் அகன்று போகின்றது. அன்னையே நம்மை அருளாட்சி செய்கின்றாள்... அன்னை நம்மை ஆண்டு கொண்ட பின்னர் மாயை நம்மை அண்டிடுமோ?? என் மனத்தை உனது அருளெனும் பேரொளியால் நிரப்பிய அன்னையே... உந்தன் அருள்யாது??? பொருளா?? பொருள் தந்திடும் போகமா?? அப்போகத்தால் விளையும் மருளா?? மருளழியும் வேளை வரும் தெளிவா?? என்னால் அறியமுடியவில்லையே..... அழகிய தாமரை மலரின் மீது வீற்றிருக்கும் அம்பிகையே... என் அபிராமி அன்னையே.....

தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்... மீண்டும் சந்திப்போம்...

-- பாடல் முப்பத்தேழு

கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது பன்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.

விளக்கம் :
அபிராமி அன்னையே.. எட்டுத்திசைகளையும் ஆடைகளாக அணியும், எல்லா செல்வங்களையும் உள்ளடக்கிய சிவபெருமானின் இடப்பாகம் சேர்பவளே... நீ உன் திருக்கரங்களில் அணிவது கரும்பும் மலர்களும்... தாமரை போன்ற உன் அழகிய திருமேனிக்கு நீ அணிவது வெண்ணிற முத்து மாலைகள். விஷம் நிறைந்த நாகத்தின் படம் போன்றிருக்கும் உன் இடையில் நீ அணிவது பல்வித மாணிக்கங்களால் ஆன
மேகலையும், பட்டும். இந்த பாடலில் அன்னை அபிராமி அணியும் அணிகலன்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.. கன்னல் எனும் பதம் கரும்பினைக் குறிப்பதாகும். அன்னையே.. நீ உன் திருக்கரங்களில் அணிவது இனிமை தரும் கரும்பும் மணம் வீசும் மலர்களும்... கரும்பினாலான வில்லைத் தமது ஆயுதங்களாகக் கொண்டவர்கள் இருவர்... அன்னை ஆதிபராசக்தியும், மன்மதனுமாகிய இவர்களே... அன்னையானவள் தனது கரத்தில் கரும்பு வில்லையும், ஐந்து மலர்க்கணைகளையும் வைத்திருப்பது எதற்காக??? அன்னையின் கையிலுள்ள கரும்பு வில் நம் மனத்தினைக் குறிக்கின்றது.

மனித மனம் இனிமையானது. மேலும் இந்திரியங்களுக்காக எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுக்கக் கூடியது.. இப்படிப்பட்ட நமது மனது
அது போன போக்கில் வளைந்து கொண்டிருந்தால் என்ன நடக்கும்? ஐம்புலன்களின் கட்டுபாட்டில் மனம் இயங்கத் தொடங்கிவிட்டால் சிற்றின்பத்தில் திளைத்து நாம் மானிடராய்ப் பிறந்ததற்கான காரணத்தை மறந்து போவோம்... அன்னையே... என் மனத்தை உன் கரங்களில் சேர்ப்பிக்கிறேன்.. உன் இச்சைப்படி அதை வளைத்துக்கொள்... என் ஐம்புலன்களை ஐந்து மலர்க்கணைகளாக உனது கரத்திலேயே
சமர்ப்பிக்கிறேன்.. நீயே அவற்றை உன் இச்சைப்படி ஏவு... என்ற வேண்டுதல்களுக்காகத்தான் அன்னை தனது கையில் கரும்பு வில்லையும்,
மலர்க்கணைகளையும் தரித்துள்ளாள். மாறாக நம் மனம் மன்மதனின் கைக் கரும்பாக மாறி விட்டால் என்னவாகும்?? மனம் இந்திரிய சுகங்களில் ஈடுபட்டு தன்னிலை மறந்து போகும்.. எனவே நம் மனத்தை அன்னையின் கையில் ஒப்படைப்போம்...

"கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை" அழகிய தாமரை போன்ற நின் திருமேனியில் நீ அணிவது வெண்ணிற முத்துமாலை... முத்துக்களால் ஆன மாலைகளை அன்னை அபிராமி தனது திருமேனியில் அணிவது எதற்காக? முத்துக்களைப் போன்ற
உயர்ந்த மனத்தவனாக இரு என்று நம்மை அறிவுறுத்துவதற்காகத்தான். "விடஅரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும், பட்டும்" விஷங்கொண்ட நாகத்தின் படத்தை ஒத்திருக்கும் உனது இடையில் நீ பல்வேறு மாணிக்கங்களாலான மேகலையையும் பட்டையும் அணிந்திருக்கின்றாய்..."எட்டுத் திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே. " நீ விலைமதிப்பற்ற அணிகலன்களை அணிந்திருக்கிறாய்... ஆனால் எல்லா செல்வங்களையும் கொண்டிருக்கும் ஈசனோ எட்டுத்திக்குக்களையே தன் ஆடையாகக் கொண்டிருக்கின்றான்.. அந்த ஈசனது இடப்பாகத்தில் சேரும் என் அபிராமி அன்னையே.... நீயோ சகல ஐஸ்வர்யங்களையும் காண்பிக்கும் உயர்ந்த அணிகலன்களை
அணிந்திருக்கின்றாய்.. ஆனால் எல்லா செல்வங்களையும் உடையவனான (உன்னையும் சேர்த்து) ஈசன் மிக எளிமையான தோற்றம் கொண்டவனாக இருக்கின்றான். நீ அவனது இடப்பாகத்தில் சேர்ந்திருக்கின்றாய்....

பாடல் முப்பத்தெட்டு

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனி முறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே

விளக்கம் :
எங்கள் அன்னை அபிராமி பவளக் கொடியில் பழுத்த பழம் போன்ற சிவந்த வாயினை உடையவள். முத்து போன்ற பற்கள் தெரியும் படியான குளிர்ச்சி தரும் புன்னகை புரிபவள். தனது மெல்லிய இடை நோகும்படியான திருமுலைகளைக் கொண்டவள்.. இவற்றின் துணையாகக் கொண்டு எங்கள் ஈசனாம் சங்கரனைத் துவண்டு போகும்படி செய்தவள்... அவளைப் பணிந்தால் அமரலோகம் ஆளலாம்.. உலகத்தோரே...
எங்கள் அன்னையைப் பணியுங்கள்...அன்னையின் பேரழகினை இப்பாடலில் அழகுற வர்ணனை செய்கிறார் அபிராமி பட்டர். அன்னையின் பேரழகு சங்கரதேவனின் தவத்தைக் கலைத்ததாம்.. முன்னரொரு பாடலில் அபிராமிப் பட்டர் என்ன உரைத்தார்? எல்லாவிடத்தும் வெற்றி பெறும் மன்மதனின் வெற்றியெல்லாம் தோல்வியுற்ற சங்கரனும் உன்னிடத்துத் தோல்வியுற்றான் என்று அன்னையைத் துதித்த அபிராமிப் பட்டர் இவ்விடத்து..."எங்கள் சங்கரனைத் துவளப் பொருது" என்கிறார்,

எங்கள் தந்தையான சங்கரனைத் துவளச்செய்தாய்...அவன் தவத்தைக் கலைத்தாய்... எவற்றின் துணையைக் கொண்டு இதைச் செய்தாய்??? பவளக் கொடியில் பழுத்த பழம் போன்ற சிவந்த இதழ்கள்."பனி முறுவல் தவளத் திருநகை" முத்து போன்ற பற்கள் தெரியும்படியான
குளிர்ச்சியான புன்னகை.... "துடியிடை சாய்க்கும் துணை முலை" மெல்லிய இடையைக் கீழே விழச்செய்யும் பாரமான திருமுலைகள்... இவற்றின் துணையோடு எங்கள் ஈசனை துவண்டு போகச் செய்தாள் எங்கள் அன்னை அபிராமி... "அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே" அவளைத் தொழுங்கள் உலகத்தாரே.... ஏன் தெரியுமா அவளைத் தொழுதால் அமரலோகம் ஆளும் பேறு பெறலாம். எனவே... அனைவரும் எங்கள் அன்னை அபிராமியைத் தொழுங்கள்.....என்று உலகத்தாருக்கு அன்புக் கட்டளையிடுகிறார் அபிராமிப் பட்டர்...

அபிராமி அந்தாதி விளக்கவுரை 11

-பாடல் முப்பத்தொன்பது

ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின்
மூளுகைக்கு என் குறை, நின் குறையே அன்று முப்புரங்கள்.
மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே.

விளக்கம்:
முன்பு ஒரு நாள் முப்புரங்களையும் அழிப்பதற்காக வில்லில் அம்பினைத் தொடுத்த ஈசனது இடப்பாகம் அமர்ந்த அழகிய ஒளி பொருந்திய நெற்றியை உடைய அபிராமி அன்னையே... என்னை ஆள்வதற்கு நின் திருவடித் தாமரைகள் உண்டு. கூற்றுவன் கையினின்று என்னை விடுவிக்க நின் கடைக்கண் பார்வை உண்டு. இவை இல்லாது போனால் என்ன குறை?... உனது குறையே...!! பரிபூரண நம்பிக்கையை அம்பிகைமேல் வைத்த அபிராமிப் பட்டரின் மன நம்பிக்கை இவ்விடத்துத் தெரிகின்றது.. அம்மையே... என்னை ஆளுதற்கு உன் திருவடித் தாமரைகள் இருக்கின்றன... அந்தகன் - வாழ்வின் அந்தந்தைக் காண்பிப்பவன் - கூற்றுவன் - யமனிடமிருந்து தப்பிப்பதற்கு உனது கடைக் கண்பார்வை உண்டு...அன்னையின் கடைக்கண் பார்வை ஒன்றே போதும்... மரண பயத்திலிருந்து அபயம் அளித்திடும். "மேல் இவற்றின் மூளுகைக்கு என் குறை?" எனை ஆள நின் திருவடித்தாமரைகள் இருக்கின்றன... என்னை யமனிடமிருந்து காக்க உனது கடைக்கண் பார்வை உள்ளது... ஆயினும்......

இன்றைக்கு நான் இவ்வண்ணம் நெருப்பின் மீது நின்று நின்னை அழைத்துக் கொண்டிருக்கின்றேன்.. எங்கே உனது திருவடிகள்? எமை ஆள அவை வரவில்லையா??? எங்கே உனது கடைக்கண் பார்வை?? எம்மை மீட்க நீ என்னைக் காணவில்லையா?? நான் இவ்வண்ணம்
பரிதவிப்பதற்கு என்ன குறையுண்டு??? "நின் குறையே" அது என் குறையல்ல....உனது குறையே.... பரிபூரண நம்பிக்கை... இங்கே பார்... நான் நெருப்பின் மீது நடக்கின்றேன்... அது என்னைச் சுட்டால் அது என் குறையல்ல.. உன் குறையே... நான் மனித வாழ்வின் இந்திரிய இச்சைகளால் கட்டியாளப் பட்டால்...அதன்மூலம் துன்புற்றால்... அது என் குறையல்ல.,... உன் குறையே... உன் மகனைத் தவறிழைக்காமல் காப்பது தாயான உன் கடமையல்லவா?? உன் திருவருளை வேண்டியே இவ்வண்ணம் நெருப்பின் மேல் நின்று பாடுகின்றேன்.. விரைந்து வந்து காட்சியளிப்பாய்... என்னைக் காத்தருள்வாய்... "அன்று முப்புரங்கள் மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே." முன்பு
முப்புரங்களையும் அழிப்பதற்காக அம்பினை வில்லிலே தொடுத்த ஈசனது இடப்பாகம் சேர்பவளே... அழகிய ஒளிபொருந்திய நெற்றியினைக் கொண்ட என் அபிராமி அன்னையே....

அன்னைமேல் நாம் வைக்கும் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் பாடல் இது.. மீண்டும் ஒருமுறை ஓதிப்பாருங்கள்..

பாடல் நாற்பது

"வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே. "

விளக்கம் :
அழகிய ஒளிபொருந்திய நெற்றிக் கண்ணையுடைய எங்கள் அபிராமி அன்னையை.... அமரர்கள் எல்லோரும் வந்து வணங்கிப் போற்றுதற்கு விரும்பும் எங்கள் பெருந்தலைவியை... அறியாமை நிறைந்த நெஞ்சத்தார் காணுதற்கு இயலாத கன்னியை... காணவேண்டும்.. அன்பு கொள்ள வேண்டும் என்று என் மனத்தில் உதித்த எண்ணம் என் முற்பிறப்பில் செய்த புண்ணியமாகும்..பூமிப்பெருவெளியில் எத்தனையோ கோடி மாந்தர்கள் பிறக்கின்றனர்..இறக்கின்றனர்.. மாந்தரல்லாத பல்வேறு உயிரினங்களும் வந்து வாழ்ந்து மறைகின்றன... ஆனால் அன்னை அபிராமியைக் காண வேண்டும்.. வணங்கவேண்டும்..அவள் மேல் அன்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எத்தனை பேருக்கு எழும்?
வெகு சிலருக்கு மட்டுமே... அவர்கள் யார்? முற்பிறவியில் புண்ணியம் செய்தோர்... அன்னையைக் காண்பதற்கும், அவளை வேண்டுதற்கும்.. அவள் மேல் அன்பு செய்தலுக்கும் அபிராமிப் பட்டரால் இயன்றது..

அதற்குத் தான் செய்த முற்பிறவிப் புண்ணியமே என்று இவ்விடத்து உரைக்கிறார்.."வாள்-நுதல் கண்ணியை" ஒளி பொருந்திய அழகிய நெற்றிக் கண்ணையுடைய அபிராமியன்னையை....இதென்ன விந்தை.... ? அப்பன் ஈசனுக்கல்லவா நெற்றிக்கண் உண்டு.. இவரென்ன இவ்வண்ணம் பாடுகிறாரே...? அம்மையும் அப்பனும் ஒரே பரம்பொருளல்லவா?? அம்மையைக் குறித்தால் அது அப்பனையும், அப்பனைக் குறித்தால் அது
அம்மையையுமன்றோ குறிக்கும்? "விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை" அமரர்களெல்லாம் வந்து வேண்டி துதி செய்ய எண்ணங்கொண்டனர்.. யாரை?? எங்கள் பெருமாட்டியை... பெருந்தலைவியை... அன்பு செய்யும் அபிராமியை.... "பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை" அறியாமை இருள் குடிகொண்ட பேதை நெஞ்சத்தால் காண்பதற்கு இயலாத கன்னியை.... அன்னை மேல் நாம் அன்பு கொண்டால் நம் மனத்திருந்த அறியாமை எனும் இருள் அகலும்..அவ்விடத்து நாம் அன்னையைத் தெளிவுறக் காணும் பாக்கியம் பெறலாம்... கன்னியை... என்றும்கன்னித்தன்மை கொண்ட எங்கள் அபிராமி அன்னையை...."காணும் - அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே. "

அப்படிப்பட்ட எங்கள் அபிராமித் தாயைக்... காணவேண்டும், அவள் பால் அன்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை என் மனத்தில் விதைத்தது யார்? நான் உன்னைத் தேடிவந்தேனா?? நீயே என்னைத் தேடி வந்தாய்.. வலிய வந்து உன் திருப்பாதங்களை எந்தன் தலைமீது
வைத்தாய்... அவ்வழகிய திருவடிகளால் என்னை ஆண்டு கொண்டாய்... எனக்குக் காட்சியுமளித்தாய்... என்மேல் மிகுந்த அன்பையும் கொண்டாய்... உன்னைக் காண வேண்டும், தொழவேண்டும், அன்பு செய்ய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை என் மனத்துள் விதைத்தது யார்?? நான் முற்பிறவியில் செய்த புண்ணியம்தான் தாயே...

தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. அடுத்த பாடலானது என் மனத்துக்கு மிகவும் பிடித்த பாடல்.. குணா என்ற திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிட்டிய போது கமல்ஹாசனது குரலில் அப்பாடலைக் கேட்டேன்.. மதி மயங்கினேன்.. பின்னரே அபிராமி அந்தாதியைக் கற்கும் எண்ணம் எனக்குத்தோன்றியது... அதைத் தொடர்ந்து வரும் பாடலும் இளையராஜாவின் இசையில் அத்திரைப்படத்தில் இடம்பெற்றது.
மீண்டும் சந்திப்போம்.. நன்றி...

பாடல் நாற்பத்தொன்று

புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.

விளக்கம் :
புதிதாய் மலர்ந்த குவளைப்பூவைப்போன்ற கண்களையுடைய அன்னை அபிராமியும், சிவந்த மேனியையுடைய அவளது கணவரான சிவபெருமானும் இணைந்து நம்மைக் காணவேண்டும் என்ற காரணத்திற்காக இங்கே வந்து தமது அடியார்களின் கூட்டத்தில் நம்மை நடுவே இருக்கச் செய்து, தமது திருவடித் தாமரைகளை நம் தலைமீது நிலை நிறுத்திடவே என்ன புண்ணியம் செய்திருக்கின்றாய் என் மனமே...
நேற்றையதினமே இன்றைய பாடல்கள் பற்றிய சிறு குறிப்பினைக் கொடுத்திருந்தோம். "தனந்தரும்" எனத்துவங்கும் பாடலும், "ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை" எனத்துவங்கும் நூற்பயனும் மட்டுமே மனப்பாடச் செய்யுளாகக் கற்றிருந்த நமக்கு, ஒருமுறை "குணா" எனும் திரைக்காவியத்தைக் காணும் வாய்ப்புக் கிட்டியது.. எப்பொழுதும் அபிராமி அபிராமி என புலம்பும் ஒரு கதாபாத்திரத்தை திரு. கமல்ஹாசன் அவர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்.. அத்திரைக்காவியத்தில்தான் இப்பாடலை அவர் தனக்கேயுரிய பாணியில் சிறப்பாகப் படித்திருப்பார்.. பாடலின் இறுதியில் அவர் ஒற்றைக்காலில் நிற்கும் காட்சி இன்றும் கண்களை விட்டு அகலாதது விந்தை...அச்சமயம்தாம் என் மனத்தில் இதென்ன இத்தனை அழகிய கவிதை... யார் எழுதியது? என்ற வினா எழுந்தது..என்னவென்று நோக்குங்காலை அபிராமிப் பட்டரின் கவிதைகள் என்பது புரிந்தது.. பின்னரே அபிராமி அந்தாதியை முழுதும் கற்றோம்... சரி பாடலுக்கு வருவோம்..

"புதுப் பூங் குவளைக் கண்ணியும்" புதிதாய் மலர்ந்த குவளை மலரையொத்த கண்களையுடை அன்னை அபிராமியும்... "செய்ய கணவரும்" சிவந்த மேனியையுடைய அவளது கணவரான சிவபெருமானும் "கூடி" இணைந்து "நம் காரணத்தால்" நம்மைக் காணவேண்டும்.. நம்மைக் காக்க வேண்டும்... நம்மை அருளாட்சி செய்ய வேண்டும்... நம்மைத் தன் மகவு என்ற உண்மையை உலகுக்குணர்த்த வேண்டும்..என்ற காரணத்தால்... "நண்ணி இங்கே வந்து" மிகவும் விரும்பி இங்கே வந்து... நம் பக்தி சிறப்பானதாக இருந்தால் அம்மையும் அப்பனும் நம்மைக்
காண்பதற்காக மிகவும் விரும்பி ஓடி வருவார்கள்... அபிராமிப் பட்டரின் பக்தி அளப்பரியது.. எனவேதான் அவரைக் காண தந்தையும் தாயும் இணைந்து ஓடி வந்தனர்... "தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி.." நம்மைத் தமது அடியார்களின் நடுவிருக்கச் செய்து... "நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே" நமது தலையின் மீது தங்களின் திருவடித் தாமரைகளை நிலை நிறுத்திடவே.... எவ்வளவு பெருமை மிகுந்த காரியம் இது?? கீழோன்... மானிடப் பிறவி.... கடையேன்... பித்தனென்று ஊரும் உலகும் தூற்றும் பண்பு படைத்தவன்... இப்படிப் பட்ட என்னை, அம்மையும் அப்பனும் விரும்பி இங்கே வந்து தமது அடியார்களைக் கூடி வரச் செய்து.. அவர்களின் நடுவே நம்மை நாயகமாக நிறுத்தி... எந்தன் தலைமீது தங்கள் திருவடித் தாமரைகளை நிலை நிறுத்தினரே...இதற்கு... "புண்ணியம் செய்தனமே-மனமே. " நீ என்ன புண்ணியம் செய்து விட்டாய் எந்தன் மனமே....
பாடல் நாற்பத்திரண்டு

இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே
விளக்கம் :
உலகத்தோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நற்கொள்கையைக் கொண்ட எங்கள் நாயகியே.... நல்ல பாம்பின் படத்தைப் போன்ற அல்குலையுடையவளே...அபிராமி அன்னையே...குளிர்ச்சியான சொற்களையுடைய அபிராமி அன்னையே...வேதங்களைச் சிலம்புகளாகத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே.... தகுந்த இடத்தைக் கொண்டு பெருமிதத்தால் விம்மும் ஒன்றுக்கொன்று இணையாக இறுகியும்
மென்மையால் இளகியும் முத்துமாலையை அணிந்துமிருக்கும் உனது கொங்கை மலைகள், வலிமை மிகுந்த நெஞ்சத்தைக் கொண்ட சிவபெருமானின் நெஞ்சத்தையும் ஆட்டுவிக்கின்றன..

இந்த பாடலும் இளையராஜாவின் இசையில் குணா திரைக்காவியத்தில் இடம் பெற்றது... யேசுதாசின் இனியகுரலில் வாலியின்  வைரவரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது இடையே பாடற்குழுவினர் பாடும் பாடலாக இணைத்திருப்பார் இளையராஜா... இந்தப் பாடலும், ஐம்பதாவது பாடலான "நாயகி நான்முகி" எனத்துவங்கும் பாடலும் இளையராஜாவின் இசையில் கேட்பதற்கு மிக அருமை..
"கொள்கை நலம் கொண்ட நாயகி" நலமிக்க கொள்கைகளைக் கொண்ட எங்கள் தலைவியே...அபிராமி அன்னையே... அன்னையின் நோக்கமெல்லாம் அன்பரைக் காத்தருள வேண்டுமென்ற நற்கொள்கைகளே... அன்னையின் பெருமைகளைத் திரைப்படங்கள்
வாயிலாகச் சொல்கிறோம் என்று ஒரு இயக்குனர் (யார் என்பதைப் புரிந்து கொள்க) எடுத்த திரைப்படங்களைக் காணும் போது அன்னையின் பெயரை இப்படி ஏன் கேவலப் படுத்துகிறார் என்று கோபம் எழும்... உலகத்தைக் கட்டியாளும் அன்னையை எந்த ஒரு தீயசக்தியாலும் எதிர்த்து நிற்க இயலாது என்பதே தீர்க்கமான உண்மை...

நாம் அன்னைமீது பக்தி கொண்டு நற்செயல்கள் புரிந்துவரின் எந்த வித தீய சக்தியாலும் நம்மை நெருங்க இயலாது... இது சத்தியம்... ஆனால் அன்னையை ஒரு தீய சக்தி தடுக்க நினைப்பது போன்ற காட்சிகள்.. அவள் எதுவுமே செய்ய இயலாதவள் போல் அமர்ந்த காட்சிகள் எல்லாம்
மனத்தை மிகவும் வேதனை செய்யக்கூடியவை... சரி நமக்கு அது வேண்டாம்...பாடலைக் கவனிப்போம்...அன்னையே... மக்களைக் காத்தருள வேண்டும் என்ற நல்லதொரு கொள்கையைக் கொண்ட எங்கள் தலைவியே.... "நல் அரவின் படம் கொண்ட அல்குல்" நல்ல பாம்பின் படத்தைப் போன்ற அல்குலைக் கொண்டவளே... "பனி மொழி " குளிர்ச்சியான சொற்களைப் பேசுபவளே... அன்னையானவள் தம் மக்களான
நம்மிடத்துப் பேசும் பேச்சுக்கள் மிக இதமானவை... மிகுந்த அன்போடும், அக்கறையோடும் பேசும் பேச்சுக்கள் குளிர்ச்சியானவை..."வேதப் பரிபுரையே" வேதங்களை காலில் சிலம்பாக அணிந்தவளே... இப்பதம் அன்னையானவள் வேதங்களின் தலைவி என்பதைக் குறிக்கும்...

"கொங்கை மலை.." உனது கொங்கை மலை.. "இடங்கொண்டு விம்மி..." தகுந்த இடத்தினைப் பெற்று அப்பெருமிதத்தால் விம்மி... "இணை கொண்டு இறுகி இளகி"ஒன்றுக்கொன்று இணையாக இறுகிப் பின்னர் இளகி.... வலிபொருந்திய மார்பினள் என் அன்னை... எனவே அவளது தனங்கள் இறுகியன... எம்மைப் போன்ற பிள்ளைகள் மேல் அன்பு மிகவுடையவள் என் அன்னை... எனவே எமக்காக அவளது தனங்கள்
இளகின.... "முத்து வடங்கொண்ட " முத்துக்களால் ஆன மாலையை உனது அழகிய தனங்கள் சுமந்து கொண்டிருக்கின்றன.... "கொண்டு" இப்படிப் பட்ட பெருமைகளைக் கொண்ட உனது தனங்களால்.... "இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட .." இறைவனான எம்பெருமான் சிவனது வலிமை மிகுந்த நெஞ்சைத்தை நீ ஆட்டிவைக்கின்றாய்.. உலகத்தை ஆட்டுவிக்கும் ஈசன், வலிமை மிகுந்தவன்...அவனது நெஞ்சம் மிகுந்த வலிமை கொண்டது... அவனது நெஞ்சத்தை நீ ஆட்டுவிக்கின்றாய் என் அபிராமி அன்னையே....

அபிராமி அந்தாதி விளக்கவுரை 12

பாடல் நாற்பத்து மூன்று

பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே

விளக்கம் :
சிலம்பினை அணிந்த அழகிய சிறிய திருவடிகளையுடைய அபிராமி அன்னையே.... பாசத்தையும் அங்குசத்தையும் ஏந்தியவளே... ஐந்துவித
அம்புகளைக் கொண்டவளே.. இனிமையான சொற்களைப் பேசும் திரிபுரசுந்தரியே...செந்தூரவண்ண மேனியையுடையவளே... முப்புரங்களையும் ஆண்ட தீய நெஞ்சத்தைக் கொண்டிருந்த அசுரர்களை, அவர்கள் அஞ்சும்படியாக மேருமலையை வில்லாக ஏந்திய,
எரியும் நெருப்பினையொத்த மேனியையுடைய ஈசனது இடப்பாகத்தில் அமர்ந்தவளே...அபிராமியே...."பரிபுரச்சீறடி" சிலம்பினை அணிந்த சிறிய திருவடிகளையுடையவளே... உலகத்தைப் படைத்த அன்னையின் வடிவு மிகப்பெரிது.. ஆயினும் நம் போன்ற சிறியோர்களும்
காணும் வண்ணம் அவள் அழகிய சிறு குழந்தை வடிவில் காட்சி தருகிறாள்..அன்னையை சிறு குழந்தை வடிவில் மனத்தில் எண்ணிப் பாருங்கள்

ஆஹா...எத்தனை அழகிய திருக்காட்சி இது... "பாசாங்குசை பஞ்சபாணி" பாசத்தையும் அங்குசத்தையும் ஏந்தியவளே... ஐந்து வித மலர்களால் ஆன அம்புகளை உடையவளே...அன்னையின் கையில் பாசம் எதற்காக? அங்குசம் எதற்காக?? உலகியல் பந்தங்களில் நம்மைப் பிணைப்பதற்காக பாசத்தையும், பின்னர் அப்பந்தங்களிலிருந்து நம்மை விடுவிப்பதற்காக அங்குசத்தையும் ஏந்தியிருக்கின்றாள்.. சரி ஐந்து வித மலரம்புகள் எதற்காக?? முன்னரே இதைப் பற்றிப் பேசியிருக்கின்றோம்...அவளைச் சரணடைந்தால், நமது ஐந்து வித புலன்களையும் அடக்கியாள்பவள் அவளே...இதையே பஞ்சபாணி எனும் திருக்காட்சி உணர்த்துகின்றது. "இன்சொல் திரிபுரசுந்தரி" இனிமையான சொற்களைப் பேசும் திரிபுர சுந்தரியே... அன்னை என்றென்றும் மக்களிடம் அன்பு பூணுபவள்.. எனவே இன்சொல்லையுடையவள்..

"சிந்துர மேனியள் " செந்தூரவண்ண மேனியைக் கொண்டவள். "தீமை நெஞ்சில்புரி புர வஞ்சரை அஞ்ச" தீமையான நெஞ்சம் கொண்டவர்கள்... முப்புரங்களையும் ஆண்ட அசுரர்கள்.. வஞ்சகர்கள்.... "அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை எரிபுரை மேனி இறைவர்" வஞ்சகர்களான அசுரர்கள் அஞ்சும்படி மேருமலையை வில்லாக வளைத்து ஏந்திய கையையுடையவரும்... எரியும் நெருப்பினையொத்த திருமேனியைக்
கொண்டவருமான ஈசன் சிவபெருமானின்.... "செம்பாகத்து இருந்தவளே "சரிபாதியாக இடப்பாகத்தில் அமர்ந்தவளே... அபிராமி அன்னையே...

பாடல் நாற்பத்து நான்கு

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே

விளக்கம் :
தவம்புரியும் எங்கள் அபிராமியன்னையானவள் எங்கள் சங்கரனாரின் துணையாகி அவர் இல்லத்து மங்கலமானவள். அவளே பராசக்தியாக சங்கரனாரின் தாயுமானவள். ஆகையால் இவளே தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வமாவாள். எனவே இனிமேல் நான் வேறு ஒரு தெய்வத்தைத் தொழுது அவர்கட்குத் தொண்டு செய்து துவளமாட்டேன்...அன்னையின் மூன்று வித்தியாசமான நிலைகள் வியப்பைத்தருகின்றன... அவை.

1. தவம் செய்பவள்..
2. சங்கரனாரின் மனைவி...
3. சங்கரானாரின் தாய்...

தவம் செய்யும் வாழ்க்கையை ஏற்றோர் குடும்பவாழ்வில் ஈடுபடுவதில்லை. எனவே முதற்கூற்று இரண்டாம் கூற்றோடு முரண்படுகின்றது.. மனைவியானவன் அக்கணவனுக்குத் தாயாக முடியாது. எனவே இரண்டாம் கூற்றோடு மூன்றாம் கூற்று முரண்படுகிறது. ஆனால் அதுதான் அன்னை அபிராமியின் பெருமை...ஆதிபராசக்தியான அவள் "மாத்தவளே..." என்று முன்னரொரு பாடலில் அபிராமி பட்டரால் குறிப்பிடப்பட்டாள்... உலகைப் படைத்தவளும் அவளே.. தனக்குத் துணையாக மும்மூர்த்திகளைப் படைத்து அவர்கட்குத் தாயானவளும் அவளே...பின்னர் முப்பெருந்தேவியராக உருக்கொண்டு அம்மும்மூர்த்திகளுக்கும் துணையாக நின்றவளும் அவளே...

"எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்" மனைவியே மனைக்கு மங்கலமானவள்..எனவேதான் "பெண்ணிற்பெருந்தக்க யாவுள.." என்று பாடினான் அய்யன் திருவள்ளுவன். ஆனால் உலகையே படைத்த அன்னை ஆதிபராசக்தியானவள் ஈசனது மனைவியானாள். அவன் இல்லத்துக்கு மங்கலமானாள்.. எத்தனை பெரிய பேறு பெற்றான் எங்கள் சங்கரன்... "அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்"
உமையவளாய் நின்ற ஆதிபராசக்தியே சங்கரானாருக்கு அன்னையும் ஆனவள்..."ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்" உலகமே வணங்கும் தன்மை பெற்ற சங்கரனாரைப் பெற்ற தாயாகி நின்றதால், எங்கள் அபிராமியே தெய்வங்கள் எல்லோருக்கும் மேலான தெய்வமானவள்... தெய்வங்களையெல்லாம் படைத்த தெய்வமானதால் இவளே மேலான தெய்வம்... "இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே" "துவளேன்" எங்கள் அன்னை அபிராமியே தெய்வம் என்பதை உணர்ந்து கொண்ட பின்னர் நான் இனி வேறு எந்த தெய்வத்துக்கும் என் மெய்யால் தொண்டு செய்து துவள மாட்டேன்..

எத்தனை தெய்வங்களய்யா....?? அறிவைக் கொடுக்கக்  கலைமகள்... செல்வத்தைக் கொடுக்க அலைமகள்... வீரத்தைக் கொடுக்க
மலைமகள்... அவர்தம் மனையோர்... முழுமுதற்கடவுளான ஆனைமுகன்.. அவனது தம்பியான ஆறுமுகன்... நவக்கிரகங்கள்... திக்குக்களையாளும் தேவதைகள்...பஞ்சபூதங்கள்... என்று முப்பத்து முக்கோடித் தேவர்களையும் பட்டியலிடலாம்... ஆனால் எல்லாரையும் படைத்து நமக்களித்த அன்னை அபிராமியே நமக்கு அன்பு செய்யும்படி அருகில் வந்த பின்னர் வேறு தெய்வங்களுக்கு நான் ஏன் தொண்டு செய்ய வேண்டும்? ஒவ்வொரு தேவைகட்கும் ஏன் அவர்கட்கு தொண்டு செய்து துவள வேண்டும்.. இனி இப்படி நான் துவளமாட்டேன்.. அன்னையே உன்னை மட்டுமே வணங்குவேன் என்று பாடுகிறார் அபிராமிப் பட்டர்...
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்..
.
 பாடல் நாற்பத்தைந்து

தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே

விளக்கம் :
அபிராமி அன்னையே... உனக்குப் பணிவிடைகள் செய்யாது, உன் திருப்பாதங்களை வணங்காது, துணிவுடன் தங்கள் மனத்தில் பட்டதையே கடமையெனப் பழங்காலத்தில் செய்தவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ தெரியாது...அவர்களைக் கண்டு அடியேனும் அதன்படி நடந்தால் அது சரியோ அல்லது தவறோ என்பதும் அறியேன். ஆயினும் நான் தவறே செய்தாலும் என்னை வெறுக்காமல் பொறுத்தருள் தேவி...
இறையருளைப் பெறுவதற்கு முயற்சி செய்யாமல் தங்கள் இச்சைப் படியே ஞானமார்க்கத்திலும், கர்ம யோக மார்க்கத்திலும் நின்று முக்தியடைந்த ஞானிகள் பழங்காலத்தில் இருந்தனர். ஆனால் பக்திமார்க்கமே இறையருள் பெறுவதற்கு மிகவும் எளிதான மார்க்கமாகும்..

அன்னையே... உனக்கும் உனது அன்பர்களுக்கும் பணிவிடைகள் செய்யாது, உன் திருப்பாதங்களைத் தொழாது தங்கள் இச்சைப்படி கர்மயோகத்திலோ, ஞானமார்க்கத்திலோ பழங்காலத்தில் நின்றோர் இன்றும் இருக்கின்றார்களோ இல்லையோ.. நான் அதனை அறியேன்...
"அப்பரிசு அடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ" அடியேனும் அவர்களைக் கண்டு மனம் மாறி அவர்கள் வழி நின்றால் அது தவறோ...அல்லது சரியோ... கைதவம் - தவறு அல்லது அநீதி என்று பொருள் படும்..செய்தவம் - நீதி என்று பொருள் படும்.. "செய்தவமின்றேல் கைதவம் ஆளும் "என்பது ஔவையார் வாக்கு. முன்னரே அன்னையை விடுத்து வேறெந்த மார்க்கத்திலும் செல்ல மாட்டேன் என்று உறுதியாகக் கூறிய அபிராமிப் பட்டர் இவ்விடத்து வேறொருவர் வழியைக் கண்டு தானும் மனம் மாறிவிடுவோமோ என்று
அஞ்சும்படி பாடுவது வியப்பைத் தருகின்றது..

ஆயினும் அவர் என்றும் அன்னையின் அன்பு பாலகனாகவே இருந்தார்.. மனம் மாறும் இயல்பு படைத்த மானுடராய்ப் பிறந்து விட்டோம். நாம் அன்னையை விட்டு விலகவேண்டாம் என்று நினைத்தாலும், நமது கர்மா - முன்வினைப் பாவங்கள் நம்மை நல்நெறியிலிருந்து பிரித்து வேறு பாதைக்கு அழைத்துச் சென்றுவிடுமோ என்ற அச்சம்தான் அபிராமிப் பட்டரை இவ்வண்ணம் எண்ணத் தூண்டுகிறது.. அவ்வாறு நான் உன்னை
விட்டு விலகிச் சென்றாலும், அன்னையே.. .என்னை வெறுக்காது பொறுத்தருள்வதுதான் உன் தாயன்பை உணர்த்தும்.. எனவே அன்னையே.. என்னைப் பொறுத்தருள்,,,

பாடல் நாற்பத்தாறு

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே
விளக்கம் :
அபிராமி அன்னையே... புதிதாய்த் தோன்றிய விடத்தை உண்டு கறுத்த கழுத்தையுடைய ஈசனது இடப்பாகம் அமர்ந்த பொன்னே... தம் அடியார்கள் வெறுக்கும் படியான செயல்களைச் செய்தாலும் பெரியோர்கள் அவர்களது செயல்களைப் பொறுத்து அன்பு செய்யும் வழக்கம் புதியது அல்லவே... நான் நீ வெறுக்கும்படியான செயல்களைச் செய்து உன்னை விட்டு விலகிப்போனாலும் நீ வெறுக்கும்படியான செயல்களைச் செய்தாலும், உன்னையே வாழ்த்துவேன்...அன்னையே எவ்வழி சென்றாலும் நான் உன்னையே வாழ்த்துவேன்.. நீ என்னை
மன்னித்து அருளிச் செய்வது உனது பெருந்தன்மை என மறைமுகமாக ஒரு வேண்டுதலை இப்பாடல் தருகின்றது.

"புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான்" புத்தம் புதிய நஞ்சு...அமரர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பிறந்த புத்தம் புதிய
விடம்.. உலகை அழிக்க வந்தபோது அப்புது நஞ்சை அருந்தி உலகைக் காத்து தன் கழுத்தினை நீலமாக்கிக் கொண்ட... கறுப்பாக்கிக் கொண்ட ஈசன்..சிவபெருமான்... "இடப்பாகம் கலந்த பொன்னே.." அப்பனது இடப்பாகம் அமர்ந்தவளே... சேர்பவளே... இருந்தவளே... எனப் பாடிய அபிராமிப் பட்டர் இவ்விடத்து இடப்பாகம் கலந்த பொன்னே என்கிறார்.. அப்பனது இடப்பாகத்தில் கலந்து விட்டவள்... பொன்மகள்....
"வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியது அன்றே " உலகம் ஏற்றுக்கொள்ள இயலாத தவறுகளைத் தம் பிள்ளை புரிந்தாலும், அன்னையானவள் தன் பிள்ளையை என்றும் விட்டுக் கொடுப்பதே இல்லை.. அவனைப் பொறுத்தருள்வாள்..

தம் அடியார்கள் தாம் வெறுக்கத்தக்க செயல்களைப் புரிந்தாலும் ஞானிகள், குருமார்கள், தங்கள் சீடர்களை மன்னித்து ஏற்றுக் கொள்கின்றனர்.. இது பெரியோர்களின் பெருந்தன்மையைக் குறிக்கும்.. இது போன்ற நிகழ்வுகள் புதிது அல்ல என் அன்னை அபிராமியே...நானும் உலகோர் வெறுக்கும் படியான செயல்களைப் புரியலாம்.. ஆனால் என்னை மன்னிப்பது உன் கடனே... "மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை
வாழ்த்துவனே.." உன்னால் மறுக்கப் படுகின்ற செயல்களைப் புரிந்தாலும் கூட,,, அன்னையே... நான் உன்னையே வாழ்த்துவேன்... உன்னையே சரண்புகுவேன்..உன்னை விடுத்து எம்மைக் காக்க யார்தாம் உண்டு..? நீ எனக்கு அடைக்கலம் தந்தருளவேண்டும்... அது உனது நீதி..."அன்றே தடுத்து எம்மை ஆட்கொண்டாய்" என்று தவறிழைக்கும் முன்னரே என்னை உன் அடியவனாக்கிக் கொண்டாய் என்று பாடி, உத்தமனாய் வாழ்ந்த அபிராமி  பட்டரே.. தான் தவறிழைக்கும் நிலை பற்றிப் பாடி வேண்டுகிறார்..அன்னையே... எங்களது பிழைகளையும் பொறுத்தருளம்மா என வேண்டி பாடலை மீண்டும் ஒருமுறை பாடிப் பாருங்கள்.. நம்மைப் பிடித்துள்ள பாவச் சுமைகள் விட்டொழியட்டும்...

அபிராமி அந்தாதி விளக்கவுரை 13

பாடல் நாற்பத்தேழு

வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும் படி அன்று விள்ளும் படி அன்று வேலை நிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே
விளக்கம் :
வாழ்வதற்குரிய நெறிமுறையொன்றை என் மனத்தில் நான் கண்டுகொண்டென்.. அதை அறிந்த ஒருவர் அழிவதில்லை... தாம் பிறருக்குச்
சொல்வதுமில்லை.. அது அத்தனை எளிமையான வழியுமில்லை.. கடலால் சூழப்பட்ட ஏழு வகை நிலங்களுக்கும், பெரிய மலைகள் எட்டுக்கும், எட்டாமல், இரவையும் பகலையும் ஒளியால் நிரப்பும் சூரிய சந்திரர்களுக்கு நடுவே நின்று சுடரும் பேரொளியான அபிராமி என்னும் ஒளி அது...
அன்னையை, ஆதிபராசக்தியை, அன்பென்னும் பெரும் பண்பால் நம்மை ஆட்கொண்டவளை, வேதத்தின் உட்பொருளை, எளியோரின் வேதமாய்த் திகழ்பவளை வர்ணணை செய்ய வார்த்தைகள் ஏது? அவளே நெறி... அவளே பாதை... அபிராமிப் பட்டர் சொல்லும்
வாழ்க்கை நெறி அன்னை அபிராமி மட்டுமே... அபிராமி ... அபிராமி ...என்றழைத்தாலே போதுமே.. வாழ்வின் வழிமுறைகளை ஏற்று நெறிப்படுத்தி நடத்திச் செல்பவள் அவளே...

அபிராமி அருகிருக்க வேதங்களை ஏன் ஓத வேண்டும்? அபிராமி அருகிருக்க வேள்விகள் ஏன் செய்ய வேண்டும்? எல்லா நோய்களையும் தீர்க்கும் மருந்தே நம் அருகிருக்க மருத்துவனை ஏன் நாட வேண்டும்..? அபிராமியே...எனக்கு எல்லாமும் ஆனவள் நீ... நீயே வாழ்க்கை வழிமுறை..."வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே" நல்முறையில் வாழ்வினை நடத்துவதற்குரிய வழிமுறையொன்றை என் மனத்திலே கண்டு கொண்டேன்... அது எப்படிப் பட்டது?? "ஒருவர் வீழும் படி அன்று" மனிதரை இழுத்துச் சென்று சீரழிக்கும் அழிவு வழியல்ல அது...மேலும்... "விள்ளும் படி அன்று" அதை அறிந்தோர் மிக எளிதாக விளக்கிச் சொல்லக்கூடிய வழியும் அல்ல அது.,...அற்புதமான அனுபவமானவள் அன்னை... அவளைக் கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் எனச் சொல்வார்கள்.. இறை அனுபவத்தை வார்த்தைகளில் விளக்கிச் சொல்வது என்பது எளிதானது அல்ல... மிகவும் எளிதாக இறைவனைக் கண்டேன்..கண்டேன்... என்று பிதற்றுபவர் இறை அனுபவத்தைக் கண்டே இருப்பதில்லை...

அப்படியானால் அபிராமிப் பட்டர் இதனை எங்ஙனம் விளக்குகிறார்? அவர் விளக்கவே இல்லை... அன்னையை நேரடியாக நம் கண்களுக்கே அனுப்புகிறார்..இதைப் பாரடா மைந்தனே... இவளே உன் தாய்... இவளே உன்னைக் காப்பவள் என்று அன்னையெனும் மாபரிசினை நமக்களித்தவர் அபிராமிப் பட்டர்... சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி என்று விளக்கமளித்துக் கொண்டிருந்தார் நண்பர் ஒருவர்.. எனக்கு அது புரியவே இல்லை.. ஆனால் என் அம்மா சர்க்கரைப் பொங்கலை தயார் செய்து எனக்களித்த போது அதன் செய்முறைகளைப் பற்றி நான் கவலைப் படவே இல்லை... அமிழ்தமே அருகிருக்க அதை அடைவதற்குரிய வேறு வழிமுறைகளை நாம் எதற்காகக் கற்க வேண்டும்...?
"வேலை நிலம் ஏழும் " வேலை எனும் பதம் கடலினைக் குறிக்கின்றது.. கடலால் சூழப்பட்ட நிலங்கள் ஏழும்... "பரு வரை எட்டும்" வரை எனும் பதம் மலையைக் குறிக்கும். பெரிய மலைகள் எட்டும் "எட்டாமல்" அடைய இயலாமல் "இரவு பகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே" இரவிலே சூழும் சுடர் சந்திரன்... பகலிலே சூழும் சுடர் சூரியன்.. இவர்கட்கு நடுவே கிடந்து சுடரும் சுடரொளி.... சந்திரன் தாமாகவே ஒளிர்வதில்லை என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்..

சூரியனது ஒளியை வாங்கிப் பிரதிபலிக்கின்றது சந்திரன் என்று உரைப்பார்கள்.. பூமியின் இருளை நீக்க வந்த சுடர்களான இவை இரண்டுக்கும் நடுவே சுடரும் சுடரொளி... அதாவது.. சந்திரன் சூரியனின் ஒளியை வாங்கி ஒளிர்கின்றது... சூரியனுக்கு ஒளியை அளிப்பது யார்???
அதுதான் இந்தச் சுடரொளி... அபிராமி என்னும் சுடரொளி... அபிராமியின் ஒளியை சூரியன் பிரதிபலித்து அழகிய பகலினை நமக்குத் தருகின்றது... சூரியனது ஒளியை சந்திரன் பிரதிபலித்து இனிக்கும் இரவுப் பொழுதினைத் தருகின்றது...அட முட்டாளே... இன்று பூரண அமாவாசை... இன்றெப்படி நிலவு தோன்றும் என்று என்னைக் கேட்டாயே... உலகுக்கு ஒளியை வழங்கும் சூரிய சந்திரருக்கும் ஒளியை
வழங்கும் அன்னை அபிராமியே என் வாழ்க்கை நெறி... அவள் நினைத்தால் அவளருளால் இன்று நிலவு தோன்றாதா?.. தோன்றுமடா.... அது என் அன்னையின் பேராற்றல் முன்னே சிறு துளி...

பாடல் நாற்பத்தெட்டு

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே
விளக்கம் :
சுடரும் பிறை நிலவு தங்கும் சடைமுடியையுடைய ஈசனின்மேல் ஒன்றிப் படர்கின்ற நறுமணம் வீசும் பசுங்கொடியைப் போன்றவளான அன்னை அபிராமியை இடர்களெல்லாம் தவிர்த்து இமைப்பொழுது நெஞ்சில் நிலை நிறுத்தி, தியானித்து இருப்போர், குடலும், இறைச்சியும், குருதியும் தோயும் இந்த மானுடப்  பிறப்பினை மீண்டும் எய்துவாரோ?? இல்லவே இல்லை..உலகம் என்பது மாயைகளால் நிறைக்கப்பட்ட ஒரு நாடகமேடை போன்றது... இதெல்லாம் மாயை என்று புரிந்த மனத்தில் மட்டுமே ஞானம் உதயமாகின்றது.. ஞானம் உதயமான மனது பின்னர் பிறப்பு பற்றி சிந்திப்பதில்லை. அதை விரும்புவதுமில்லை...நம் கிராமப் பகுதிகளில் ஒரு சொல்வழக்கு உண்டு.. இப்பிறவியில் யாரொருவர்
ஆலய புணரமைப்புப் பணிகளில் ஈடுபடுகிறாரோ அல்லது புதிதாக ஒரு ஆலயத்தைக் கட்டுகிறாரோ அவருக்கு இதுவே ஏழாவது பிறப்பு.. அதாவது இறுதிப் பிறப்பு. மீண்டும் அவருக்கு பிறப்பு இல்லை.. என்று சொல்வார்கள்.. ஆலயத் திருப்பணிகளில் அத்தனை சுலபமாக ஈடுபட்டுவிட முடியுமா? அதற்கு இறைவனின் அழைப்பு வேண்டும்.. அது இருந்தால் மட்டுமே சாத்தியம்..

அன்னையை நம்பி அவளது திருப்பணிகளில் ஈடுபடுவது என்பது பெரும்புண்ணியம்.. இன்றைய தினம் தமிழகத் திருக்கோயில்களில் பெரும்பாலானவை சுற்றுலாத்தலங்கள் போன்றும், திரையரங்குகள் போன்றும் மாறிக்கொண்டே வருகின்றன. இறைவனை அருகிருந்து
காண்பதற்கு ஒரு கட்டணம்.. அங்கே அமர்ந்திருந்து காண்பதற்கு வேறு கட்டணம்.சற்றே தொலைவிலிருந்து காண்பதற்கு ஒரு கட்டணம்.. மிகவும் தொலைவிலிருந்து காண்பதற்கு கட்டணம் ஏதுமில்லை... என்னவோ இவர்களது தந்தையும் தாத்தனும் தங்கள் சொந்தப் பணத்தில் ஆலயத்தைக் கட்டி வைத்ததைப் போன்று பேயாட்டம் போடுகின்றார்கள்.. சரி.. அவ்வளவு பணம் வருகின்றதே.. வருகின்ற பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவோமே என்ற எண்ணமும் அவர்கட்கில்லை.. செந்தூர் செல்லும் போதெல்லாம் ஆலயத்தின்
நிலையைக் கண்டு மனம் வருந்துவேன்.. கட்டணம் செலுத்தி அமர்ந்து குமரனைக் கண்டது ஒரேயொரு முறைதான்... திருமணம் முடிந்து கடல்நீராடி ஆலயவழிபாடு செய்யச் செல்லும்போது மட்டும்தான் அது நடந்தது. இதுபோன்ற நிலைமைகள் மாற வேண்டும்.. என்பதுதான் நமது விருப்பம். ஆலயத்திற்கென்றே வரும் வருமானம், ஆலயத்திருப்பணிகளுக்கே செலவிடப் படவேண்டும்.. ஆலயங்கள் குப்பைக்
கூடாரங்களாகிவிடக்கூடாது... அங்கே திருப்பணி செய்கிறேன் என்ற பெயரில் ஆலயத்தை அசுத்தம் செய்யும் கயவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். சரி அபிராமி அந்தாதிக்கு வருவோம்..

"சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில்" ஒளிரும் பிறைச் சந்திரன் தங்கும் சடைமுடியையுடைய குன்றான சிவபெருமானின் மேல் "ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக்கொடியைப்" ஒன்றிப் படரும் நறுமணம் வீசும் பசுங்கொடியை....எங்கள் அன்னையை... குன்றின் மீது பசுங்கொடி எங்ஙனம் படருமோ அங்ஙனம் அன்னையானவள் ஈசன் மீது படர்கின்றாளாம்.. கற்பனை வளத்தைப் பாருங்கள்...அதுவும் நறுமணம் வீசும் பசுங்கொடியாம்... அவளைப்... "பதித்து நெஞ்சில்"நெஞ்சில் நிலைநிறுத்தி "இடரும் தவிர்த்து" இடர்களெல்லாம் தவிர்த்து...அன்னையைத் தியானிக்க வரும்போது எழும் இடர்களையெல்லாம் தவிர்த்து...."இமைப்போது இருப்பார்" இமைப்பொழுதாகிலும் இருக்கும் தன்மை படைத்தவர்..."குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே" குடலும், இறைச்சியும்,குருதியும் நிறைந்த இவ்வுடம்பினை.... மானுடப் பிறப்பினை... "பின்னும் எய்துவரோ?" இனிமேலும் அடைவார்களோ...? அதெப்படி சாத்தியம்?? அமைதியாயிருக்கின்ற மனது தியானிக்க அமரும்போதுதான் அலைபாய ஆரம்பிக்கும்..அலைபாயும் மனதோடு அமர்ந்து, எழுகின்ற மாற்று எண்ணங்களையெல்லாம் தவிர்த்து, இமைப்பொழுதாவது... ஒரு நொடியாவது அன்னையை மனத்தில் நிறுத்தி தியானிப்போருக்கு மீண்டும் பிறப்பு இல்லை... என்பது அபிராமிப் பட்டரின் கருத்து... அப்படியாயின் அவளையே என்றென்றும் தியானித்திருக்கும் அபிராமிப் பட்டருக்கு???

தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. 

பாடல் நாற்பத்தொன்பது

குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே
விளக்கம்
நரம்பைக் கொண்டு இசையை எழுப்பும் இசைக்கருவிகளின் இசையாய் நின்ற அபிராமி அன்னையே... இந்த உடலில் குடியிருக்கும் உயிரானது காலதேவன் கொடுத்த காலக்கெடு முடிந்தவுடன் அவன் அழைக்க வரும்போது அஞ்சி நடுங்கும்..அவ்வமயம் நீ வளையல்கள் அணிந்த உனது அழகிய திருக்கரங்களை அசைத்து, அரம்பை முதலிய தேவமாதர்கள் சூழ வந்து நின்று அஞ்சாதே என்பாய்..முன்னர் பலமுறை அன்னையே.. நான் மரிக்கும் தருவாயில் உன் கணவரோடு வந்து காட்சியளிப்பாய். திருமணக்கோலத்தில் வந்து காட்சிதருவாய்... என்னை அஞ்சாதே என்பாய் என்று பாடிய அபிராமிப் பட்டர் இவ்விடத்து அரம்பை முதலிய தேவமகளிரோடு வந்து காட்சியளிப்பாய்.. என்னை அஞ்சாதே என்பாய் என்கிறார்..

"நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே" நரம்பினால் ஆன இசைக்கருவிகளில் இசையாய் நின்ற எங்கள் அபிராமி அன்னையே... "குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி " உடம்பை அடிப்படையாகக் கொண்டு குடிபுகுந்த உயிர்... ஆன்மா... ஆன்மாவுக்கு என்றென்றும் அழிவில்லை... ஆன்மாவானது இறைவனோடு ஒன்றியிருக்கின்றது.. பின்னர் உலகத்தில் பிறப்பெடுத்து ஒரு உடம்பில் தங்கி பூலோக வாழ்வை அனுபவிக்கின்றது... அச்சமயம் உயிரானது உடம்போடு கொண்ட பந்தம் நெருக்கமாகிவிடுகின்றது. அவ்வமயம் உயிருக்குத் தெரிவதில்லை.. இது நமது நிரந்தரமான இடமல்லவென்று... எனவே நிரந்தரமற்ற இவ்வுடலைப் பேணுவதிலும், அவ்வுடலின் இச்சைகளைப் பூர்த்தி செய்வதிலுமே உயிரின் கவனம் செல்கிறது.. எனவேதான் மரணம் நேரும்போது அச்சம் மனத்தில் குடி கொள்கிறது. இதைத்தான் "வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து மறுகும்" உடம்புக்கென்ற ஒரு காலக்கெடுவை காலதேவன் நிர்ணயித்துள்ளான்..

அந்த காலக்கெடு முடியும்போது நாம் விரும்புகிறோமோ இல்லையோ அவன் வந்து அழைத்துச் சென்று விடுகிறான். கோபம் நிறைந்த காலதேவன் தான் கொடுத்த வரம்பு நிறைவடையும்போது வந்து அழைக்கின்றான். அப்போதுதான் உயிரானது அஞ்சி மறுகுகிறது என்கிறார்... "அப்போது " அந்த சமயத்தில் "வளைக்கை அமைத்து" வளையல்களை அணிந்த உனது அழகிய திருக்கரத்தை அசைத்து... "அரம்பை அடுத்த
அரிவையர் சூழ வந்து " அரம்பை முதலிய தேவ மகளிர் புடைசூழ வருவாய்.. வந்து "அஞ்சல் என்பாய்" அஞ்சாதே மகனே என்றிடுவாய்... மரணபயத்தை.. இசையாகிய நீயே போக்குவாய்... என்று பாடுகிறார் அபிராமிப் பட்டர்.
பாடல் ஐம்பது

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
விளக்கம் :
அன்னை அபிராமியானவள் உலக நாயகி, பிரம்மசக்தியாகத் திகழ்பவள், திருமாலின் சக்தியுமானவள், அழகிய திருக்கரங்களில் ஐந்துவித மலரம்புகளைத் தாங்குபவள், சம்புவான சிவனின் சக்தி.. சங்கரனின் மனைவி.. அழகு நிறைந்தவள், கொடிய நச்சினை வாயில் கொண்ட பாம்பினைக் கொண்டிருப்பவள், பலவிதமான மாலைகளை அணிந்த மாலினி.. உலகை இரட்சிக்கும் வாராகி, திரிசூலத்தை ஆயுதமாகக் கொண்டவள், மாதங்க முனிவரின் மகளாக உதித்தவள் என்ற பலவிதமான புகழினைக் கொண்டவள்.. அவளது திருப்பாதங்களே நமக்கு என்றென்றும் அரண்.அன்னையின் பல்வேறு திருநாமங்களைப் பாடும் இப்பாடல் மிகவும் அருமையானது..மீண்டும் மீண்டும் பாடத்தோன்றுவது..

"நாயகி" உலகத்தின் நாயகியானவள்... "நான்முகி" நான்முகனான பிரம்மனின் சக்தியாகவிளங்குபவள்.. "நாராயணி" நாரணனின் சக்தியாக விளங்குபவள்..(நாராயணனின் தங்கையானவள் என்றும் சொல்வார்கள்) "கை நளின பஞ்ச சாயகி.."நளினமான திருக்கரங்களில் ஐந்துவித மலரம்புகளைத் தாங்குபவள்.. அவ்வைந்து மலரம்புகளைப் பற்றி ஏற்கெனவே பேசியிருக்கின்றோம்.."சாம்பவி" சம்புவான சிவபெருமானின் சக்தி... "சங்கரி.." சங்கரனின் மனைவி... "சாமளை.." அழகிய வடிவுடையவள்..."சாதி நச்சு வாயகி " கொடிய நச்சு நிறைந்த வாயையுடைய
பாம்பினைக் கொண்டவள்.. பாம்பு ரதமேறும் பார்வதியானவள்.. "மாலினி .."பலவித மாலைகளை அணிந்தவள்.. "வாராகி" உலகைக் காக்கும் வராக உருவினள்,.."சூலினி" திரிசூலமேந்தும் மாகாளி.."மாதங்கி" மாதங்க மாமுனிவர் செய்த தவத்தால் அவருக்கு மகளாகப் பிறந்தவள். " என்று ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே" என்று பல்வேறு புகழ்ப்பெயர்களைக் கொண்ட எங்கள் அபிராமியன்னையின் திருப்பாதங்களே எங்களுக்கு அரண்.. பாதுகாவல்...இந்த பாடலை கண்கள் மூடி ஒருமுறை பாடிப் பாருங்கள்.. அன்னையின் பல்வேறு
திருவுருவங்கள் நம் கண்ணெதிரே தோன்றி வியப்பளிக்கும்..


அபிராமி அந்தாதி விளக்கவுரை 14

பாடல் ஐம்பத்தொன்று.

அரணம் பொருள் என்று அருள் ஒன்றும் இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே

விளக்கம் :
தாங்கள் கட்டிய முப்புரங்களை நிலையான செல்வம் என்று நினைத்து அருளென்பதே இல்லாத அசுரர்களின் பகையை அழித்திட சினங்கொண்டெழுந்த சிவபெருமானும், முகுந்தனான திருமாலும் சரணம் சரணம் என்று வணங்கும்படி நின்ற அம்மையின் அடியார்கள் இந்த உலகத்தில் மரணம், பிறவி இரண்டையும் அடையமாட்டார்கள்..மரணமில்லாப் பெருவாழ்வு அடைவது எங்ஙனம்? சாத்தியமற்ற ஒன்று... ஆனால் இதை அம்மையின் அடியார்கள் அடைவார்கள் என்று அபிராமி பட்டர் உரைக்கின்றாரே... ! சிந்திப்போம்... இதையே வள்ளுவன் "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்" என்றுரைத்தான்.. அபிராமி பட்டர் இன்றையதினம் நம்மிடையே இல்லை... ஆயினும் அவர் தந்த அழகிய பாடல்களால், தமது பக்தி எனும் பெருந்தொண்டால், தமிழ் உள்ளளவும், தமிழ்நாடு உள்ளளவும் என்றென்றும் இருப்பார் இல்லையா?? அதுதான் மரணமில்லாப் பெருவாழ்வு.. அதைப்பற்றித்தான் அபிராமிப் பட்டர் இவ்விடத்து உரைக்கின்றார்...

"அரணம் பொருள் என்று " தாங்கள் கட்டிய கோட்டைகளையே நிலையான செல்வம் என்று நினைத்து... முப்புரங்களைக் கட்டிய அசுரர்களுக்கு அதுவே நிலையானது என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது. பின்னர் அதுவே அவர் தம் அழிவுக்கும் வித்தாகி விடுகின்றது.. "அருள் ஒன்றும் இலாத" அருளே இல்லாத... கருணையே இல்லாத...தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் கொடுமைகள் புரிந்த.... கவனிக்க வேண்டிய
செய்தி நமக்கும் இவ்வரிகளில் உள்ளது... பொருட்செல்வத்தை நிலையானது என்று நாம் நினைக்கத் துவங்கும் வேளை நம் மனத்திலிருந்து அருளானது தானாகவே வெளியேறிவிடுகின்றது... எனவேதான் வள்ளுவனும் "தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கோர்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு" என்று பகர்ந்தான்.. திருமகள் நம் இல்லத்தைத் தன் அருளால் நிரப்புவது, நம் மனந்தனில் குடிகொண்ட அருளை வெளியேற்றுவதற்கு அல்ல.. தகுதியுடையோர்க்கு உதவி செய்வதற்காகத்தான்.. எனவே பொருள் வரும் வேளை, அதை நிலையென்று நினைத்தால் அருள் போய்விடும்... அதையே நிலையானதன்று என எண்ணித் தருமங்கள் செய்து வந்தால் நீக்கமில்லா நிலையான வாழ்வு
பெறலாம்..

"அசுரர் தங்கள் முரண் " தங்கள் கோட்டைகளே நிலையானது என்று நினைத்த அசுரர்களின் பகைமை.... "அன்று அழிய முனிந்த பெம்மானும் " அழிய வேண்டும் என்று சினங்கொண்டு எழுந்த சிவபெருமானும், "முகுந்தனுமே"திருமாலுமே.. "சரணம் சரணம் என நின்ற நாயகி " சரணம் சரணம் என்று வணங்கும்படி நின்ற அம்மை...முப்புர அசுரர்களை அழித்து மாந்தரைக் காத்தவர் ஈசனென்றால், தசாவதாரங்களை எடுத்து தீமைகளினின்று மாந்தரைக் காத்தவர் திருமால்... இவர்கள் இருவருமே அம்மை ஆதிபராசக்தியிடம் சரணம் சரணம் என்று வந்து வணங்கி நின்றார்கள்.. ஏனெனில் அவர்களைப் படைத்தவளே அந்த பராசக்திதான்... "தன் அடியார் மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே" அன்னையின் அடியார்கள்... அவளையே சரண்புகுபவர்கள் மரணம், பிறப்பு என்ற சுழற்சி வாழ்க்கையை மீண்டும் எய்த மாட்டார்கள்.

பிறப்பறுக்கப் படவேண்டும் என்று அன்னையை வேண்டிய அபிராமிப் பட்டர்...மரணம் எய்தும் வேளை என் அருகே வந்து நில்லம்மா என வேண்டிய அபிராமிப் பட்டர்... இவ்விடத்து அன்னையின் அடியார்கள் மரணமெய்த மாட்டார்கள் என்று சொல்வதன் காரணம் என்ன?? மரணம் என்புதோல் போர்த்திய இந்த உடம்புக்குத்தானேயன்றி, நமது ஆன்மாவுக்கல்ல... அன்னையை நம்பினார், அவளடியே சரணமென்று தஞ்சமடைந்தோருக்கு மீண்டும் பிறப்பில்லை... அவர்களது ஆன்மாவுக்கு மரணமேயில்லை... அது மீண்டும் ஒரு உடலைத் தனக்கு வேண்டுமென்று தேடிச் செல்லாது... செல்லவேண்டிய அவசியத்தையும் அது தாண்டி முக்தி பெற்று விடுகின்றது.. அது பிறப்பறுப்பினைக் குறிக்கின்றது... மரணமில்லாப் பெருவாழ்வு என்பது அன்னையின் அடியார்களுக்குக் கிடைத்த வரம். அன்னையையே தஞ்சமென்று நம்பி விழுந்தோர், புண்ணியங்களை மட்டுமே புரிவாரன்றி, பாவங்களைச் சுமப்பதில்லை... அவர்தம் புண்ணியங்களே அவர்களது பெயர்களை
இவ்வுலகத்தில் நிலைநிறுத்திவிடுகின்றது...

பாடல் ஐம்பத்திரண்டு

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

விளக்கம் :
பிறை நிலவைத் தன் தலைமேல் அணிந்த சிவபெருமானின் திருமனையாளான அன்னை அபிராமியின் திருவடித்தாமரைகள் மேல் அன்பு செய்து அவளை எண்ணித் தவமியற்றுபவருக்கு கிடைக்கும் சின்னங்களாவன... வையகம், குதிரை, ஆனை, மாமகுடம், பல்லக்கு, கொட்டும் பொன், விலையுயர்ந்த முத்து மாலைகள்...அன்னையை எண்ணித் துதிப்போர்க்கு இம்மையில் கிட்டும் செல்வங்களை இப்பாடல்
பட்டியலிடுகிறது. இப்பட்டியலில் இடம்பெற்றவையெல்லாம் பெற்றிருப்போர் பெரும் செல்வந்தர்களாக இருப்பார்கள்.. நாமும் இப்பாடலைப் பாடிப் பெருஞ்செல்வமடைவோம்... (செல்வம் சேருங்காலை முந்தைய பாடலையும் பாடிடுவோம். அப்போதுதான் பொருளோடு அருளும் கூடியிருக்கும்).

"பிறை முடித்த ஐயன் திருமனையாள் " பிறை நிலவைத் தன் சடையிலே அணிந்த சிவபெருமானின் மனையாட்டியின்... அன்னை அபிராமியின்...."அடித் தாமரைக்கு அன்பு முன்பு செய்யும் தவமுடையார்க்கு " திருவடித்தாமரைகள் மேல் அன்பு செய்யும்பொருட்டு முன்னர் தவமியற்றியவர்களுக்கு... "உளவாகிய சின்னங்களே "கிடைக்கும் சின்னங்களாவன.... "வையம" இந்த வையகம்... இந்த வையகமே அவர்தம்
வசமாகும்... "துரகம்" குதிரைகள் கிடைக்கும்... "மதகரி" மதம் நிறைந்த பெரிய ஆனைகள் கிடைக்கும்.. "மாமகுடம்" பெரிய மணிமகுடம் கிடைக்கும். "சிவிகை" அவர்களைச் சுமந்து செல்ல அழகிய பல்லக்குகள் கிடைக்கும். "பெய்யும் கனகம்.." கொட்டும் பொன் கிடைக்கும். தங்க மழை பெய்யும்...சங்கரர் தேவியை வேண்டி கனக நெல்லிகளை மழையெனப் பெய்யச் செய்த வரலாறு நினைவுக்கு வருகின்றது.. "பெருவிலை ஆரம்" அதிக விலைபடைத்த முத்து மாலைகள், மாணிக்க மாலைகள் கிடைக்கும்...

அன்னையின் திருவடிகளை மட்டுமே எண்ணித் தவமியற்றுபவர்களுக்கு இதெல்லாம் கிடைக்கும்... பின்னரும் அவர் அவள்தம் அன்பிலே நீடித்திருந்தால் அருள் கிடைக்கும்... இந்த பாடலினை முதலிலும், முந்தைய பாடலை அடுத்தும் வரிசை மாற்றி வாசித்துப் பாருங்கள்... அழகிய பொருள் (இவ்விடத்து அர்த்தம் என்று அர்த்தமாகின்றது) கிடைக்கும்.. அன்னையை எண்ணித் தவமியற்றுபவர்களுக்கு பொருட்செல்வம் மிகுதியாகக் கிடைக்கும்.. பொருட்செல்வத்தில் திளைப்போர் அருள் மறந்து போனால் அழிவார்கள்... அவளிடம் அன்பு செய்து அவள்
அடியார்களாக இருப்பவர்கள் மரணம், பிறப்பற்ற நிலை எய்துவார்கள்..

பாடல் ஐம்பத்து மூன்று

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனியிருப்பார்க்கு இது போலும் தவமில்லையே

விளக்கம் :
அபிராமி அன்னையே... உனது சின்னஞ்சிறு இடையினில் அணிந்த சிவந்த பட்டாடையையும், உனது பருத்த திருமுலைகளையும், அதன் மேல் அணிந்துள்ள முத்தாரத்தையும், பிச்சிப்பூக்களை அணிந்த உனது அழகிய கருங்கூந்தலையும், உனது மூன்று கண்களையும் மனத்தில் நிறுத்தி வேறெந்த நினைவுகளும் இன்றி தியானித்திருப்பதைத் தவிர சிறந்த தவம் ஏதுமில்லை...கடந்த பாடலில் அன்னையின் திருவடிகளை எண்ணித் தவமியற்றும் அன்பர்களுக்குக் கிடைக்கும் செல்வங்களைப் பட்டியலிட்ட அபிராமிப் பட்டர், இப்பாடலில் எது சிறந்த தவம் என்று பகர்கின்றார். "சின்னஞ்சிறிய மருங்கினில்.." மருங்கு எனும் பதம் இடையினைக் குறிக்கின்றது. அன்னையின் இடை சின்னஞ்சிறியது...அச்சின்னஞ்சிறு இடையினில்... "சாத்திய செய்யபட்டும் " அணிந்த சிவந்த நிறப் பட்டாடையையும், "பென்னம்பெரிய முலையும் " மிகப்பெரிதான திரு
முலைகளையும், "முத்தாரமும்.." அதன் மேல் அவள் அணிந்த முத்து மாலையையும்.... "பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழலும்.." பிச்சிப்பூ சூடிய உனது கருமை நிறக் கூந்தலையும், "கண் மூன்றும்" உனது மூன்று கண்களையும் "கருத்தில் வைத்துத் தன்னந்தனியிருப்பார்க்கு.." தமது மனத்தில் நிலை நிறுத்தி வேறெந்த நினைவுகளும் இன்றி தனித்திருப்பாருக்கு...

இப்பாடலைப் பாடும்போது அன்னையின் அழகிய திருவுருவம் கண்ணில் தோன்றுவதை உணர்கின்றீர்களா... ? அழகிய சின்னஞ்சிறு இடைதனில், சிங்காரமாய்ச் செந்நிறப் பட்டுடுத்தி, உலகைக் காப்பதற்காகத் தோன்றிய பெரிய திருமுலைகள் மீது முத்தாரத்தை அணிந்து, மணம் வீசும் பிச்சிப் பூக்களைத் தன் கன்னங்கரிய கூந்தலில் அணிந்த முக்கண்ணையுடைய அபிராமியானவள் கண்முன் தோன்றுகின்றாள்.
எத்தனை அழகிய தோற்றம்...! இத்தோற்றம் மனத்தில் தோன்றிய பின்னர் வேறெந்த நினைவுகள் எழும்?? தவமியற்ற யாருமற்ற வனத்துக்குச் செல்ல வேண்டுமா? இல்லவே இல்லை... கோடிக்கணக்கான மாந்தர் கூடியிருந்த போதும், வேறெந்த நினைவுகளுமின்றி அன்னையின் திருவுருவத்தை மனத்தில் தியானித்திருந்தால் அதுவே சிறந்த தவம்.. "இது போலும் தவமில்லையே" இதைப்போன்ற சிறந்த தவம்
இல்லவே இல்லை...

எனவே மூன்று பாடல்களையும் இறங்குவரிசையில் பாடிப்பாருங்கள்... இப்பாடல் சிறந்த தவம் என்ன என்பதையும், முந்தைய பாடல், அத்தவமியற்றினால் என்ன கிட்டும், என்பதையும், அதற்கும் முந்தைய பாடல், தவத்தால் கிட்டிய பொருளோடு அருளிருந்தால் பிறப்பு இறப்பற்ற பெருவாழ்வு, அருளற்றுப் போனால் அழிவு...அழகாய் இருக்கின்றது அல்லவா?

பாடல் ஐம்பத்து நான்கு

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்தும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே

விளக்கம் :
வறுமையில் துன்பப் படுபவர்களே... நீங்கள் உங்கள் வறுமையின் பொருட்டு ஒருவரிடம் சென்று உதவி கேட்டு, பின்னர் அவரால் அவமானப்
படுத்தப்படும் நிலை இல்லாதிருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றினால், தவம் செய்யாத கயவர்களிடத்தில் உதவி கேட்டுச் செல்லும் நிலைமையை எந்தக் காலத்திலும் எனக்கு ஏற்படாது காத்த திரிபுரசுந்தரி அன்னை அபிராமியின் திருப்பாதங்களைச் சேருங்கள்... அவளையே தொழுங்கள்..வறுமையைப் போக்கும் பாடல் இது... வறுமையால் துன்பப்படுவோருக்கு அன்னையின் அன்பால் ஆறுதல் சொல்லி அவளிடத்துச் சேர்க்க அபிராமிப் பட்டர் இப்பாடலைப் பாடுகின்றார்..

"இல்லாமை சொல்லி " எம்மிடம் இப்பொருள் இல்லை என்று சொல்லி... "ஒருவர் தம்பால் சென்று " இன்னொருவரிடம் சென்று கையேந்தி... "இழிவுபட்டு நில்லாமை" அவர்களால் இழிவுபடுத்தப் படும் நிலைக்குத் தள்ளப்படாமல் இருக்கும் நிலை ... "நினைகுவிரேல்" எண்ணம் தோன்றினால்... வறுமை மிகக் கொடியது... வறுமையில் வாடுபவர்களைப் பற்றிச் சற்றே எண்ணிப் பாருங்கள்..வறுமை வந்திடில்... வறுமையில் பசி வந்திடில்... எந்த உறவுகளும் துணைக்கு வருவதில்லை... எந்த அன்பும் நினைவுக்கு வருவதில்லை... ஒரு சம்பவத்தை
இவ்விடம் பகிர்ந்து கொள்கின்றேன்.. அதை நான்  கண்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன.. ஆயினும் இன்னமும் அக்காட்சி என் கண்களை விட்டு அகலாது நிற்கின்றது..

அதை எண்ணும்போதெல்லாம் மனம் துடிப்பதைத் தடுக்கவே இயலாது..நான் பெங்களூருக்கு வந்த புதிதில், ஒருமுறை ஊருக்குச் சென்று
கொண்டிருந்தேன். திருவிழாக்காலம்.. நேரடியாக நெல்லைக்குச் செல்லும் பேருந்து கிட்டவில்லை. எனவே மாறி மாறி சென்று கொண்டிருந்தேன்.. கரூரில் பேருந்து நின்று கொண்டிருந்த போது பேருந்து நிலையத்தில் கண்ட காட்சிதான் இது..வயதான தம்பதியர் அப்பேருந்து நிலையத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர்..அம்முதியவர் படுத்திருந்தார். அவரால் எழுவதற்கும் இயலவில்லை.. அவர்
அருகில் இரு குடங்கள்.. சில சாமான்கள்... சில மூட்டைகள்.. மூதாட்டியோ அருகிலிருந்த உணவகத்தில் சென்று இரந்து கொண்டிருந்தார். அக்கடைக்காரனோ அவரை மிகவும் கேவலமான சொற்களால் திட்டிக் கொண்டிருந்தான்.. என்னால் அவ்விடத்து இறங்கவும் இயலவில்லை.. பேருந்து மெதுவாக நகர்ந்து கொண்டுதான் இருந்தது..

என்ன காரணத்தால் இவர்கள் இவ்விடம் வந்திருப்பார்கள்..? கடன் தொல்லையால் யாராவது வீட்டை விட்டு விரட்டியடித்திருப்பார்களோ?? அவர்களது புதல்வர்கள் என்ன காரணத்தாலோ அவர்களைத் துரத்தி விட்டிருப்பார்களோ??? என்ற பல எண்ணங்கள் என் மனத்தில் தோன்றின.. கடைக்காரனும் இரக்கப்பட்டு இரு இட்லிகளை அம்மூதாட்டிக்குக் கொடுத்தான். நானும் இரண்டில் ஒன்றைத் தனக்கும், மற்றொன்றைத் தன் கணவருக்கும் கொடுப்பார் என எண்ணிக் கொண்டிருந்தேன்.. ஆனால் அவரோ முதியவர் அருகில் வந்து அமர்ந்து கொண்டு தானே இரு இட்லிகளையும் தின்னத் தொடங்கினார். முதியவரோ "பசி.. பசி..." என அரற்ற... "சும்மா கிடயும்யா...." என்ற படி தானே தின்று கொண்டிருந்தார்..
தின்றும் விட்டார்... முதியவர் மெல்ல எழுந்து அமர்ந்து குடத்தின் நீரையாவது குடிக்கலாம் என்று அதைத் தொட்ட பொழுது அவைக்
காலிக்குடங்களாதலால் உருண்டு விழுந்தன... இந்த சமயத்தில் நம் பேருந்தும் அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டது..தனது வாலிப வயதில் தன் மனைவியை எப்படியெல்லாம் நேசித்திருப்பார் அவர்? தினமும் அவருக்கு என்னென்ன இனிப்புகள் வாங்கிக் கொடுத்திருப்பார்? ஆனால் வறுமை... பசி...

இன்று அந்த அன்பு நிறைந்த கணவருக்குக் கொடுக்காமல் தானே தின்னும்படி செய்து விட்டதே... இறைவா இதென்ன கொடுமை என்று அழுது கொண்டே பயணம் செய்தேன்... ஆக வறுமை கொடிது... இந்த உலகில் வறுமை நிறைந்தோருக்கு எல்லாவிடத்தும் இழிவுதான் கிடைக்கின்றது... ஆக உங்கள் வறுமை போக வேண்டுமா?? உங்கள் வறுமையின் பெயரால் இன்னொருவரிடம் சென்று கையேந்தி, அவரால் இழிவுபடுத்தப் படும் நிலை உங்களுக்கு வரவேண்டாம் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றுமானால்.... "நித்தம் நீடு தவம் கல்லாமை கற்ற கயவர் தம்பால் "சொற்களின் விளையாட்டைப் பாருங்கள்..ஒரு முரண்தொடை... தினமும் தவம் செய்யும் செய்யாமல் இருப்பது எப்படி என்று கற்ற கயவர்களிடத்தில்... தவம் செய்யாமல் இருப்பது எப்படி என்றும் கற்பார்களோ??? முரண் வாக்கியத்தை அமைத்துப் பாடலைச் சொற்சுவை மிகுந்ததாக்குகின்றார்.. தவம் செய்வோர் தம்மிடத்து வருவோருக்கு ஈயவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பார்கள்..

மாற்றாரிடத்துச் செல்லும்போது அவர் தருவாரோ தர மாட்டாரோ என்ற எண்ணத்தோடேயே செல்ல வேண்டியுள்ளது.. அவரும் கைவிரித்து, நம்மை இழிவுபடுத்தி விடில், கேவலமான நிலைக்குத் தள்ளப் பட்டு விடுகின்றோம்..எனவே தவமற்ற அல்லது தவம் செய்யக்கூடாது என்ற விதியைக் கற்ற கயவர்களிடத்தில்..."ஒரு காலத்தும் செல்லாமை வைத்த திரிபுரை.." எந்த காலத்திலும் உதவி கேட்டு நான் செல்லும்படியான நிலைக்கு நான் ஆளாகாமல் வைத்த திரிபுர சுந்தரியான அன்னை அபிராமியின்.. "பாதங்கள் சேர்மின்களே "திருப்பாதங்களைச் சென்றடையுங்கள்..அவளைத் தொழுங்கள்..மீண்டும் ஒரு அழகிய இறங்கு வரிசை... வறியவர்களை நோக்கி, உங்கள் வறுமை விலகுவதற்காக அன்னை அபிராமியைத் தஞ்சமடையுங்கள் என்று சொல்வது இப்பாடல்.

முந்தைய பாடல் அவளை எண்ணுவதே பெருந்தவம் என்று சொல்லும் பாடல்.. அதற்கும் முந்தையது... தவமுடையாருக்குக் கிடைக்கும் செல்வங்கள்.. எனவே வறுமையால் வாடுவோர் செல்வத்தில் திளைக்கின்றார்... செல்வம் மிகுதியால் வரும் கேடும், அத்தோடு அருள் இணைந்திருந்தால் அன்னையைத் தொழுதிருந்தால் கிட்டும் பிறப்பு இறப்பற்ற பெருவாழ்வையும் அதற்கும் முந்தைய பாடல்
சொல்கின்றது.. அழகியதோர் இறங்குவரிசை...


No comments:

Post a Comment